காவிரி நீரால் தனித்துவம் பெற்ற திருவையாறு அசோகா என்ற இனிப்பு

இனிப்புப் பண்டங்களிலேயே பிரபலமான திருவையாறு அசோகாவின் விசேஷம் என்னவென்றால் அதை சாப்பிட வேண்டியதில்லை. நாக்கில் பட்டாலே போதும், அசோகா கரைந்துவிடும்.
திருவையாறு அசோகா
திருவையாறு அசோகா

பலகாரத்தில் தனிச்சிறப்புப் பெற்ற ஊர்களில் தஞ்சாவூர் மாவட்டக் காவிரிக்கரையோரம் உள்ள அழகான சிற்றூரான திருவையாறுக்கும் உண்டு. தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள இந்த ஊரில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆகிய ஐந்து ஆறுகள் ஓடுவதால், திருவையாறு என அழைக்கப்படுகிறது.

இந்த ஊரில் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐயாறப்பர் கோயில் பிரசித்தி பெற்றது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாராஜர் வாழ்ந்து, முக்தி பெற்ற ஊர் இது. அவரது சமாதியில் ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இச்சிறப்புகளின் வரிசையில் ஐம்பது ஆண்டுகளாக அனைவரது நினைவிலும் இருக்கும் திருவையாறு அசோகாவும் ஒன்று.

கோதுமை பாலில் செய்யப்படுவது அல்வா. இந்த அல்வாவை போன்ற தோற்றமுடைய அசோகா செய்வதற்குப் பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், மைதா மாவு, பால்திரட்டு, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் தேவை. இத்தனைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அசோகாவின் தன்னிகரற்ற ருசிக்கு மிக முக்கியமான காரணம் காவிரி நீர். எனவே, வேறு ஊர்களில் அசோகா தயாரிக்கப்பட்டாலும், திருவையாறு அசோகாவுக்கு ஈடு இல்லை என்ற பெருமையும் இதற்கு உண்டு.

இனிப்புப் பண்டங்களிலேயே அசோகாவின் விசேஷம் என்னவென்றால் அதை சாப்பிட வேண்டியதில்லை என்பதுதான். நாக்கில் பட்டாலே போதும், அசோகா கரைந்துவிடும். சாப்பிடுபவர் செய்ய வேண்டியதெல்லாம் அதன் ருசியை மெய்மறந்து அனுபவிக்க வேண்டியது மட்டுமே. சில பண்டங்களை ஆற வைத்துதான் சாப்பிட வேண்டும். அசோகாவோ எப்படி சாப்பிட்டாலும் ருசிக்கும்.

இந்த அசோகாவின் பிறப்பிடமே திருவையாறுதான். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு திருவையாறு தெற்கு வீதியில் பி.வி. ராமய்யர் அசோகா அல்வாவை அறிமுகப்படுத்தினார். மிகச் சிறந்த சமையல் கலைஞரான ராமய்யருக்கு வழக்கமான பலகாரங்களில் விருப்பமில்லை. எதையும் வித்தியாசமாக செய்து பழகிய அவர், தன் வாழ்நாளில் அறிமுகப்படுத்திய அரிய பலகாரம்தான் இந்த அசோகா. அந்தக்காலத்திலேயே அசோகா மிகவும் பிரபலமாக இருந்தது.

பின்னாளில் 1975 ஆம் ஆண்டு முதல் அக்கடையை கோவி. கணேசமூர்த்தி நடத்தி வருகிறார். ராமய்யரின் கைப்பக்குவமும், பாரம்பரிய முறைப்படியான தயாரிப்பும் இப்போதும் தொடர்கிறது.

விறகு அடுப்பில் தயாரிக்கப்படும் அசோகா
விறகு அடுப்பில் தயாரிக்கப்படும் அசோகா

தற்போது, 'ஆண்டவர் அல்வா கடை' என்ற பெயரில் தொடரும் இக்கடை நாள்தோறும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணி வரை தொடர்கிறது.

இக்கடையைக் கடந்து செல்பவர்களில் பெரும்பாலோனார், இதன் ருசியையும் சுவைத்துவிட்டுதான் செல்கின்றனர். காலங்கள் கடந்தாலும் இப்போதும் பாரம்பரிய முறைப்படி, வாழை இலையில் கொசுறாக கொஞ்சம் காரத்துடன் பரிமாறப்படும் அசோகாவை சுடச்சுட சாப்பிட்டு முடித்து நிறைவுக்கு ஒரு காப்பியும் குடித்துவிட்டு, வீட்டுக்கு ஒரு பொட்டலமும் வாங்கிப் புறப்படுகின்றனர்.

ஒரு காலத்தில் திருவையாறு நகர மக்களை சாப்பிட வைத்த அசோகாவின் ருசி, காலப்போக்கில் சுற்றுவட்டார மக்களையும் வண்டிக் கட்டிக் கொண்டு வந்து சாப்பிடும் அளவுக்கு ஈர்த்துவிட்டது.

சுற்றுவட்டாரத்தினரை மட்டுமல்லாமல், திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு வரும் இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் பலரும் தேடுவது அசோகாவைத்தான். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களெல்லாம் திருவையாறு அசோகாவை மறப்பதில்லை. தனக்கு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்களுக்கும் சேர்த்து வாங்கிச் செல்லும் அளவுக்கு இதன் புகழ் பரவியிருக்கிறது. 

இதுகுறித்து கடை உரிமையாளர் கோவி. கணேசமூர்த்தி தெரிவித்தது:

திருவையாறு அசோகாவின் தன்னிரகற்ற ருசிக்கு முக்கியமான காரணம் காவிரி தண்ணீர். மற்ற ஊர்களில் செய்யப்படும் அல்வா மற்றும் அசோகாவை விட இங்குள்ள ருசியின் தனி மகத்துவத்துக்குக் காரணமே திருவையாற்றுக் காவிரி நீர்தான். மேலும், பழமை மாறாமல், பாரம்பரிய முறைப்படி தயாரிக்கிறோம். இதை தயார் செய்வதற்கு விறகு அடுப்புதான் பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாம்தான் திருவையாறு அசோகா மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்புக்குக் காரணம்.

கணேசமூர்த்தி
கணேசமூர்த்தி

திருவையாறு அல்வாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது தியாகராஜ ஆராதனை விழாதான். இந்த விழாவுக்கு உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் வந்து செல்கின்றனர். இந்தக் கடைக்கும் தவறாது வருவர்.

மேலும், வாடிக்கையாளர்களின் திருப்திதான் மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்தால்தான் அடுத்த முறை வருவர். அவர்கள் மற்றவர்களிடமும் சொல்வர். நிறைய பேர் மூன்றாவது தலைமுறையாக வந்து வாங்கிச் செல்வதாகக் கூறுவர். இதுவே, திருவையாறு அசோகாவின் பெருமை உலகளவில் சென்றதற்குக் காரணம். எனவே, இனிப்பும், காரமும் தரமாகக் கொடுக்கிறோம். வாடிக்கையாளர்களின் அன்பு, பாசம்தான் இக்கடை வளர்ச்சி அடைந்துள்ளது என்றார் கணேசமூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com