புற்றுநோயை வெற்றி கொண்ட மோகனா - நேரடி சாட்சியம்

புற்று நோய் என்பது என்னமோ மனுஷனுக்கு மட்டும்தான் வரும், மற்ற விலங்குகளுக்கு வராது என்பதல்ல, எல்லா உயிரினங்களுக்கும் புற்றுநோய் வரும்.
பேரா. சோ. மோகனா
பேரா. சோ. மோகனா

இந்த அழகான உலகைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள்தான் நாம், ஒருநாள் அனைவரும் திரும்பி செல்லத்தான் போகிறோம், ஆனால், தேதி மட்டும் ரகசியம்!

இன்று 22.09.2020 உலக ரோஸ் நாள். 'அஸ்கின் ட்யூமர்' (Askin's Tumour) என்ற அரிதான இரத்த புற்றுநோயால் உயிர்ப்பலியான, கனடா நாட்டின் 12 வயதுப்  பெண் குழந்தை மெலிண்டா ரோஸ் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் மறைந்த செப்டம்பர் 22 ஆம் நாள், புற்றுநோயுடன் போராடும் மனித உயிர்களுக்கு, புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையும், மகிழ்வும் அளிக்கக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தை இன்னும் இரு வாரமே உயிர் பிழைப்பார் என்ற போதும் அவர் தைரியத்தைக் கைவிடாமல், இறுதிவரை போராடினார். அவருக்கு நோய் இருந்து மருத்துவமனைக்கு சென்றபோதும், அவரைச் சுற்றியுள்ள மற்ற புற்றுநோயாளிகளுக்குக் கவிதைகளையும், கடிதங்களையும் அனுப்பினார். மிக மிக ஆச்சரியப்படும் வகையில் அவர்களின் உந்துசக்தியாக இருந்தார். அவரின் நினைவாகவே உலக ரோஸ் நாள்.

மேலும், ரோஜா மலர் என்பது, அன்பு, கருத்தாக்கம் மற்றும் மென்மை என்பதன் குறியீடாக உள்ளது. புற்றுநோயாளிகளுக்கு மெலிண்டாவின் கடிதம் மற்றும் கட்டுரைகள் வாழ்வதற்கான அதீதமான நம்பிக்கையையும், உறுதியையும் தந்தன. எனவே, புற்றுநோயுடன்  போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த நாள் மகிழ்வைத் தரட்டும் என்பதற்காக உலக ரோஸ் தினம், மெலிண்டா ரோஸுக்காக அனுசரிக்கப்படுகிறது.

மோகனாவாகிய நானும் ஒரு புற்றுநோயாளிதான். நான் புற்றுநோயிலிருந்து மீண்டவள். 

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2010, ஆகஸ்ட் 25 ஆம் நாள் மார்பகப் புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன். அதன்பின்னர் கீமோதெரபி எனப்படும் வேதிசிகிச்சை 6 மாதங்களுக்குத் தரப்பட்டது. கீமோதெரபியால் மறதி  ஏற்படும். உடலிலிருந்து கால்சியம் கரைந்து போகும். அதன் பின்னரும்கூட இன்று என் உடல் இரும்புபோல உறுதியாகப் புற்றுநோய்க்கு முன்னர் இருந்தததைவிட பல மடங்கு பலத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கிறது என்றால் யாரும் நம்பமாட்டீர்கள்.

நான் 2 கி.மீ. ஜாக்கிங் செய்கிறேன். தினமும் நடக்கிறேன். 'தாய்ச்சி' என்ற சீனத் தற்காப்புக் கலையை செய்கிறேன். நல்ல நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்வாக இருக்கிறேன். மேலும், இதுவரை 11 புற்றுநோயாளிகளைச் சரியான நேரத்தில் சரியான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தகவல் தந்து அங்கு பணிபுரியும் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் காப்பாற்றியும் இருக்கிறேன். புற்றுநோய் நண்பர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் உதவியும் செய்கிறேன். 

இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? 

என் மன உறுதியும், தொடர்ந்த உடற்பயிற்சியும், எடுத்துக்கொள்ளும் மற்றும் எடுத்துக்கொண்ட மருந்துகளும்தான். உலகிலேயே மோசமான நோய் ஒன்று உண்டென்றால் அதுதான் புற்றுநோய். புற்றுநோய் தொற்று நோயல்ல.

புற்றுநோய் என்றால் என்ன? யாருக்காவது அது வந்த அனுபவம் இருக்கிறதா? அதைப் பற்றித் தெரியுமா? என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டால், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று எல்லோரும் ஓடிவிடுவீர்கள். அவ்வளவு பயம் புற்றுநோய் பற்றி எண்ணக்கூட.

ஒரு சின்ன கேள்வி? புற்றுநோய் உங்களிடத்தில் வருவது என்று அது முடிவு செய்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அது என்ன உங்களைக் கேட்டுக் கொண்டா உங்களிடம் குடியிருக்க, அனுமதி பெற்ற பின்னர்தான் வர வேண்டுமா? அப்படி ஏதும் சட்டதிட்டம் உண்டா? அப்படி எல்லாம் இல்லை அதது இயல்பாய் நடக்கும்.  இந்த உடம்பில், புற்றுநோய் ஒரு நோய் என்றால் அது வராமல் இருக்க, அதற்கான வைரஸ்/பாக்டீரியா  அண்டாமல் இருக்க ஏற்பாடு செய்யலாம். தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால்...

ஆனால், புற்றுநோய் வராதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். நம் வீட்டைச் சுற்றி ஒரு பெரியகோட்டை தடுப்புச் சுவர் எழுப்பி விடலாமா? புற்றுநோய் நம்மைத் தாக்காமல் இருக்க? அது உள்ளே நுழையாமல் இருக்க, ஒரு பெரிய அகழி தோண்டலாமா? எதனைக் கொண்டும் புற்று நோயைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். அது சரி, கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் மக்களாவது, புற்றுநோய்த் தாக்கத்திலிருந்து தப்பிக்கிறார்களா? மீட்கப் படுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

நீ சாமி கும்பிட்டாலும் சரி, கும்பிடாட்டியும் சரி, நீ பணக்காரனாக இருந்தாலும் சரி, ஓட்டாண்டியா இருந்தாலும் சரி, நீ படிச்சவனா இருந்தாலும் சரி, படிக்காட்டியும் சரி, எனக்கு எதுவுமே கவலை இல்லப்பா, நான் பாட்டுக்கு எனக்குப் புடிச்சா வருவேன், முடிஞ்சா நீ என்ன விரட்டிப் பாரு என்று நம்மிடம் சவால் விடுகிறது புற்றுநோய்.

சவாலைச் சந்திப்போமா, முழுத் துணிவுடன், தைரியத்துடன், பின் மருத்துவர் மற்றும் மருந்துகளின் உதவியுடன், அப்புறம்தான், அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, சுற்றத்தினர் வருகிறார்கள் துணைக்கு/காப்பாற்ற.. என்றும் உங்களின் எந்த நோயாக இருந்தாலும் முதல் மருந்து/சிகிச்சை என்பது அவரவரின் துணிவுதான்; நெஞ்சுரம்தான்; தன்னம்பிக்கைதான்.. அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். இதனை முதலில் நன்கு தெரிந்துகொள்ளுங்கள். 

