நீர்வழிகள் இல்லாததால் நிரம்பாத குளங்கள்

திருவாரூரில் குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப்பாதைகள் அடைபட்டதால்,  ஆற்றில் தண்ணீர் இருந்தும் குளங்களில் தண்ணீர் நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாளவாய்க்கால் ஆறு
வாளவாய்க்கால் ஆறு

திருவாரூரில் குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகள் அடைபட்டதால்,  ஆற்றில் தண்ணீர் இருந்தும் குளங்களில் தண்ணீர் நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குளங்கள் உருவாக்கப்பட்டன. நகர்ப்புற மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளங்கள்,  அவர்களின் குடிநீர்த் தேவையையும், இதர பயன்பாட்டுத் தேவையையும் பூர்த்தி செய்கின்றன. கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள், கூடுதலாக விவசாயத் தேவையையும் பூர்த்தி செய்கின்றன. ஆறுகளில் தண்ணீர் வரும் காலங்களில், குளங்களில் தண்ணீர் சேமிக்கப்படுவது மட்டுமன்றி, மழை அதிகமாக பெய்யும்போது, அதிகப்படியான நீர் இந்த குளங்களில் சேகரமாகும்.

அதேநேரம் குளங்களில், கொள்ளும் மடை வழியாக தண்ணீர் நிரம்பினால்,  வெள்ளக் காலங்களில் அதிகப்படியான நீர் வெளியே செல்வதற்கு குளங்களில் வடிகால் பாதை அமைக்கப்படும். 

திருவாரூரில், தனியார் மற்றும் அரசுக் குளங்கள் என சுமார் 80 குளங்கள் உள்ளன என பதிவேடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், பெரும்பாலான குளங்கள் காணாமல்போனதுடன், சில குளங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி,  குறுகிவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும், திருவாரூர் நகரப் பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்புவதில்லை. குளத்தில் நேரடியாக விழும் மழைநீரால், சில குளங்களில் தண்ணீர் காணப்படுகிறது.

பொதுவாக, குளங்களுக்கு தண்ணீர் நிரம்ப சில வழிமுறைகளை, குளங்களை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் கடைப்பிடிப்பது வழக்கம். முதன்முதலில் ஆற்றில் தண்ணீர் வரும்போது, குப்பை உள்ளிட்ட பொருள்களை வாரிச்சுருட்டி வரும் என்பதால், தண்ணீர் வந்தபின் சில தினங்களுக்குப் பிறகே குளங்களுக்குத் தண்ணீரை அனுப்புவர். அதன்படி, ஆற்றில் முதல்முறை வரும் தண்ணீரை குளங்களுக்கு விடாமல், அடுத்த முறை வரும் தண்ணீரைக் கொண்டு குளங்களை நிரப்புவர். பொதுவாக, குளங்கள் நிரம்புவதன் மூலம், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, குடிநீர்த் தேவையும் பூர்த்தியாகும்.

ஆனால், திருவாரூர் நகரப் பகுதியில் மழைக்காலம், வெயில் காலம் என எந்தக் காலத்திலுமே எவ்வித குளங்களும் நிரம்பாமல், வெறுமனே கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம், குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகள் (வாய்க்கால்கள்) அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாலும், அவை தூர்வாரப்படாததாலும், குளங்களுக்குத் தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.

திருவாரூர் மையப் பகுதியில் உள்ளது குளுந்தான்குளம். தொடக்கத்தில் சுமார் 13 ஏக்கரில் இருந்ததாகக் கூறப்படும் இந்த குளம் தற்போது, சில ஏக்கர் அளவுக்கு குறுகிவிட்டது. ஓடம்போக்கி ஆற்றிலிருந்து, சிறிய வாய்க்கால் பிரிந்து அழகிரி நகர், பனகல் சாலை வழியாக இந்த குளத்துக்கு வருகிறது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததாலும், பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாலும், இந்த குளம் பல ஆண்டுகளாகவே தண்ணீர் இல்லாத நிலையிலேயே காணப்படுகிறது.

