தனிக்கவனத்துடன் தயாரிக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா உலகப்புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது. 
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா உலகப் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குகிறது. 

ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த சுற்றுலா தலமாகவும் தமிழகத்தின் முத்திரை சின்னமாகவும் விளங்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றுமொரு சிறப்பு உலக புகழ்பெற்ற பால்கோவா.

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீ ஆண்டாளை தரிசித்து செல்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்களோ அதே அளவிற்கு இங்கு தயாராகும் பால்கோவாவை வாங்கிச் செல்வதை பெருமையாகக் கருதுகிறார்கள். ஆகையால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் எங்கு பார்த்தாலும் பால்கோவா கடைகள் காணப்படுகின்றன. 

இங்கு தயாராகும் பால்கோவா சுவையாக தனிச்சிறப்புடன் இருப்பதற்கு காரணம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளத்தால் இப்பகுதியில் உள்ள கறவை மாடுகளுக்கு மலைப் பகுதியில் விளையும் பசுமையான புல் உணவாக தரப்படுகிறது. மலைப் பகுதியில் விளையும் புல்களை உண்பதால் மாடுகளில் இருந்து பெறப்படும் பால் சுத்தமாகவும் கட்டியாகவும் உள்ளது. மேலும், இங்கு தயாராகும் பால்கோவா வணிகத்திருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே தயார் செய்யப்படுகிறது. 

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், அதிக அளவில் மாடுகள் வளர்கப்பட்டன. இந்த மாட்டில் இருந்து கிடைக்கும் அதிகப்படியான பாலை பதப்படுத்தி வைக்க முடியாத சூழ்நிலையால் பாலைக் காய்ச்சி அதை உணவாக சாப்பிடும் நிலை உருவானது.

குறிப்பாக 10 லிட்டர் பாலில் 1.250 கிலோ சீனியும் சேர்த்து தயாரிக்கும்போது அதில் இருந்து 3.250 கிலோ பால்கோவா கிடைக்கிறது. இதுவே பால்கோவா தயாரிக்கக் காரணமாக அமைந்தது. முதலில் குடிசைத் தொழிலாக செய்துவந்த இத்தொழிலே காலப் போக்கில் வளர்ச்சி கண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மாறியுள்ளது.

குறிப்பாக கூட்டுறவு பால்கோவாவை பொருத்தவரை புளிய விறகு வைத்து எரிப்பதால் அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால்கோவா தனிச்சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. தனியார் உற்பத்தியில் மிஷினில் வைத்து பால்கோவா செய்கிறார்கள். இதனால் அதில் சுவை குறைந்து காணப்படுகிறது. 

மேலும் பக்குவமாக பாலைக் காய்ச்சி சரியான அளவில் சீனி அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்து இதமான சூட்டில் பதமாக கிண்டி தயாரிக்கப்படும் பால்கோவா, பால் அல்வா ஆகியவை மிகவும் சுவையாகவும் நல்ல ருசியாகவும் இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பால்கோவா மற்றும் பால்பேடா ஆகியவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கும் அனுப்பபடுகிறது.

புவிசார் குறியீடு பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தற்போது வாடிக்கையாளர்கள் எளிதில் பெறக்கூடிய வகையில் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு டோர் டெலிவரி செய்யப்படுவதாகவும் தீபாவளி காலம் என்பதால் வழக்கத்தை விட பால்கோவா அதிகளவில் தயாரிக்கப்படுவதால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

மதுரை மல்லிகைப் பூ, மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா வரிசையில் ஸ்ரீவில்லிபுத்தூா் என்றாலே பால்கோவாதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா பிரபலம். இத்தகைய பெருமை உடைய பால்கோவாவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு புவிசாா் குறியீடு கிடைத்தது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவாவுக்கு மேலும் பெருமை சோ்க்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை கடந்த புதன்கிழமை வெளியிட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com