புற்றுநோய் வந்துவிட்டால் என்ற எண்ணம்கூட நினைக்கவே பயமாக இருக்கிறது. வாய் அதை உச்சரிக்கக்கூட அஞ்சுகிறது. இதுதான் நிதர்சனம். எந்த நோய் வந்தாலும் மனிதர்கள் சொல்வார்கள். சர்க்கரை / நீரிழிவு வியாதி, இதய நோய் வந்தால் பெருமையாகக்கூட  மக்கள் சொல்வார்கள். ஆனால், புற்றுநோய் வந்தால் அதை யாரிடமும் சொல்லவே மாட்டார்கள். கூடியவரை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அதனை வெளியே சொல்வதை அவமானமாகவே எண்ணுகின்றனர். அதுமட்டுமல்ல புற்றுநோய்  வருவது என்பது முன்வினைப் பயன். கடவுளின் சாபம் என்றெல்லாம் எண்ணுகிறார்கள். அப்படி ஏதும் இல்லை. இதுவும் ஒரு வகை நோய்தான். ஆனால், இந்நோய் மரபணுவையும்  சிதைத்துவிடுகிறது. புற்றுநோய் என்பது பல நோய்களின் கூட்டு என்றுகூட சொல்லலாம். 

புற்றுநோய்.. ஒரு நோயே அல்ல.. வளர்ச்சி நிலை!

புற்றுநோய் என்பது ஒரு நோயே அல்ல. அது செல்களின் அதீத வளர்ச்சி. பொதுவாக அனைத்து உயிரிகளின் உடலும், பல ஆயிரக்கணக்கான செல்களால் ஆனவை. நம் உடலில் சுமாராக 10 டிரில்லியன் செல்கள் உள்ளன.  ஒன்றின் பின்னால் 12 சுழியன்கள்/பூஜ்யங்கள் போட்டால் அது ஒரு டிரில்லியன். ஆச்சரியம்தான். அது போகட்டும். உடலில் எத்தனை வகை செல்கள் உள்ளன,  நமது உடம்பில் சுமார் 200 வகை செல்கள் உள்ளன.

செல்களுக்கும் வாழ்நாள்

மனிதனுக்கு வாழ்நாள் இருப்பது போலவே, உடலில் உள்ள   ஒவ்வொரு செல்லுக்கும் வாழ்நாள் உண்டு. அதுமட்டுமல்ல, உலகில் அனைத்து உயிர்களுக்கும் இது பொதுவானது. ஆனால், அவை மாறுபட்ட காலத்தவை. பொதுவாக உடலில் இருக்கும் அனைத்து செல்களும் நாம் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை வளர்ந்து வளர்ந்து இறந்து போகின்றன, புதிது புதிதாக செல்கள் உருவாகின்றன. ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு குறிப்பிட்ட வாழ்நாள் உண்டு. எனவே, அனைத்து செல்லும் ஒரு குறிப்பிட்ட காலகதியில், வரைமுறைக்கு உள்பட்டே உருவாகின்றன; வளருகின்றன; செயல்படுகின்றன; இறுதியில் அழிந்தும் போகின்றன.

மனித உடலிலுள்ள செல்களில் ஒருசில தினங்களிலிருந்து, 30 -50 ஆண்டுகள் என வாழ்நாள் உள்ள செல்கள் உண்டு. மிகக் குறைந்த ஆயுள் உள்ள செல், வயிற்றின் உட்பகுதியிலுள்ள எபிதிலிய செல்கள்தான். இவற்றின் ஆயுள்  2-3 நாள்கள்தான். அதேபோல அதிகபட்ச ஆயுள் உள்ள செல்களைக் கொண்டவர் நம் புத்திசாலி மூளையார்தான், தன்னிடத்தே தக்க வைத்துள்ளார். மூளையிலுள்ள செல்கள்தான் அதிக வாழ்நாள் உள்ளவை.

இவை நாம் பிறந்ததிலிருந்து உடலில் உயிர் இருக்கும் வரை இறப்பதில்லை. அப்படி ஏதேனும் இவை சேதப்படுத்தப்பட்டால், அவ்வளவுதான். மூளையிலுள்ள செல்களின் இழப்பை/சேதத்தை சரிசெய்யவே முடியாது. இவற்றில் ரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள்: 120  நாட்கள் /4 மாதம், வெள்ளையணுக்கள்: 10 மணி நேரம்-3 தினங்கள்; விந்தணு செல்கள்: 2- 3 தினங்கள்; சிறுகுடல் செல்கள்: ஒரு வாரம்; ரத்தத்  தட்டுகள்: 100 தினங்கள்; தோலின் செல்கள்: 2-4 வாரங்கள்; கணைய செல்கள்: ஓராண்டுக்கும் மேல்; எலும்பு செல்களின் வாழ்நாள் 25-30 ஆண்டுகள்; நுரையீரல் செல்கள் சில ஆண்டுகள். இந்த செல்களின் வாழ்நாளை மருந்துகள் மூலம் நீட்டிக்க முடியும் என்றும் அறிவியல் நிரூபணம் செய்துள்ளது.

செல்களின் வளர்ச்சியும் புற்றின்  உதயமும்!

செல்களின் வளர்ச்சி என்பது அதன் மரபணுவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அதன் மரபணுவிலேயே ஒரு கட்டுப்பாட்டு வேதிப்பொருள் உண்டு. சில சமயம், இந்த வேதிப்பொருள்களில் ஏதோ ஒரு காரணத்தால் பிரச்னை ஏற்பட்டு, அது சரிவர இயங்காமல் போவதும் உண்டு அல்லது ஏதோ ஒரு காரணத்தால் அது எந்த செயல்பாட்டுக்கும் கட்டுப்படாமல், வேகமாக வளர்ந்துகொண்டே போவதும் உண்டு. இப்படி ஒரு செல் அதன் கட்டுத்தளையை மீறித் தன் கால்போன போக்கிலே ஓடுகிறது என்று கூறலாமா? இப்படி இஷ்டத்துக்கு  வளர்ந்து கொண்டே போனால், அதற்கு நாம் எப்படி சாப்பாடு போட்டுக் கட்டுப்படியாவது?

இப்படி வளரும் செல் என்ன செய்கிறது என்றால், இது மற்ற செல்களுக்கு செல்லும் சாப்பாட்டை வழி மறித்து கொள்ளையடித்துத்  தானே கபளீகரம் செய்துவிடுகிறது. இதுதான் புற்றுநோயில் நடக்கும் விஷயம். இதனால் மற்ற செல்களுக்கு கிடைக்க வேண்டிய போஷாக்கு, சாப்பாடு கிடைக்காமல்/குறைவாக கிடைப்பதால் உடலின் மற்ற செல்கள் சோர்ந்து போகும். அதனால் உடலுக்கு பல பிரச்சினைகள் வரும். அவையே, புற்றுநோய் வந்ததா என்பதை அறியும் குறியீடுகள் / அறிகுறிகள் / அதன் மூலம்தான் இப்படி ஓர் அநியாயம் நம் உடலுக்குள் நடக்கிறது என்று நாம் அறிந்து அரக்கப்பறக்க மருத்துவரிடம் ஓடி, என்னடா, இந்த மாய உடம்புக்குள் நடக்கிறது என உடம்பைப் பற்றி நாம் கொஞ்சம் கவலைப்படுகிறோம். பார்க்கிறோம். இப்படி வழிப்பறி செய்து, தான் மட்டுமே வளரும் செல்களின் தொகுப்புதான் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு செல்லின் கட்டுப்பாடற்ற அதீத வளர்ச்சி நிலையைப் புற்றுநோய் என்று அழைக்கிறோம். அதற்கு பழக்கமே இல்லாத, புழங்கியே பார்த்திராத பல இடங்களுக்கும், யாரையும் கேட்காமல், யாருடைய அனுமதியையும் பெறாமல், அது தனிக்காட்டு ராஜாவாக தான் விரும்பிய இடங்களில் போய் உட்கார்ந்து வசிக்கிறது. இதுதான் அத்துமீறி ஓர் இடத்தில் நுழைதல் என்பதாகும். 

