நூலக தினம்: நூலகத்தை இயக்கமாக மாற்றிய எஸ்.ஆர். ரங்கநாதன்!

இந்தியாவில் பெருமளவில் நூலக இயக்கம் முறையாக வளரவும்,  நூலக இயல் ஒரு துறையாக உருவாகவும் காரணமாக இருந்தவர் 'இந்திய நூலக தந்தை' எஸ்.ஆர்.ரங்கநாதன். 
எஸ்.ஆர். ரங்கநாதன்
எஸ்.ஆர். ரங்கநாதன்

அச்சு, காட்சி, சமூக ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட இன்றைய உலகில் இவற்றைத் தாண்டி உருப்படியான நூல்களின் வாசிப்பு என்பதே  இளைய தலைமுறையிடம் அபூர்வமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், நூலகத்தை இயக்கமாகவே கண்டவர் எஸ்.ஆர். ரங்கநாதன்.

இந்தியாவில் பெருமளவில் நூலக இயக்கம் முறையாக வளரவும்,  ஒரு துறையாக நூலக இயல் உருவாகவும் காரணமாக இருந்து 'இந்திய நூலகத் தந்தை' என்று எல்லோராலும் பாராட்டப் பெறுபவர் சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய நூலகராக விளங்கியவர் சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்.

இந்திய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளரும்கூட. நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் போற்றப்படுபவர்.

நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இன்று, ஆக. 12, அவருடைய 128-வது பிறந்த நாள். இவர் பிறந்த நாளை இந்தியா முழுவதும் தேசிய நூலக தினமாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்நாட்டில் எங்கோ ஒரு சிற்றூரில் பிறந்து எளிமையாக வாழ்ந்து படிப்படியாக படித்து ஆசிரியராகி,  நூலகர் ஆகி உலகம் முழுவதும் போற்றக் கூடிய வகையில் பல புதுமைகளை புகுத்தி பகுப்புகளை செய்தவர்.  எஸ்.ஆர். ரங்கநாதன் நூலகவியலின் முன்னோடி.

"சோழ நாடு சோறுடைத்து" என்பது பழமொழி தமிழகத்தின் வளமான பகுதி சீர்காழியில் இராமாமிர்த ஐயர் -  சீதாலட்சுமியார் தம்பதிகளின்  முதல் மகனாக 1892-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 -ஆம் தேதி பிறந்தார்.  ரங்கநாதனுக்கு ஆறு வயதானபோது அவருடைய தந்தையார் மறைந்துவிட்டார்.

தந்தையோடு கல்வி போம் என்ற சூழ்நிலை ஏற்படாது இருக்க வேண்டும் என்று கருதிய தாய், ரங்கநாதனை அழைத்துக்கொண்டு சீர்காழியிலிருக்கும் சகோதரர்  வீட்டிற்குச் சென்றார்.  அவர் ஒரு பள்ளி ஆசிரியர். அவர் வீட்டில் இருந்தே ரங்கநாதன் பள்ளிக் கல்வியைத் தொடங்கினார். 1897 முதல் 1908 வரை சீர்காழியில் உள்ள சுப்பிரமணிய முதலியார் இந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் விளங்கிய ரங்கநாதனுக்கு தன் தாய்மாமா  போலவே ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற  ஆர்வம் வந்தது.

அப்போது  அவருடைய உடல் குன்றியிருந்தது, ஆனாலும் மனம் வலிமையாகவே இருந்தது.  ஆம், மூலநோயும் ரத்த சோகையும் இளமையில் அவரை வாட்டியதால் அவரால் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்க முடியாது.  ஆயினும் தன்னுடைய நண்பருடைய உதவியை நாடினார். தன்னுடைய நண்பரை உரக்கச் படிக்கச் சொல்லிக் கேட்டார். இவ்வாறாக எல்லா பாடங்களையும் நன்றாக மனதில் பதிய வைத்தார். 1909-இல் மெட்ரிகுலேஷன் தேர்வில் ரங்கநாதன் வெற்றி பெற்றார்.

