மேட்டூர் உபரி நீரை எதிர்பார்க்கும் திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி

மேட்டூர் உபரி நீரை எதிர்பார்க்கும் திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி

மேட்டூர் வெள்ள உபரி நீரை திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதியுடன் இணைக்க வேண்டும் என விவசாயிகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

மேட்டூர் வெள்ள உபரி நீரைத் திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதியுடன் கொண்டுவந்து சேர்த்தால் சேலம் மாவட்டம் செழிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் விவசாயிகள்.

சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி, மஞ்சவாடி கணவாய் வழியாக சேலத்துக்கு வடக்கேயும், வடகிழக்கிலும் பாய்கிறது திருமணிமுத்தாறு. இது காவிரி ஆற்றின் துணை நதி. இது ஒரு வற்றாத ஜீவநதியாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாய்ந்தோடி, வீட்டுக்கும், விவசாயத்துக்கும் தொழிற்சாலைத் தேவைகளுக்கும் 1960 வரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலம் திருமணிமுத்தாறுக்கும் உண்டு. சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூரில் நன்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது திருமணிமுத்தாறு. மேலும் இதை நம்பிப் பல ஏரிகளும்,  குளங்களும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளன.

பொன்னி ஆறு, கன்னிமார் ஓடை, வறட்டாறு, ஏளுர் ஆறு, ராஜவாய்க்கால் ஆகியவை திருமணிமுத்தாற்றின் கிளை ஆறுகளாகும். 1972 இல் இந்திய சர்வே துறை எடுத்த நில அமைப்பு வரைபடத் தரவுகளிலிருந்து சிற்றோடைகள் பலவும் இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. வேகமான நகரமயமாக்கல், மக்கள்தொகைப் பெருக்கம், ஆக்கிரமிப்பு, ரியல் எஸ்டேட் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிற்றோடைகள் வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விட்டன.

பல்வேறு குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிந்து சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் செழிப்பாக இருந்துள்ளன. திருமணிமுத்தாற்றின் படுகையில் கோயில்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனால், அதன் அருகில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளாமல் வறண்டு கிடக்கின்றன. 

இதனால் அங்குள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வெகு ஆழத்துக்குச் சென்றுவிட்டது. விவசாயம் பொய்த்து, விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டன.

திருமணிமுத்தாறு தற்போது மாசுபட்டும், குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் ஆற்றின் வழிப்பாதைகள் விவசாய நிலங்களாகவும், மாநகராட்சி கழிவு நீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் ஆற்றிலிருந்து ஓடிவரும் ஓடைகளில் விடப்பட்டு, வெளியேற்றும் தலமாக மாறிவிட்டது.

ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி - கோதாவரி நதிநீர் திட்டம், சுமார் ரூ. 565 கோடியில் மேட்டூர் வெள்ள உபரி நீரை வறண்ட 100 ஏரிகளில் நிரப்பும் உபரி நீர் திட்டம் என நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு  மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தந்து வருகின்றன.

அந்தவகையில் திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சேலத்தில் வலுத்துள்ளது. குறிப்பாக மேட்டூர் வெள்ள உபரி நீரைக் கொண்டுவந்து வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு, பனமரத்துப்பட்டி ஏரியுடன் சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருமணிமுத்தாறு மேல் வடிநிலம் குறித்து முனைவர் பட்டம் பெற்றவரும், சேலம் அரசுக் கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சி.மணிமொழி கூறியதாவது:

திருமணிமுத்தாறு சேர்வராயன் மலைக்கு வடக்கிலும் கொல்லிமலைக்குக் கிழக்கிலும், காவிரி ஆற்றை தெற்கிலும், கஞ்சமலையை மேற்கிலும் கொண்டு பாய்கிறது. திருமணிமுத்தாற்றின் வடிநிலத்திலுள்ள ஏரிகளைக் கணக்கில் எடுத்து குடிமராமத்துப் பணிகள் செய்தால் மட்டுமே சேலம் மாவட்டம் குடிநீர் தேவையிலும், விவசாயத்திலும் ஓரளவுக்குத் தன்னிறைவு அடையும் ஆக்கிரமித்துள்ள நீர்நிலைகளைத் தவிர்த்து, மற்ற நீர்நிலைகளைப் பராமரித்தாலே இனிவரும் காலங்களில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் புதிய நீர்ப் பாசன முறைகளைக் கொண்டுவர வேண்டும்.

2005இல் எடுத்த பொதுப்பணித்துறை தரவுகளில் இருந்து சேலத்தின் வட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிதமான ஆழத்தில் உள்ளது. அப்பகுதி அதிகமான மழையைப் பெறும் பகுதியாகவும் அடர்வுமிக்க காடுகளைக் கொண்டதாகவும் உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
ஆனால், தென் கிழக்கு மற்றும் தென் மத்தியப் பகுதிகளான ராசிபுரம், சங்ககிரி, கருப்பூர், நாமக்கல், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகு பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.