புற்று பற்றிய மருத்துவ ரீதியான ஆய்வு!

புற்றுநோய் என்பதைப் பற்றி மருத்துவர்களும், அறிவியலாளர்களும் சொல்லும் கதையே தனி. புற்றுநோய் என்பது ஒரு நோயல்ல. பல நோய்களின் தொகுப்பு என்கின்றனர். நமக்கு ஒரு நோய் என்றாலே வயிற்றைக் கலக்கி, இனிமேல் வாழ்வோமா, இல்லையா என்று கதிகலங்கி இருப்போம். இதில் பல நோய்கள் தொகுப்பு என்றால் வாழவே முடியாதா என்கிறீர்களா? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நமக்கு அது ஒரு நோயாகத் தெரியும். விஞ்ஞான கண்களுக்கு அது பல நோய். இருந்துவிட்டுப் போகட்டும்.

கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி உள்ள அசாதாரண செல்களின் தொகுப்பு தான்  புற்றுநோய் என்பது. அது நம் உடம்பில் எந்த இடத்தில் வேண்டுமானாலும்  வரலாம். இவற்றை புற்றுநோய் செல்கள், மருத்துவ ரீதியாக மாலிக்னன்ட் செல்கள் (malignant cells) செல்கள் என்றும், கழலைக்கட்டி செல்கள் (tumor cells), புதிய வகை செல் திரவம் உள்ள செல்கள் என்றெல்லாம் பல பல பெர்யர்களில் அழைக்கப்பட்டாலும், இதன் பொதுவான நமக்குத் தெரிந்த பெயர் புற்றுநோய்தான்.

ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், இதைக் கிராமங்களில் இராஜ பிளவை என்றெல்லாம் பட்டப்பெயரிட்டு அழைத்தனர். பின்னர் அந்த செல்கள் எந்த இடத்தில் இருக்கிறதோ அதன் தன்மை, இருக்கும் நிலை, இடத்திற்கேற்ப அதற்கான சிறப்புப் பெயர்களும் அறிவியலாளர்களால் சூட்டப்பட்டது. 

புற்று நோயின் ஆதிக்கம்.. அனைத்து உயிர்களிலும்!

புற்றுநோய் என்பது என்னமோ மனுஷனுக்கு மட்டும்தான் வரும், மற்ற விலங்குகளுக்கு வராது என்பதல்ல, எல்லா உயிரினங்களுக்கும் புற்றுநோய் வரும். எல்லாத்துக்கும் ஒரே சட்டம்தான், ஒரே விதிமுறைதான். எப்பல்லாம், செல்கள் தங்களோட கட்டுப்பாட்டை இழந்து இஷ்டத்துக்கு பொதபொதன்னு வளருதோ, அதெல்லாம் புற்றுதான். இதிலென்ன சந்தேகம். உடல் வளர்ச்சியில் பொதுவான செல் பிரிதல் என்பது இரண்டிரண்டு செல்களாகப் பிரியும். புற்றுநோய் செல்கள் கவுண்டமணி சொல்வது போல குண்டக்க மண்டக்க பிரியும். எந்த கட்டுப்பாட்டுக்குள்ளேயும் இருக்காது. அது மட்டுமில்லாம அது பாட்டுக்கு உடம்பிலே கண்ட இடத்துக்கும் நுழைஞ்சிடும்.

அப்புறமா,  அதான் நாம் ஊருக்குப் போக பஸ் ரயில் பிடிச்சி வேற ஊருக்குப் போற மாதிரி, இந்த புத்து நோயும், அது உருவான இடத்திலிருந்து பிரிஞ்சி, இரத்த குழாய் வழியே பயணம் பண்ணி, வேற வேற இடத்துக்குப் போயி உட்காரும்.. அப்பத்தான் பெரிய ரோதனையே! அந்த இடத்திலேயாவது அது வாலைச் சுருட்டி வச்சுகிட்டு பேசாம இருக்குமான்னா இருக்காது. அங்கியும் தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடும். புற்றுநோய் செல் துண்டு ஒண்ணு போயி, ஒரு இடத்திலே ஒக்காந்துதுன்னா, அந்த இடத்திலேயும் அங்க இருக்குற செல்களைத் தன் வசப்படுத்தி தன்னை மாதிரியே சொல் பேச்சு கேட்காதவர்களாக மாத்திடும். அங்கயும் இதேபோல அந்த செல்கள் கட்டுப்பாடின்றி வெகு வேகமாக வளரும். அந்த நிலை கொஞ்சம் மோசமானதுதான். இந்த நிலையை மெட்டாஸ்டெசிஸ் (metastasis) என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

இதுதான் புற்றுநோய் செல்களின் அசாத்திய திறமை. இதுல நம்ம உடம்பிலே எத்தனை வகை புற்றுநோய் இருக்கு தெரியுமா? கொஞ்ச நஞ்சமல்ல, சுமார் 200 வகை புற்றுநோய்இருக்காம். இதில் இவ்வளவு வகையா? இப்ப மட்டும் இல்லே பழங்காலத்திலும் முன்பும்கூட புற்றுநோய் இருந்தது என்பது அறிவியல் மூலம் தெரியவந்துள்ளது. சுமார் 1.6 மில்லியன் (1,600,000) ஆண்டுகள் ஆன புற்றுநோய் பாதிப்புள்ள மனித எலும்பை, அதுபோலவே பழங்கால மீனிலும் புற்றுநோய் உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். 

உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4 ஆம் தேதியையொட்டி உலக சுகாதார அமைப்பு (WHO) இரண்டு உலகளாவிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. சர்வதேச புற்றுநோய்க் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் (யு.ஐ.சி.சி.) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நாள், புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய நோய்களின் அநீதியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பாகும். 

10 இந்தியர்களில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், 15 பேரில் ஒருவர் இந்த நோயால் இறந்துவிடுவார் என்றும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 1.16 மில்லியன் புதிய புற்றுநோய்கள் பதிவு செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் 7,84,800 பேர் இறக்கின்றனர். இந்த அறிக்கையின்படி, ஆண்களில் 5.70 லட்சம் புதிய புற்றுநோய்களில், அதிகமாகக் காணப்படுவது வாய்ப் புற்றுநோயாகும், அதைத் தொடர்ந்து நுரையீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் ஆகியவை 45 சதவீத பதிவு செய்யப்பட்டவர்கள்  உள்ளனர் (பதிவு செய்யப்பபடாதவர்களும் உண்டு). ஒவ்வொரு ஆண்டும் 5.87 லட்சம் புதிய புற்றுநோய்களில், அதிக எண்ணிக்கையில்  மார்பகப் புற்றுநோய்கள் உள்ளன, அதனைத் தொடர்ந்து கருப்பை வாய்ப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை புற்றுநோய்களில் 60 சதவீதமாகும். 