அக்காலத்தில் இளமையில்  திருமணம் என்பது மிகவும் இயல்பானதாக இருந்தது. அப்போது ருக்மணி  என்பவரை 1907-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மெட்ரிகுலேஷன் தேர்வு முடிந்தது, அதில் வெற்றி பெற்றார். மேற்கல்வி பெறுவதற்கு பக்கத்தில் வசதி இல்லை. எனவே, தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு 1909-இல் ரங்கநாதன் குடியேறினார்.  மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவர், அக்காலத்தில் இடைநிலைக் கல்வி என்று இரண்டு ஆண்டுகள் இன்டர்மீடியட் படிப்பில் ஆங்கிலம், சமஸ்கிருதம், கணக்கு, இயற்பியல் முதலியன படித்து 1911 ஏப்ரலில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேறினார். மேற்கொண்டு எம்.ஏ. படிப்பதற்கு அப்போதைய அவருடைய குடும்பச் சூழல், வருமானமின்மை காரணமாக  வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.  

1913 ஜூன் மாதம் ஆசிரியர் இராசுவை சந்தித்து வேலையில் சேர வேண்டும் அதற்கான உதவியை நாடினார்.  விளையும் பயிரை முளையிலேயே அறிந்தவர் ஆசிரியர் இராசு.  ரங்கநாதனை வேலைக்கு செல்ல வேண்டாம் எம்.ஏ. படிக்க அறிவுறுத்தி அதற்கான பண உதவிகளைத்  தாம் செய்கிறேன் என்று கண்டிப்புடன் கூறினார். ஆயினும் ஆசிரியருக்கு சிரமத்தை உண்டாக்க அவர் விரும்பவில்லை. ஆனால், ஆசிரியர் கட்டாயப்படுத்தி அவர் படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். கணக்குப் படிக்கும் மாணவர்களுக்குத் தனியாக பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் பணத்தை  செலவுகளுக்கு வழி செய்து கொண்டார்.

வேலைக்குச் செல்லாமல் மேற்கொண்டு படிப்பைத் தொடர வேண்டும் என்று விரும்பிய அந்த ஆசிரியருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பின்னாளில் இங்கிலாந்து  நூலகராக பயிற்சி பெற்று திரும்பிய பிறகு, அதில் கிடைத்த சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து நன்றிக் கடனைச் செலுத்தும் வகையில் ஆசிரியருடைய நினைவாக ராசு அறக்கட்டளை என்ற  ஓர் அறக்கட்டளை நிறுவி ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தார்.

ரங்கநாத சகாப்தம்

வரலாற்றுச் செய்திகள் அனைத்தும் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் சமுதாயத்தில் வளர்ந்ததும் அதன் பயனாக நூல்கள் உருவாகி மனித நாகரிகத்தின் முக்கிய அம்சமாக நடைபெற்றதையும் விவரித்துச் சொல்கின்றன.

ஆனால், இவை அனைத்தும் அரசர்களின் அரண்மனைகளிலும்   கோயில் மடங்களிலும் அடைபட்டுக் கிடந்தனவே தவிர, எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் ஒரு மக்கள் நிறுவனமாக உருவாகவில்லை. சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பாதாள இருட்டு அறைக்குள் கிடந்த நூல் நிலையங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமைக்குரிய ரங்கநாத சகாப்தம் 1924ல் ஆரம்பமாயிற்று.

ஆம், 1924-ஆம் ஆண்டு  சென்னை பல்கலைக்கழக நூலகராக ரங்கநாதன் நியமிக்கப்பட்டார். அது அவரது  வாழ்க்கையில் மட்டுமல்ல, நூலகத் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சொல்லப்போனால் நம் நாட்டுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதற்குமான நூலக மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.

பேராசிரியர் ரங்கநாதன் கணித ஆசிரியர், நூலகத்தில் பணியாற்ற எந்தவித படிப்போ, பயிற்சியோ பெற்றதில்லை. அந்தக் காலத்தில் நூலகர் பயிற்சிக்கு சரியான இடமும் கிடையாது. ரங்கநாதனை நூலகராக நியமித்தபோதே இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் சென்று நூலகப் படிப்பு படிப்பதுடன் அங்குள்ள நூலகங்களில் பயிற்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தனர். அதற்கான செலவுகள் அனைத்தையும் சென்னைப் பல்கலைக் கழகமே ஏற்க முன் வந்தது.