இப்பகுதிகளில் நீர் மேலாண்மை செய்வது உடனடித் தேவையாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்க  அரசு ஆணையிட வேண்டும். குடியிருப்புகளில் கிணறுகள் இருந்தால்,  அதிலும் மழைநீரைச் சேமிக்கலாம்.

சேலம் மாவட்டத்தில் பிரதான ஏரிகளான கன்னங்குறிச்சி,  பொன்னி ஆறு, வறட்டாறு, வலசையூர், அயோத்தியாபட்டணம், பனமரத்துப்பட்டி, வெண்ணந்தூர், வீரபாண்டி, மல்லசமுத்திரம் என பிரித்து நீர் மேலாண்மையை மேற்கொள்ளலாம்.

திருமணிமுத்தாறு பாய்ந்தோடும் வழிப்பாதையைக் கண்டறிந்து, அதைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி குடிமராமத்துப் பணிகள் செய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. ஆறு பாயும் வழிப் பாதையில் நில ஆக்கிரமிப்பு இருந்தால், அதை உடனே அகற்றி நீர் ஆதாரத்தை மேன்மைப்படுத்திட வேண்டும்.

சேலம் மாநகரில் திருமணிமுத்தாறு ஓடும் பாதை நெடுங்காலமாகவே கழிவுநீர் கலக்கும் கால்வாயாகக் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதிகளில் மாசு ஏற்பட்டு, சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்கப்படுகிறது.எனவே, கால்வாய் ஓடும் கரைப் பகுதிகளில் மூங்கில் மரங்கள், பனைமர வகைகள் ராயல் பாம்ஸ் முதலியவற்றை வளர்த்தால், அம்மரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனால் அப்பகுதி ஓரளவுக்கு தூய்மையடையும் என்றார். 

மேட்டூர் வெள்ள உபரி நீர் பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்படுமா? 

ஒரு காலத்தில் சேலம் மக்களின் குடிநீர் தேவையைப் போக்கிய பனமரத்துப்பட்டி ஏரி தற்போது வறண்டு கருவேலம் மரங்கள் பகுதியாக காட்சி அளிக்கிறது. மேட்டூர் வெள்ள உபரி நீரை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வந்து, சேலம் மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யலாம் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்ட மக்களின் பஞ்சத்தைப் போக்குவதற்காக பனமரத்துப்பட்டி ஏரி கடந்த 1911 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 2,137 ஏக்கர் ஆகும். இதில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக 834.5 ஏக்கர் உள்ளது.

போதமலை, கிடமலை, ஜல்லூத்துமலை, பெருமாள் மலை உள்ளிட்ட மலைப் பகுதியில் இருந்து மழைநீர் செல்லும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீரை பனமரத்துப்பட்டி ஏரிக்குத் திருப்பி விட்டனர்.

ஏரியில் நீர் நிரம்பும் சமயத்தில் ஷட்டர் வழியாக உபரிநீர் மல்லூர் ஏரியினை கடந்து பல்வேறு ஏரிகளில் நிரம்பி திருமணிமுத்தாறுக்கு செல்லும் வழியில் இணையும். இந்த ஏரி சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சேலம் மட்டுமல்லாது ராசிபுரம், மல்லூர் மற்றும் அருகில் பொதுமக்களுக்கும் மூல நீராதாரமாக விளங்கி வந்துள்ளது. இந்த பனமரத்துப்பட்டி ஏரியில் சுமார் 800 கிணறுகள் தோண்டப்பட்டு அதில் தற்போது 144 உள்ளது. குரால்நத்தம் ஊராட்சி மூலம் 3 ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மழை அளவு குறைந்ததாலும் ஏற்கெனவே பணியில் இருந்த நிலையில், சேலம் மாநகரில் அனுமதி பெறாமலே கூடுதலாக 30 தடுப்பணைகள் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் கட்டப்பட்டதால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

நீர்வரத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டு விட்டதால்,  நீர்வரத்தின்றி ஏரி 2009 ஆம் ஆண்டு முதல் வறண்டு காணப்படுகிறது. கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களுடன், தமிழக அரசின் சுற்றுலாத் துறை ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற அடிப்படை அபிவிருத்தி நிதியகத்துடன் சேலம் மாநகராட்சி இணைந்து கடந்த 2010 இல் ரூ. 25 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. கடந்த 2017 இல் சேலம் மாவட்ட ஆட்சியரால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

இதனிடையே,  கடந்த 2019 இல் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், பனமரத்துப்பட்டி ஏரியில் ஆய்வு செய்தார். அப்போது, பனமரத்துப்பட்டி ஏரியில் ரூ.12 கோடியே 99 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏரியின் நீராதாரத்தை மீட்டு சீரமைத்துத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும், புதிய நீர்வழிப்பாதை உருவாக்குதல் வேண்டும்,   தேவையற்ற தடுப்பணைகள் அகற்றுதல் வேண்டும், மேட்டூர் அணையின் உபரி நீர் மற்றும் திருமணிமுத்தாறு செல்லும் உபரி நீர் ஆகியவை கொண்டு வந்து பனமரத்துப்பட்டி நிரப்பி பாதுகாத்தல் வேண்டும், நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, இத்திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றிட வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com