மார்பகப் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆறு முக்கிய வகை புற்றுநோய்கள் என்றும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மார்பகப் புற்றுநோயில் 1,62,500 பேர், 57,000 பேருக்கு பெருங்குடல் புற்றுநோய்களும் ஆண்டுதோறும் பதிவாகின்றன.

இன்றைக்குப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை புற்றீசல்போல் பெருகிக்கொண்டே வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 1.4 கோடி பேருக்குப் புற்றுநோய் வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்றுநோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்பதாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை அபாய குரல் எழுப்பியிருக்கிறது. 

ஆண்களுக்கு இரைப்பை, நுரையீரல், ஈரல், பெருங்குடல்-மலக் குடல், உணவுப் பாதை, வாயின் மேல் தொண்டை, புராஸ்டேட் சுரப்பிகளில் இந்நோய் அதிகமாகத் தாக்குகிறது. பெண்களுக்கு மார்பு, இரைப்பை, பெருங்குடல்-மலக் குடல், கர்ப்பப் பை, உணவுப் பாதை, கல்லீரல் ஆகிய இடங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகக் காணப் படுகிறது.

மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களுக்கு 80-90 சதவிகிதம் சுற்றுச்சூழலே காரணமாக இருக்கிறது. அத்துடன் உலகில் சிகரெட், பீடி, பான்பராக் போன்ற புகையிலைப் பொருள்கள் பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாய், நுரையீரல், தொண்டைக்குழி, மூச்சுக்குழல், உணவுப்பாதை, சிறுநீர்ப்பை, கணையம், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டுப் புற்றுநோய் ஏற்படுகிறது.

அதிகப்படியாக மதுபானங்களைக் குடிப்பது கல்லீரல் மற்றும் உணவுப் பாதை ஆகியவற்றில் புற்றுநோய் வரக் காரணமாக அமைகிறது. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதது குடலில் புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது. உப்புக்கண்டம் போன்ற பதப்படுத்திய இறைச்சி, உணவுப் பொருட்களை உண்பது இரைப்பை புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன.

"வாழ்நாள் அதிகரிப்பதும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பெருக ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. 90 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி வாழ்நாள் 35-40 வயதுவரை இருந்தது. இன்றோ 65 வயதைத் தாண்டிவிட்டது. 60 வயதைத் தாண்டி வாழ்பவர்களில் 30 சதவிகிதம் பேருக்குப் புற்றுநோய் இருப்பதாகப் புதிய ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் ஏற்படச் சுற்றுச்சூழலில் உள்ள கார்சினோஜென் - அதாவது புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருட்கள் முக்கியக் காரணம். புகை, தூசி, ஆஸ்பெஸ்டாஸ், மணல், மரத்துகள் ஆகியவை இருக்குமிடங்களில் கார்சினோஜென் அதிகம் காணப்படுகிறது. இந்த இடங்களில் பணிபுரிபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

மென்று தின்னக்கூடிய பான் போன்ற புகையிலைப் பொருள்களால் வாயில் புற்றுநோய் வருகிறது. மரபியல் சார்ந்த விஷயங்களாலும் இந்த நோய் வரலாம். வீட்டில் அம்மா, அப்பாவுக்கு இந்த நோய் வந்தால் வாரிசுகளுக்கும் வர வாய்ப்பு உண்டு. அதேநேரம், நிச்சயமாக வரும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. வராமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. முன்னெச்சரிக்கையோடு இருந்தால் போதும்" என்கின்றனர் மருத்துவர்களும் அறிவியலாளர்களும்.

புற்றுநோய் வந்தால், அதுவே வாழ்வின் முடிவல்ல. அந்த நோயை வெல்ல மன உறுதியும் முறையான சிகிச்சையும் முக்கியம். அதைவிட நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகமிக முக்கியம். ஆனால், பலரும் முற்றிய நிலையிலேயே புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு அந்த நோயுடன் போராடுகிறார்கள் என்பதே உண்மை. ஆரம்ப அறிகுறிகளை எப்படிக் கண்டறிவது?

உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டி அதனால் வலியும் பிரச்சினை இல்லை என்றால் கண்டும் காணாமல் இருந்துவிடுவோம். ஆனால், அது தவறு. கட்டி எதனால், பாதிப்பு உண்டா என்பதை மருத்துவரிடம் காட்ட வேண்டும். இதேபோல் பசியின்மை, திடீர் எடையிழப்பு, ஜீரணக் கோளாறு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஏற்பட்டால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இந்த அறிகுறிகள் புற்றுநோய் வந்ததற்கான அறிகுறிகள் என்பதல்ல.

எச்சரிக்கையாகக் கருதி மருத்துவரைப் போய்ப் பார்த்து, உறுதி செய்துகொள்ள வேண்டும் மேலும், உடலில் உள்ள துளையின் வழியே ரத்தம் தொடர் இருமல், தொண்டை கரகரப்பாக மாறிக் கட்டிக்கொள்வது, மாதவிடாய் இல்லாத சமயத்தில் உதிரப்போக்கு ஆகியவையும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்தான். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு இரண்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவத் துறை அறிவுறுத்துகிறது. அதாவது, முதன்மை தடுப்பு முறை, ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது ஆகியவற்றின் மூலமே இந்நோயைத் தடுக்க முடியும். 

பல நோய்களுக்குத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுபோலவே கருப்பைப் புற்றுநோய்க்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹியூமன் பாபிலோமா வைரஸ்தான் (Human Pappiloma Virus -HPV ) கருப்பைப் புற்றுநோய் ஏற்படக் காரணம். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் இந்நோய் ஏற்படாமல் தடுக்க முடியும். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், கருப்பை புற்றுநோயின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவது நிரூபிக்கப்பட்டு உள்ளது. மேலும், நம் குழந்தைகள் பூப்பெய்தியவுடன் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது.  

தொடர்ந்து, நான் புற்றுநோயைச் சந்தித்த கதையைச் சொல்கிறேன்.

எனக்கு மார்பகப் புற்றுநோயை கண்டறிந்தது ஜூலை 2010ல், ஆனால், அதனை நான் லேசாக 4 மாதங்களுக்கு முன் உணர்ந்தும், எனக்குள்ள அறிவியல் பணியை முடித்துக்கொண்டு சோதனைக்குச் செல்லலாம் என்பதில் கொஞ்சம் நோய் முற்றிவிட்டது. நான் புற்றுநோயின் மூன்றாம் நிலையின் துவக்கத்தில்தான் போனேன். ஆனாலும், இரு மருத்துவர்களின் கருத்தினைப் பெற்று அதன் பின்னரே சிகிச்சைக்குப் போனேன். சில சமயம் இரண்டாம் முறை கருத்து பெறுவது நல்லது. நம் உயிர் அல்லவா?

