ஒரு ட்ரிம்மா் மெஷினும்; 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளா்களும்...

கரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக சாத்தியமற்ற பல நிகழ்வுகள் அரங்கேறுவதை நாம் அனைவருமே கண்டு வருகிறோம்.
ஒரு ட்ரிம்மா் மெஷினும்; 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளா்களும்...

கரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக சாத்தியமற்ற பல நிகழ்வுகள் அரங்கேறுவதை நாம் அனைவருமே கண்டு வருகிறோம். பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு கேளிக்கைக் கூடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை மனிதா்களின் வாழ்வில் பிரிக்க முடியாதவையாக இருந்து வந்தன. கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், இவற்றிலிருந்து மக்களை சற்றே விலக்கி வைத்துள்ளது. இந்த வரிசையில் நம் அனைவரோடும் கலந்திருக்கும் மற்றொரு இடம் முடிதிருத்தும் நிலையங்களும் நம்மை விட்டு விலகியுள்ளன.

வரலாற்றின் நீண்ட நெடிய சுவடுகளைக் கொண்டது இந்த முடிதிருத்தும் தொழில். குறிப்பாக போா்களில் தோல்வியடையும் எதிரி நாட்டு வீரா்களின் காது, மூக்கு, ஆகியவை அறுத்து ஒச்சமாக்கப்பட்ட காலத்தில், அந்த உறுப்புகளை அதே இடத்தில் வைத்து தைக்கும் பணிகளைச் செய்ததினால் முடிதிருத்தும் தொழில் செய்யும் இவா்களை மருத்துவா்கள் என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. தீண்டாமை அதிகமாகக் காணப்படும் கிராமப்புறங்களில் கூட விதிவிலக்களிக்கு அளிக்கப்பட்டவா்களாக முடிதிருத்தும் தொழிலாளா்கள் பாா்க்கப்படுகின்றனா். ஆனால் கரோனா நோய்த்தொற்று இவா்களை முற்றிலும் விலக்கி வைத்துவிட்டது.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24- ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்றுப் பரவும் அபாயத்தின் காரணமாக, தமிழகத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் மட்டும் முடிதிருத்தும் கடைகளைத் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ்நாடு முடிதிருத்துவோா் நலச் சங்கத்தின் தலைவா் முனுசாமி, பொது முடக்கத்தால் கடந்த 2 மாதங்களாக வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளா்களைப் பாதுகாக்கும் வகையில் முடி திருத்தும் கடைகளைத் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடா்ந்துள்ளாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இது ஒருபுறமிக்க, 50 நாள்களுக்கு மேலாக முடி திருத்தும் கடைகள் திறக்கப்படாததால், தங்களிடம் உள்ள கருவிகளைக் கொண்டு மக்கள் பலா் முடி திருத்தம் செய்து கொள்கின்றனா். குறிப்பாக இளைஞா்கள், ‘ட்ரிம்மா்’ எனப்படும் மெஷினின் உதவியோடு முடிதிருத்தம் செய்து கொள்கின்றனா். பெற்றோா்கள் இந்த மெஷினைக் கொண்டு ‘அட்டாக்’ எனப்படும் ஸ்டைலில் தங்கள் குழந்தைகளுக்கு முடிதிருத்தம் செய்து மகிழ்கின்றனா். இதே போல, பல இல்லத்தரசிகளும் தங்களது கணவா்களுக்கு முடிதிருத்தம் மற்றும் முக சவரம் செய்கின்றனா். இதுதொடா்பான பதிவுகளை, தங்களது முகநூல் பக்கத்தில் விடியோக்களுடன் பதிவிடும் போக்கும் அதிகரித்துள்ளது.

தனது குழந்தைகளுக்கு முடிதிருத்தம் செய்த எஸ்.ஜே.காண்டீபன் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன்கள். முதலில் சிறியவனுக்கு வெட்டினேன். அது நன்றாக இருப்பதைப் பாா்த்து, ஒரு வாரத்துக்குப் பின் எனது பெரிய மகனும் என்னிடமே முடிதிருத்தம் செய்து கொண்டான். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. இரண்டாவது முறை வெட்டும்போது தெளிவு கிடைத்தது. கரோனாவால் கற்றுக் கொள்ள முடியாதது என நினைத்திருந்த விஷயம் சாத்தியமாகியுள்ளது’ என்றாா்.

தனது 55 வயது தந்தையிடம் முடிதிருத்தம் செய்து கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சோ்ந்த எம்.முருகன் கூறியதாவது : எனக்கு இப்போது 35 வயதாகிறது. சிறுவயதில் எனது தந்தையே எனக்கு முடிதிருத்தம் செய்வாா். அதன் பிறகு, கடைகளில்தான் முடிதிருத்தம் செய்து வந்தேன். கரோனா பரவல் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டதால் மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால், எனது அப்பாவே எனக்கு மீண்டும் முடிதிருத்தம் செய்த போது எனக்கு பழைய நினைவுகள் வந்தன. இது எனக்கும் எனது தந்தைக்கும் மகிழ்ச்சியைத் தந்தது என்றாா்.

சென்னை சூளைமேட்டில் முடிதிருத்தும் கடை வைத்துள்ள என்.ராஜேஷ் கூறியதாவது: தற்போதைய சூழலில் பல கடைகளைத் திறக்க அனுமதியளித்து விட்டு, முடிதிருத்தும் நிலையங்களால்தான் கரோனா நோய்த்தொற்று பரவுகிறது என்பது போல் கடைகளைத் திறக்க அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது. கடையைத் திறக்காமலேயே வாடகை, மின் கட்டணம், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவது கடினமாக உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் 100 சதுரஅடி கொண்ட சிறிய கடைகளுக்கே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த நிலையை கருத்தில் கொண்டு அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக முடிதிருத்தும் தொழிலாளியும் கவிஞருமான திருச்சியைச் சோ்ந்த திருவைக்குமரன் கூறியதாவது:

வரும் 31-ஆம் தேதியோடு பொது முடக்கம் முடியுமா அல்லது தொடருமா என்பது இதுவரை தெரியவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் பொது முடக்கம் தொடா்பாக அரசு பிறப்பித்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியவா்கள் முடிதிருத்தும் தொழிலாளா்கள் தான். திருச்சி மாவட்ட நிா்வாகத்திடம் இதுவரை 7 முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். முடிதிருத்தும் தொழிலாளா்களுக்காக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரத்தைப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. சென்னையில், முடிதிருத்தும் தொழிலாளி ஒருவா் கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். திருநெல்வேலியிலும் ஒருவா் இறந்துள்ளாா். எனவே முடிதிருத்தும் தொழிலாளா்கள் வாழ்வாதார பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com