இதேபோல், நேதாஜி சாலையில் உள்ள பஜனை மடத் தெரு சந்தைவெளிக்குளம். மிகப் பிரசித்தி பெற்ற இந்த குளக்கரையிலிருந்து,  மருதப்பட்டினம் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, சுவாமி வீதியுலா, காவடி உள்ளிட்டவை செல்வது கடந்த 100 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த படித்துறையானது, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு அசைவ உணவகமாக செயல்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற குளம், தனது பாரம்பரிய வழக்கங்களை இழந்து வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமன்றி, ஐநூற்றுப்பிள்ளையார் குளம், ஆத்தா குளம், மருதப்பட்டினம் குளம், கொடிக்கால்பாளையம் குளம் என பிரசித்தி பெற்ற பல்வேறு குளங்கள் தண்ணீர் இல்லாமல், காட்சிப்பொருளாகவே உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி இயக்குநர் சி. செல்வக்குமார் கூறியது:

திருவாரூரில் நகராட்சிக் கட்டுப்பாட்டில் 52 குளங்கள் இருந்ததாகப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது 30-லிருந்து 40 வரையிலான குளங்களே உள்ளன. அதுவும், பயன்பாட்டில் இல்லாத நிலையில் காணப்படுகின்றன. அதில், 10-க்கும் மேற்பட்ட குளங்கள் முழுவதும் காணாமல்போய்விட்டன.  20-க்கும் மேற்பட்ட குளங்கள் பாதியளவு காணாமல்போய்விட்டன. நகராட்சி தரப்பில் சுமார் 17 குளங்கள் வரை தூர்வாரியதாகத் தெரிவிக்கின்றனர். தூர்வாரப்பட்ட குளங்களும், குளம் என்ன அளவில் இருந்ததோ அந்த அளவை கணக்கில் எடுத்து தூர்வாரவில்லை. இதனால், ஆக்கிரமிப்புக்குள்ளான குளங்களின் பகுதிகள் ஏதும் அகற்றறப்படாமலேயே தூர்வாரப்பட்டுள்ளன. இதேபோல், இந்த குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்கள் ஏதும் தூர்வாரப்படவில்லை.

நுகர்வோர் அமைப்பு சார்பில் இதுகுறித்து நகராட்சியில் கேட்டபோது,  குளங்கள் மட்டுமே நகராட்சி கட்டுப்பாட்டில் வருவதாகவும், வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வருவதாகவும் தெரிவித்தனர். வாய்க்கால்களைத் தூர்வாராமல் வெறும் குளங்களை தூர்வாரி என்ன பயன்?

தற்போது, தண்ணீர் இல்லாமல் குளங்கள் அனைத்தும் வீணாகக் கிடக்கின்றன. திருவாரூர் நகரத்தில் உள்ள குளங்கள் அனைத்துமே தண்ணீர் நிரம்பிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. திருவாரூர் அருகே தைக்கால் பகுதியிலிருந்து வடிகாலானது, கடுவையாற்றுக்குச் செல்லும். திருவாரூரின் ஒரு பகுதி முழுவதும், இதன்மூலம் பாதுகாக்கப்படும். ஆனால், இந்த வடிகால் முறையாக பராமரிக்கப்படாததால், மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார்.

இதுகுறித்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் வீ. தர்மதாஸ் கூறியதாவது; 

வறட்சியைத் தீர்க்கவும், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் திருவாரூர் நகர்ப் பகுதிகளில் ஏராளமான குளங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே முறையான பராமரிப்பு இல்லாததால், பாழாகி கிடக்கின்றன. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போதும், கோடை காலத்திலும் மட்டுமே குளங்கள் விவாதப்பொருளாக உலா வருகின்றன. மற்ற நேரங்களில், யாரும் இதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. திருவாரூரில் மிகுதியாக இருந்த குளங்கள், தற்போது குறைந்து விட்டன. பயன்பாட்டில் உள்ள குளங்கள் என்று கணக்கிட்டால், எதுவுமில்லை. பெரும்பாலான குளங்கள் சாக்கடை நீரால் நிரம்பி வருகின்றன. இதற்குக் காரணம், குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களை தூர்வாராததே. புதைச் சாக்கடையிலிருந்து பெரும்பாலான நேரங்களில் கழிவுநீர் வெளியாகி குளங்களுக்குச் செல்கின்றன. வாய்க்கால் தூர்வாரப்படாததால், இந்த கழிவுநீர் அனைத்தும் குளங்களில் சேகரமாகி,  கழிவுநீர் குளங்களாக மாறி வருகின்றன.

குளங்களை திரும்பவும் பயன்பாட்டில், கொண்டுவர வேண்டுமென்றால் கொள்ளும் மடைகளையும், வடிகால்களையும் தூர்வாருவது அவசியம். எனவே, குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில், வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காட்சிப் பொருளாக மாறி வரும் குளங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு தருவித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, மழைக் காலங்களில் தண்ணீரால் மக்கள் படும் துன்பங்கள் குறையும் என்பதால்,  நீர்வழிப்பாதைகளை சீரமைத்து, குளங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com