மதுரை மற்றும் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் திசு சோதனை செய்யப்பட்டு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டு, 2010 ஆகஸ்ட் 25ம் நாள் அறுவைச் சிகிச்சை. 

பின்னர் கீமோதெரபி என்னும் கூட்டு வேதி சிகிச்சை. இது கொஞ்சம் வேதனையான சிகிச்சைதான். ஆனால், இது உயிர் காப்பதற்கான சிகிச்சை. இதன் செயல்பாடு என்னவென்றால், உடலில் புதிதாக உருவாகும் அனைத்து செல்களையும் கொன்றுவிடும். எனவே, பரவத் தயாராக இருக்கும் புற்றுநோய் செல்கள் மட்டுமின்றி, நோயின் தாக்கம் இல்லாத புதிதாக உருவாகும் அனைத்து செல்களும் அழிக்கப்பட்டு விடும். இதனால்தான் இந்த வேதி சிகிச்சை காலத்தில் புற்றுநோயாளி மிகவும் பலவீனமாக இருப்பார்கள். மேலும், உடலில் எதிர்ப்பு சக்தியும் இருக்காது.

ஓரிரு வாரங்கள்  மட்டுமே வாழும் வெள்ளையணுக்களும், இரத்த தட்டுகளும், சிவப்பணுக்களும் எண்ணிக்கையில் குறைந்து போகும். நோயாளிக்கு ஒவ்வொரு முறை கீமோதெரபி செய்யும்போதும், இரத்தத்தை சோதனை செய்து/ இரத்தம் செலுத்திய பின்னரே வேதி சிகிச்சை செய்யப்படும். மேலும் இந்தக் காலத்தில், இது அனைத்து புதிய செல்களையும் அழிப்பதால், வாயிலிருந்து மலக்குடல் வரை உள்ள செரிமான மண்டலத்தின் உட்புறம் இருக்கும் எபிதீலிய செல்கள் புண்ணாகிப் போயிருக்கும், அதனால் காரமாக, புளிப்பாக எதுவும் சாப்பிட முடியாது. உப்பும் இனிப்பும் மட்டுமே சாப்பிட முடியும். வாய் புண்ணாகி இருக்கும். மேலும், புதிய செல்கள் வளராததால், தலைமுடி மற்றும், உடல் செல்கள் உடம்பிலிருந்து கழியும், அதாவது முடி என்பது மண்டையோட்டின் மேலுள்ள இறந்த செல்தான்.

எனவே, புதிய செல் வளராததால், இணைப்பு துண்டிக்கப்பட்டு முடி கொட்டிவிடும். வேதி சிகிச்சையின்போது, தினமும் இரவில் படுக்கையில் உடலின் தோல் செல்கள் செதில்கள் போல கொட்டிக் கிடக்கும். இதனைச் சாப்பிட எறும்பார் படை எடுப்பார். எறும்பின் தாக்குதலிருந்து உடலைக் காக்க வேண்டும். காதிலும் தினம் எறும்பு விஜயம் செய்யும். எறும்பின் வாசனை அறியும் திறனை என்னென்பது, எப்படி இருந்தாலும் படுக்கையை எறும்பார் எட்டிப்பார்த்து விடுவார்.

வேதி சிகிச்சையின் போது உணவு எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும்கூட, கட்டாயமாக உடல் எடை குறையாமல் இருக்க, தற்காப்பு சக்தியை தக்கவைக்க, இரத்த அளவு குறையாமல் இருக்க, உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக கால்சியம் உள்ள உணவு, எதிர்ப்பு சக்தி உள்ள உணவு, புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ள காய்களின் உணவு என அறிந்து, அதிகமான காய்கறிகள் காரமின்றி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம், தினமும் உணவில் கீரை அவசியம். அதற்கும் மேல் நாம் உயிர் வாழ வேண்டும், அதற்கான உணவு உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

மேலும், மருந்தை விடவும் மனத் துணிவு மற்றும் தைரியம் தேவையானது. நோயை எண்ணி பயப்படக் கூடாது. அது தொடர்பான எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல் உடல் சரியாவதைத் தடை செய்யலாம். எப்போதும் நாம் வாழ வேண்டும், சீக்கிரம் உடலைப் புற்றுநோயிடமிருந்து மீட்க வேண்டும், என அதற்கான நேர்மறை எண்ணங்களைக் கைக்கொள்ள வேண்டும். இதுவும் கூட அதற்காப்பு சக்தியை அதிகரிக்கும்.

இரண்டாம் வேதி சிகிச்சை முடியும் வரை முடி கொட்டாது. மூன்றாம் வேதி சிகிச்சையிலிருந்து முடி கொத்துக் கொத்தாக, இரவில் படுத்து, காலையில் எழும்போது தலையணையில் மற்றும் சீப்பால் சீவும்போது தலையிலிருந்து தரையில் அப்படியே ஒட்டுமொத்தமாக கழன்று விழும். இதனால் மனம் உடைந்து போகும் பெண்களும் ஆண்களும் ஏராளம். இது முடிதானே... இறந்த செல்கள்தான்.. மீண்டும் முளைத்து விடும். இந்த நேர்மறை எண்ணம் வேண்டும். பெண்களுக்கு முக்கியமாக மார்பகமும், முடியும் இல்லை என்றால் பெண் இல்லை என வேதனைப்படுகின்றனர். இவை வெளியுலகத்தின் ஓர் அடையாளம், அவ்வளவே.

இவை இரண்டும் இல்லை என்றாலும், உடலுக்குள் உங்களுக்குள்ள பெண் உறுப்புகளும் உணர்வும் எப்போதும் உண்டு. நீங்கள் பாலுறவுகூட கொள்ள முடியும். இதில் எந்தவித பாதிப்பும் வராது. இந்த உண்மை பெரும்பான்மையோருக்குத் தெரிவதில்லை. 

புற்றுநோயில் முதல் மருந்து தைரியம் மற்றும் தன்னம்பிக்கை. அடுத்துதான் மருத்துவமனையில் தரும் மருந்து. அதன் பின்னர் நல்ல உடல்நலத்துக்கான, ஆரோக்கியமான உணவு. அதன் பின்னர் சூழல்தான். இவை போதும் புற்றுநோய் உள்ளவர்களை காப்பாற்ற.. நோயின் தாக்கம் என்பது அதற்குப் பின்னர்தான். 

நான் முடி கொட்டியதும், தலையில் விக் வைத்துக்கொண்டேன். முடி கொட்டிவிட்டதே எந்த வருத்தமும் மனதில் இல்லை. மார்பகம் எடுத்தாயிற்றே என்ற கவலையும் இல்லை. உடல் சோர்வும் கஷ்டமும் நிறையவே இருந்தன. ஆனால் கொஞ்சமும் மனச்சோர்வோ, செத்துவிடுவேன் என்ற எண்ணமோ எப்போதும் வந்ததில்லை; அந்த நன்னம்பிக்கை முனையில்தான் இன்று இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பார்த்து இவள் பிழைக்கமாட்டாள் என்றே நினைத்தார்கள். என்னைப் பெற்ற தாய், இவள் சாமி கும்பிடவில்லை, மாலையில் விளக்கு ஏற்றவில்லை. அதனால்தான் இவளுக்கு புற்றுநோய் வந்துவிட்டது என்கிறார்கள். நான் அப்படி எதுவும் இல்லை என்றே நம்புகிறேன். நான் அப்படி இருந்த காலகட்டத்திலும், நடைப்பயிற்சி, உடற்பயிற்சியும் செய்தேன். 