1924 செப்டம்பர் மாதத்தில் ரங்கநாதன் லண்டன் பயணமானார். நூலக பள்ளியில் படித்தபோது அவர் பல்வேறு நூலகங்களுக்கு நேரில் சென்று பணியாற்றி பயிற்சி பெறும் வகையில் பேராசிரியர் வகுப்புகளை மாற்றி அமைத்துக் கொடுத்தனர். எனவே, வாரத்தில் இரண்டு நாள் முழுவதும் வகுப்பறை, படிப்பு, மீதி நாட்களில் நூலகப் பணி. இதுவே ரங்கநாதனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

வகுப்புக்கு சென்றாலே போதும், நூலகங்களில் பயிற்சி பெறுவது கட்டாயம் இல்லை, கடல் கடந்து வந்து காலத்தை வீணாக்க விரும்பாத அவர், வாரத்தில் ஏழு நாட்கள் அவர் கடுமையாக உழைத்தார். பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்பாக தேர்வு பெற்றார். பல்கலைக்கழக நூலகர் பயிற்சிக்கு ரங்கநாதன் சென்றிருந்தாலும், அவருக்கு பயிற்சி அளிக்க எந்த பல்கலைக்கழக நூலகமும் சிறப்பாக இல்லை.

படிக்க வேண்டிய நூலக இயல் புத்தகங்களையும் ஒரே  மாதத்தில் படித்து முடித்துவிட்டார். நூலக இயல் இதழ்களில் வந்த கட்டுரைகளையும் படித்து விடுவார். எனவே, நேரடி பயிற்சியை அப்போது லண்டனில் வளர்ந்து வந்த பொது நூலகத் திட்டத்தின் கீழ் இயங்கிவந்த பொது நூலகங்களில் பயிற்சி பெற அவர் விரும்பினார்.

அங்குள்ள பொது நூலகம் மற்றும் கிளை நூலகம் அனைத்திலும் அவர் சென்று பணியாற்றினார். இதனால், பொது நூலகத் திட்டத்தின் மீது அவருக்கு பெரும் நாட்டம் ஏற்பட்டது. அதேபோலவே சென்னை மாநிலத்திலும் பொது நூலகத் திட்டம் உருவாக்க வேண்டும் என்று அப்போது திட்டமிட்டார்.

பொது நூலகத் திட்டத்தின் மேலிருந்த ஈடுபாட்டினால் அதுதொடர்பாக நடைபெற்ற மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் தவறாமல் கலந்து கொண்டார். ஆண்ட்ரூ கார்னிகி என்ற அமெரிக்க கோடீஸ்வரர் தான் மறைந்தபோது தமக்கிருந்த சொத்துகள் அனைத்தையும் அமெரிக்காவிலும், பிரிட்டிஷ் தீவிலும் பொது நூலகங்கள் அமைப்பதற்கு அர்ப்பணித்தார்.

அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு மேற்குறிப்பிட்ட இரு நாடுகளிலும் பல பொது நூலகங்களும், கிளை நூலகங்களும், கிராமப் பகுதிகளிலும் திறக்கப்பட்டன. கிராமப்புற நூலகங்களின் பணியாற்றும் நூலகருக்கு பயிற்சியளிக்க அவ்வப்போது மாநாடும் கருத்தரங்குகளும் நடைபெற்றன.

ரங்கநாதன் லண்டனில் இருந்தபோது அத்தகைய  கிராமப்புற நூலக வளர்ச்சி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பேராசிரியர் செபர்ஸ் என்பவர் ரங்கநாதனையும் அழைத்துச் சென்றார்.

மாநாட்டிற்கு வந்திருந்த கார்னீகி அறநிலையத்தை சார்ந்த  முக்கியமானவர்களையும், புகழ்பெற்ற நூலகர்களையும் அறிமுகம் செய்து கொண்டதால் பின்னால் அந்த கிளை நூலகங்களுக்கு போனபோது பெரும் வசதியாய் இருந்தது.

தமிழகத்திற்கு திரும்பிய பின் சென்னை பொது நூலகச் சட்டத்தைத் தயாரிப்பதற்கு இந்த அனுபவங்கள் அவருக்கு பெரிதும் பயன்பட்டன.

பல கிளை நூலகங்களுக்குச் சென்று அவர் பணியாற்றியபோது கிடைத்த  அனுபவங்கள் தமிழ்தநாட்டிற்கு வந்ததும் நூலகப் பணிகளை வரையறுக்க உதவியாக இருந்தன. 1925 ஜூன் மாதம் சென்னை பல்கலைக்கழக நூலகத்திற்கென்று தனியாக கட்டடம் அமைக்கும் திட்டத்தை அவரிடம் ஒப்படைத்தது.