எனக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யும்போது, அக்குளில் இருந்த 11 நிணநீர் சுரப்பிகளை நீக்கிவிட்டார் எனது  அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கார்த்திகேஷ். அவைதான் புற்றுநோய் செல்களை கடத்துபவையும், அதன் தன்மையை அறிவிப்பவையும், அந்த இடத்தில் ஒரு அங்குல குழி இருக்கும். மேலும், அறுவை சிகிச்சையின்போது, கையைத் தூக்க பயன்படும் தசைகளில் ஒன்றான பெக்ட்டோரோலிஸ் மைனர் (pectoralis  minor) என்பதையும் வெட்டி எடுத்துவிட்டார்.

மார்பகம் எடுத்த பின்னர், அதற்கு அருகில் இடுப்பும், முதுகும் இணையும் இடத்தில் தசையை இழுத்துக்கட்டி, ஓர் இட்லி போல இருந்தது. நான் மருத்துவரிடம் கையை அசைப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் இடது கையை 40% மட்டுமே செயல்படுத்த முடியும். எதற்கும் நீங்கள் அதனை பயிற்சி செய்து பாருங்கள் என அதற்காக பயிற்சியும் சொல்லிக் கொடுத்தார். இப்போது கையை நன்றாக முன்புபோலவே பயன்படுத்துகிறேன். இரு சக்கர வாகனமும்  ஓட்டுகிறேன். பிரச்னை ஏதும் இல்லை.

அறுவைச் சிகிச்சை செய்து முடித்த பின்னர் அதுதொடர்பாக தினமும் நாள்குறிப்பு எழுதி வைத்தேன். எனக்குப் புற்றுநோய் ஓர் அனுபவம். இதன் மூலம் இனி வரும் காலத்தில், புற்றுநோய் வந்தவர்களுக்கு தைரியமாய் மனத்துணிவுடன் இதனை சந்திக்க சொல்லவும், புற்றுநோய்  தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இது சரியான வாய்ப்பு. ஓர் நிஜ அனுபவத்துடன் அவர்களிடம் பேசலாம்; உரையாடி விவாதம் செய்யலாம் என்று நினைத்தேன். அதனை இப்போது நடைமுறைப்படுத்துகிறேன். 

எனக்கு வேதி சிகிச்சையின்போதும் நான் அடுப்பங்கரையில் சமையல் செய்தேன். என் மகன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தான்; என்னை நலம் விசாரிக்க வந்தவர்களுக்கும் நானே சமையல் செய்து கொடுத்தேன். உடல் வலிக்கும், எந்தவித நல்ல எண்ணமும் வராது. அப்போதெல்லாம் யாரிடமும் பேசாமல், உடனே  கணினியிடம் அடைக்கலம் ஆனேன். ஏராளமான கட்டுரைகள், சமையல் குறிப்புகள், தினமும் சுடச் சுட அறிவியல் கண்டுபிடிப்புகள் என சுமாராக 300 கட்டுரைகளுக்கு மேல் முகநூல் புத்தகத்தில் எழுதி குவித்தேன்.

இதில் நான் ஆண்களுக்கும் புற்றுநோய் வரும் என்பதை அறிந்து அதற்காக ஒரு கட்டுரை எழுதினேன். அது உலக அளவில் இரண்டாவது பரிசு கட்டுரை என அறிவிக்கப்பட்டு, நான் திருப்பூர் சென்று அதற்கான பரிசு ரூ. 3,000 வாங்கி வந்தேன்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சின்ன சின்ன பிரச்னைகள் வந்தாலும், அவற்றை எளிதாக சமாளித்தேன். நாள்கள் நகர்ந்தன. இரவில் தூக்கம் வராது. கட்டுரைகளாக எழுதி குவித்தேன். ஏராளமாய் படித்தேன். அறுவை சிகிச்சை முடிந்த இரண்டாம் நாளே முகமதியர் வரலாறு (600 பக்கங்கள்) 4 நாள்களில் படித்து முடித்தேன். ஏராளமாய் புத்தகத்திலும், வலைத்தளத்திலும் படித்தேன். நாள்களை பயனுள்ள வகையில் அறுவடை செய்தென். 

நான்காம் வேதி சிகிச்சை முடிந்த உடன் 2010, நவம்பரில் மாநில தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு. கோவையில் நடந்தது. நான் அங்கு சென்று அதில் பங்கு பெற்றேன். அங்கு குழந்தை விஞ்ஞானிகளை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளர்களுக்கு வழக்கம் போல சில  ஆலோசனைகள், குறிப்புகள், செய்ய வேண்டியவை என அனைத்தும் சொல்லி செய்ய வைத்தேன். மிகவும் மகிழ்வாகவும் இருந்தது. மாநாட்டுக்கு இரு நாள்களும் காரில் பழனியிலிருந்து சென்று வந்தேன். நிறைந்த மகிழ்ச்சி கிட்டிற்று. ஆனால், சென்னைக்கு அப்போது நடந்த தேசிய அளவிலான மாநாட்டுக்கு செல்லவில்லை என்பது வருத்தமே. அங்கு நான் வெளியில் சாப்பிடக்கூடாது என்பதால், செல்லவில்லை.  

பின்னர் 6வது வேதி சிகிச்சை முடிந்ததும் மொட்டை போட்டுக்கொண்டேன். நண்பர் எழுத்தாளர் போப்பு என்னைப் பார்க்க வந்தார். அவர் எனது புற்றுநோய்க் கதையை அவரே எழுதுவதாகவும் கூறினார். இப்படி என்னை தொடர்ந்து சமூக தொடர்புள்ளவளாகவும் வைத்திருந்ததாலும்கூட, புற்றுநோயின் பாதிப்பு எனக்கு குறைவாகவே இருந்தது.

வேதி சிகிச்சை முடிந்தது. பின்னர் என்னை மருத்துவர் கார்த்திகேஷ், 5 வருடங்கள் தொடர்ந்து சாப்பிடுவதற்கான மாத்திரையை எழுதி தந்தார். இது எத்தனை நாள்கள் என்னைக் காப்பாற்றும் என்றேன். இது இனி உடலில் பரவாமல் இருக்கவும், உங்களைக் காக்கவும்தான் இந்த மாத்திரை என்றார்.

வீட்டுக்கு வரும்போது டாக்டர் கூறியது, "நீங்கள் இப்போது நன்றாக இருக்கிறீர்கள், சிகிச்சை காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் காப்பாற்றி விட்டீர்கள், வந்திருந்தால் கொஞ்சம் சிக்கலாகி இருக்கும், எல்லாவற்றுக்கும், உங்களின் தைரியமும், நேர்மறை செயல்பாடு மற்றும்  எண்ணங்களும்தான் முக்கிய காரணம், நாங்கள் கொடுக்கும் மருந்துகூட அதற்கு அடுத்தபடிதான்" என்றார்.

மேலும், "இப்போது உங்களின் இடது பக்கம் மார்பகம் எடுத்ததால், பொதுவாக கூட்டத்தில் போகாதீர்கள், போனால் ஆண்களுக்கு உள்ள பாதுகாப்புகூட உங்களுக்கு இல்லை. இதயத்தில் நேரடியாக மோதிவிடுவார்கள், ஜாக்கிரதையாக இருங்கள்" என்றார். அத்துடன், கீமோதெரபி கொடுத்துள்ளதால், எலும்பில் உள்ள கால்சியம் கரைந்து எலும்புகள் உள்ளே கூடாக இருக்கும், எதன்  மீதும் மோதி விழுந்து விடாதீர்கள், அப்புறம் உங்கள் எலும்பைக் கூடையில்தான் அள்ள வேண்டும் என்றார். மூன்று மாதத்துக்கு ஒரு முறை செக் அப் வந்து செல்லுங்கள். இடையில் சளி, இருமல், காய்ச்சல் என்றால் தாமதிக்காமல் வாருங்கள் என்கிறார். ஆனால், எனக்கு சளி, காய்ச்சல் எதுவும் வரவே இல்லை. 

அதன் பின்னர் நான் தொடர்ந்து நடைப் பயிற்சிக்குப் போவேன். ஆனாலும் வேகமாக நடக்க முடியாது.  உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அப்போது வீட்டுக்கு வந்த மகன் வினோவின் நண்பர்கள் கோகுலும், கனகராஜும், வாங்க ஒரு நாள், தாய் சி என்ற சீன தற்காப்புக் கலையை ரவி மற்றும் சிவா என்பவர்கள் செய்கிறார்கள். அதனைப் போய்ப் பார்த்து வரலாம் என்கிறார்கள். சரி என்று ஒருநாள் போனேன். அங்கு போனால், அதனைச் சொல்லித் தருவது எனது மேனாள் மாணவர் ரவிதான் அதன் மாஸ்டர். ஒரு நாள் போனதோடு தினமும் போகத் துவங்கினேன். 
 
தாய்ச்சி .. ஒரு சந்தர்ப்ப நுழைவு.. 

தாய்ச்சி(Taichi)... அது ஒரு தற்காப்புக்கலையே.. சிலரது வாழ்வில் அது ஓர் வாழும் கலையாக, உயிர் வாழும் கலையாகவே, உயிர் தக்க வைக்கும் கலையாகக்கூட  இருக்கிறது. எனக்கும் அப்படித்தான். தாய் சி எனக்கு அது ஓர் அஃறிணைப் பொருள் அல்ல. உயிர்ப்பொருள். தாய்ச்சி என்னும் சீன தற்காப்புக் கலையில் உடலின் ஒவ்வொரு செல்லும் செயல்படுகிறது. முக்கியமாக எலும்புகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. எலும்பு தேய்மானம் சரி செய்யப்படுகிறது.
 
ஒருக்கால் தாய்ச்சியை நான் சந்தித்திருக்காவிட்டால், இந்நேரம் மோகனா, உயிரோடு இருந்திருப்பாளா, அப்படியே இருந்திருந்தாலும், இவ்வளவு உயிர்த்துடிப்போடு ஓடிக்கொண்டிருப்பாளா என்பது ஐயமே.

ஆனால் இப்போது ஆரோக்கியமாக, புற்றுநோய்க்கு முன்பு இருந்ததைவிட இன்னும் பலமாக இருக்கிறேன் என்றால், ஒரு மாதத்தில் சுமார் 13,500 கி.மீ.கூட அலுப்பின்றி, 18 மாவட்டங்கள் சென்னை தவிர அனைத்து இடங்களுக்கும் பேருந்திலேயே, அதுவும் அரசுப் பேருந்தில்தான் பயணிக்கிறேன். பயண அலுப்பு நிஜமாகவே தெரியாது, காரணம் தாய்ச்சிதான்.

இடுப்பு வலி, கைகால் வலி எதுவும் கிடையாது; முன்பைவிட நல்ல உடல்நிலையில், அதிக வலுவுடன் இருக்கிறேன். அதுவே உடலையும், மனதையும் முன்பை விட இரும்பாக்கி உடல்நலத்தை அதிகரித்து உள்ளது. 
தாய்ச்சியின்போது  உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் செயல்பட்டு உடற்பயிற்சி செய்கிறது. ஒரு செல்கூட ஓய்வெடுப்பதில்லை. இதை செய்யும்போது மனதை ஒருமுகப்படுத்துகிறோம். தாய்ச்சி செய்யும்போது, உங்களின் கவனம் சிதறுண்டால், அடுத்த நிலை செயல்பாட்டுக்கு செல்லமுடியாது. 

இது செய்யும்போது உடல் வியர்க்கும், ஆனால் இதயத்துடிப்பு அதிகரிப்பதில்லை. முக்கியமாக, வயதாவதினால் ஏற்படும் முதுமையால், மூட்டு எலும்புகள் தேய்மானமாகி, இறுகி, கால்களை மடக்க முடியாமல், வலி ஏற்படும். தாய்ச்சி செய்ப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படாது. ஏனெனில், எலும்புகள் தொடர்ந்து அசைந்து கொண்டு இருப்பதால், தேய்மானம் ஏற்படாது, வலியும் உருவாகாது.

தாய்ச்சி செய்யும்போது அதிக கவனத்துடன் செய்வதால், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. முதுமைக்கான எந்த மாற்றத்தையும், துன்பத்தையும் உடல் சந்திக்காது.  

எனக்கு 73 வயதாகிறது. இந்த முதுமை வயதுக்கான உடல் தசை தளர்வு என்பது என் உடலில் இல்லை. கால்கள், காலின் ஆடுதசை எஃக்கு போலவே இருக்கும். கை தசைகளும், உடல் தசைகளும் கூட. என்னால் இப்போது சுமார் 2 கி.மீ. ஜாக்கிங் போக முடிகிறது. என்னை யாரும் எளிதில் தள்ளிவிட முடியாது. நேரில் தள்ளினால், 10 பேர் சேர்ந்து தள்ளினாலும் தள்ள முடியாது. அவ்வளவு திடமாக என் உடம்பு இருக்கிறது. 

5 ஆண்டுகள் முடிந்ததும் புற்றுநோய்க்கான மாத்திரைகளை நிறுத்திவிட்டேன், மருத்துவர் ஆலோசனைப்படி. கால்சியம், விடமின்ஸ், வைட்டமின் E  மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். முன்பு 3 மாதங்களுக்கு ஒரு முறை செக்கப் போனேன். இப்போது 6 மாதங்களுக்கு ஒரு முறை செக்கப் போகிறேன். இப்போது புற்று நோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்கிறேன். இன்னும் 3 ஆண்டுக்குள் அதனை முடித்துவிடுவேன். 

இந்தியாவில் நான்தான் தாய்ச்சியில் முதுகலை பட்டயச் சான்றிதழ் பட்டம் பெற்ற அதிக வயதான பெண். என் எண்தான், முதுகலைப் பட்டப் படிப்பின் முதல் இந்திய எண். இப்போது எனக்கு வயது 73 என்றால், நீங்கள் நம்புவது கடினம். ஒரு நாளின் 20 நிமிட தாய்ச்சி தற்காப்புக்கலை, உங்கள் இறப்பை ஒவ்வொரு நாளும் தள்ளிவைக்கிறது. 
  