கோலன் பகுப்பு முறை

1925 ஆம் வருடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் பல்வேறு கூறுகளை துல்லியமாகச் சொல்லும் சந்கேத குறியீட்டு முறையை அவர் உருவாக்கினார். அதற்கு கோலன் பகுப்பு முறை என்று பெயர்.  ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எந்த சிரமமும் இல்லாமல் மிகத் துல்லியமாக எடுப்பதற்கு இந்த கோலன் பகுப்பு முறை மிகவும் உதவியாக விளங்கியது.

உலகில் பல்வேறு முறைகளினால் நூலகங்களில் நூல்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அவ்வாறு வகைப்படுத்தப்படும் பல்வேறு முறைகளில் டெசிமல் முறையும், கிழக்கத்திய நாடுகளில் டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதனின் கோலன் முறையும் சிறப்பானவை.

தமிழகத்தைச் சார்ந்த இந்தப் பேரறிஞர் செய்த புரட்சி உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாட்டு மக்களால் போற்றப்பட்டு வருகின்றது. அது நம்  நாட்டுக்குப் பெருமை அளிப்பதாகும். டாக்டர் ரங்கநாதன் சுமார் 42 ஆண்டுகளாக நூலகத் துறைக்கும்,  அதன் வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதில் பல்வேறு பயிற்சிகள் செய்து நூலகத் துறையில் பல்வேறு பணி முறைகளை புகுத்தியவர்.

இன்று தமிழகத்தில் மாநில மைய நூலகம் -1, மாவட்ட மைய நூலகம்- 30, கிளை நூலகங்கள்- 1567, நடமாடும் நூலகங்கள்- 12, ஊர்ப்புற நூலகங்கள்- 1492, பகுதி நேர நூலகங்கள்- 653 என மொத்தம் 3,755 நூலகங்கள் உள்ளன.

மனிதர்களுடைய மனங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவது புத்தகங்களே, காந்தி, காரல் மார்க்ஸ், ரூசோ, வால்டேர் போன்றோரின் எழுத்துகள் சமூகத்திலே பெரும் புரட்சியை ஏற்படுத்தின. சில புத்தகங்கள் ஆராய்ச்சிகளுக்கும், அதன் பயனாக பெரும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிநடத்துகின்றன.  சாகாவரம் பெற்ற நூல்கள் எத்தனையோ மனிதர்களின் குணங்களை மாற்றியிருக்கின்றன. இவற்றை மனதில்கொண்டு நூலகங்களின்  சீரான இயக்கத்திற்கு ரங்கநாதன் ஐந்து விதிகளை உருவாக்கினார்

1. புத்தகங்கள் பயன்படுத்துவதற்கு

2. ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகம்

3. ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாசகர்

4. வாசகரின் நேரத்தை பாதுகாத்தல்

5. நூலகம் ஒரு வளரும் அமைப்பு

போன்ற விதிகள் இன்று உலகளாவிய முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. 

1972 செப்டம்பர் 27-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ரங்கநாதன் இந்த உலக வாழ்வை முடித்துக்கொண்டார்.  அன்றைய நாள் சர்வதேச புத்தக வருடமாக அமைந்திருந்தது மிகவும் பொருத்தம்.

ஒரு கைதேர்ந்த சிற்பியின் கற்பனை வளத்தோடும் கைவண்ணம், கலை நயத்தோடும் நூலகத் துறையைச் செதுக்கி உருவாக்கிய மகா சிற்பி எஸ்.ஆர். ரங்கநாதன்.

இவர் நூலக இயக்கத்தின் தந்தை. நூலக இயலுக்கு வடிவமைப்பு வழங்கியவர், நூலகத் துறையில் ஒரு விடிவெள்ளியாய் பிரகாசித்த அவர் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக புத்தகப் பசியை மக்களிடம் தூண்டியவர், இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களிலும் நூலகம் அமைய வேண்டும் என்று அரும்பாடுபட்டவர். அவருடைய பிறந்த நாளை நூலகர் தினமாகக் கொண்டாடுவது மட்டுமின்றி, கடைக்கோடி கிராமம் வரை நூலகப் பயன்பாட்டை மக்களிடம் முழுமையடையச் செய்வோம்.

[கட்டுரையாளர் - நூலகர் மற்றும்

நூலக அறிவியல் துறைத் தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com