தாய்ச்சி வந்த பின்னர், எலும்புகள் வலுவாகி இருக்கின்றன. நினைவுத்திறன் மீண்டும் அதிகமாகி உள்ளன. குறிப்பின்றி ஒரு 3 மணி நேரம் பேசலாம். அதைவிட என்ன நடந்தாலும் பொதுவாக கோபம் வருவதில்லை. மன அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது. தாய்சியினால் ரத்த அழுத்தம் குறையும். எலும்பு நோய்கள் குணமாகிறது. எனக்குத் தெரிந்து இங்கு பக்கவாதத்துடன் வந்த 4 பேர் குணமாகி இருக்கின்றனர். 

இப்போது நான் ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறேன். அதாவது தாய்ச்சியின் அடுத்த கட்ட உயர் செயல், பட்டா கத்தியுடன் தாய்ச்சி செய்தல் துவங்கிவிட்டேன். பட்டாகக்தியின் எடை 2.5 கிலோ. இதனை கையில் எடுத்து சுழற்றி செய்வது கடினம்தான். ஆனால் செய்கிறேன், துவங்கும்போது, பயிற்சியில் காயம் ஏற்பட்டு விடலாம் என்று முதலில் மரத்தால் ஆன கத்தியால் பயிற்சி பெற்றேன் பின்னர் பட்டாக்கத்தியுடன் பயிற்சி. இருப்பினும் இதிலும் வென்றிடுவேன். 

 
தாய்ச்சியின் பயன்கள் ஏராளம்.. பெண்களுக்கு ஏற்படும் குறுக்கு வலி, எலும்பு பிரசனைகளிலிருந்து விடுதலை, புற்றுநோயின் பின் விளைவுகளைக் குறைத்தல், மனஇறுக்கம் தவிர்த்தல், நீரிழிவு கட்டுப்படுத்துதல், இரத்த அழுத்தம் குறைத்தல், நினைவுத்திறன் அதிகரித்தல், பக்கவாதம், கீல் வாதம் சரிசெய்தல் எலும்பு, தசைகளை வலுவாக்குதல். 

பயணக் காதலி நான்... முதலில் இந்தியாவின் அழகு நகர் ஸ்ரீநகர், டால் ஏரி, குல்மார்க் மற்றும் சோனா மார்க் பார்க்கக் பறந்து போனேன். 

எனக்கு புற்றுநோய் வந்து என்னைத்தொட்டுப்பார்த்து மகிழ்ந்து, என் தைரியம், வலு பார்த்து வியந்து, விலகிச்சென்ற நேரம் அது. 2011 மார்ச்சில்தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் துவங்கினேன்.

வெளியே வந்து ஓர் ஆண்டுக்குள் பயணம் கிளம்பியாச்சு. 2011 ம் ஆண்டு இறுதியில் சுஜாதா வள்ளிதாசன் என்னிடம் ஸ்ரீநகர் வருகிறீர்களா என்றதும், நான்  மிகவும் சந்தோஷத்தில் குதித்தேன். ஓ வருகிறேனே என்றேன். அங்கே 3 நாட்கள் தனியே இருக்க வேண்டும். வந்து தனியாக அந்த குளிரில் இருக்க முடியுமா என்றார்கள். நிச்சயமாக, வெயில்தான் என்னால் தங்க முடியாது. குளிர் என்னவாக இருந்தாலும் தாங்கிவிடுவேன் என்றேன்.

வினோ நான்  தனியாகப் போய் எப்படி சமாளிப்பேன் என்றாலும், சுஜாதா, வள்ளி இருப்பதால் ஒன்றும் பிரச்சினை  இல்லை. போய் வாருங்கள் என்றான். நாங்கள், (நான், கமர், வள்ளி, சுஜி, சுஜியின் அப்பா சுத்தானந்தம்   பாலாஜி, கோதண்டராமன், ச.ம.  பன்னீர்செல்வம், அவரின்  இணையர்,  திலீபன், மருதன், அவரின் இணையர் & பவா என 12 பேர்)  12 பேரும்  சென்னை விமான நிலையத்திலிருந்து 2012 மார்ச் 16 ஆம் நாள் ஸ்ரீநகர் செல்ல  விமானத்தில்  பறக்கும்போதே ஸ்ரீநகரின் இமயமலை மேலே பனியும், மேகமும் பொதிந்து, இமயமலை தரிசனம் என்பது அற்புத அழகு. 

மனிதனின் கால்தடம் படாத மேருமலை.. பனியைப் போர்த்திக்கொண்டு.. வானைத்தொட்டுக் கொண்டு.. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பயணம் வெளியூருக்கு சுற்றுலா. அதன் பின்னர் அமெரிக்கப் பயணம், 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் 34 ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் அறிவை விசாலப்படுத்தியதிலும் என்னை ஓர் ஆளுமையாகச் செதுக்கியதிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்குப் பெரும்பங்கு இருக்கிறது. அறிவியல் இயக்கத்துக்குப் பலரைக் கொண்டுவந்த அருணந்திதான் என்னையும் அழைத்து வந்தார். என்னை அறிவியல் இயக்கத்தில் தக்க வைக்கவும் ஆளுமையாக உருவாக்கியதிலும் பலருக்கும் பங்கிருக்கிறது. அவர்களில் தாமஸ் பிராங்கோ, சகஸ்ரநாமம், மனோகர், மணி போன்ற நண்பர்கள் முக்கியமானவர்கள்.  எனக்கு புற்றுநோய் வந்த பின்பே நான் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவராக இரண்டு முறை 2015-2017 மற்றும் 2017-2019 வரை பொறுப்பேற்றேன். பின்னர் அந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் மாதம் 10,000 கிமீ பயணித்தேன். இந்தியா முழுமைக்கும் பயணித்தேன். 

இவையெல்லாம் புற்றுநோய்க்குப் பிறகே. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வாழ நினைத்தால் வாழலாம், புற்றுநோய் வந்த பின்பும் நேர்மறை எண்ணங்களோடு, தைரியமாய் இருந்தால் வாழலாம். 

இப்போதும் துப்புரவுத் தொழிலாளர்களோடு களத்தில் நிற்கிறேன். நோய் நம்மைத் துவட்டி விடக்கூடாது. நாம் நோயை விரட்டி அடிக்க வேண்டும்.

மார்பகப் புற்றுநோய் என்பது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மீண்டும் வேறு இடத்தில் வரும் என்கிறது அறிவியலும், மருத்துவமும். ஆனால், எனக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் சொல்கிறார். மேம், தமிழகத்தில் புற்றுநோய் வந்தவர்களில் இவ்வளவு சிறப்பாக செயல்படுவது நீங்கள் மட்டுமே. உங்களுக்கு இது மீண்டும் வராது. எப்போதும் பாசிட்டிவாக எண்ணுங்கள், கட்டாயம் வராது என்றார். புற்றுநோய் வந்தவர்கள் மீண்டும் ஒரு பீனிக்ஸ் பறவையாய் புற்றுநோயின் கங்குகளை உதிர்த்து விட்டு மீண்டும் எழுந்து வெகு வேகமாய் பறக்க முடியும் என்பதற்கு நானே சாட்சியும், அத்தாட்சியும்.

[பேரா. சோ. மோகனா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com