கருணாநிதி - ஒரு சகாப்தம்!

தமிழக  அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி, தில்லித் தலைமையை உற்றுநோக்க வைத்தவர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக  அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி, தில்லித் தலைமையை உற்றுநோக்க வைத்தவர்.

ஆதரித்தாலும், எதிர்த்தாலும் தீவிரமாக இருக்கும் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியே என்று தேசியத் தலைவர்களால் பாராட்டும் பெற்றவர்.
கதாசிரியர், பத்திரிகை ஆசிரியர்,  அரசியல் தலைவர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். 1969-இல் முதன் முறையாக முதல்வரானார்.  

இளமையிலேயே போர்க்குணம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-இல் இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக் கட்சியின் தூணாகக் கருதப்பட்ட அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது வயதில் சமூக இயக்கங்களில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

"தூக்குமேடை' நாடகத்தை தஞ்சையில் நடத்திக் கொண்டிருந்தபோது,  அதன் மேடையில் எம். ஆர். ராதா,  கருணாநிதியை 'கலைஞர்' என்ற பட்டம் அளித்து அழைத்தார். அந்தப் பெயராலேயே எப்போதும் அழைக்கப்பட்டு வந்தவர் கருணாநிதி. முரசொலி என்ற பத்திரிகையையும் தொடங்கினார். 

'கல்லக்குடி' என்ற கிராமத்தைத் தேர்ந்தெடுத்து சிமெண்ட் ஆலையை உருவாக்கி 'டால்மியா சிமென்ட்' என்று பெயர் வைத்ததுடன், அந்த ஊரின் பெயரை 'டால்மியாபுரம்' என்று மாற்றினர். அந்தப் பெயரை கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது. 1952-இல் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம் மிகவும் கவனம் பெற்றது. கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

முரசொலி நாளிதழ் வாயிலாக, மாணவர் மன்றத் தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோர் கருணாநிதிக்கு நெருக்கமாக, உறுதுணையாகவும் இருந்தனர். 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1957-இல் நடைபெற்ற திமுக ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில், தமிழ்நாட்டில் மத்திய அரசால் ஹிந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக். 13-இல் நடைபெற்ற போராட்டத்துக்கு கருணாநிதி தலைமை தாங்கியும் நடத்தினார். அண்ணா,  கருணாநிதி உள்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். திமுகவின் போராட்டமும், மாணவர்களின் எழுச்சியும் ஹிந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடக் காரணமாயிற்று.

கருணாநிதியின் எழுச்சி

திமுகவின் தொடக்கக் கால உறுப்பினர். பின்னர், முன்னணித் தலைவராகி 1960- ஆம் ஆண்டில் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்தார். 1969 -ஆம் ஆண்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவு நாள் வரை 50 ஆண்டுகள் பதவியை வகித்து, ஹிந்திய அரசியல் வரலாற்றில் சாதனையைப் படைத்தார்.
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றி பெற்றார். 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்துத் தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். சட்ட மேலவை உறுப்பினராக இருந்ததால்,  1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1957 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் முக்கிய பங்கை இவர் ஆற்றினார்.

குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை,  அண்ணா நகர்,  துறைமுகம், சேப்பாக்கம், திருவாரூர் உள்பட பல்வேறு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டப் பேரவையில் பொன் விழா நாயகராக விளங்கினார். 1962-இல் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தார்.
1967-இல் திமுக ஆட்சியைப் பிடித்து, முதல்வராக அண்ணா பொறுப்பேற்றார். அவர் மறைவுக்குப் பின்னர்,  1969-இல் கருணாநிதி முதல்வராகினார். பின்னர், 1971-1976,  1989-91 ,  1996-2001, 2006-11—என ஐந்து முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணியாற்றினார். பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி, இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
மத்தியில் 1989-91-ஆம் ஆண்டுகளில் வி.பி.சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய முன்னணி ஆட்சி, 1996-98-ஆம் ஆண்டுகளில் தேவெ கௌடா,  ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சி,  1999-2004-இல் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, 2004-14-இல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகள் அமைந்ததில் முக்கிய பங்கு கருணாநிதிக்கு உண்டு.  இதுதவிர,  பிரணாப் முகர்ஜி,  பிரதீபா பாட்டீல் உள்பட பல குடியரசுத் தலைவர்களைத் தேர்வு செய்ததிலும் கருணாநிதிக்கு உள்ள பங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய அரசியலில் பங்காற்ற வாய்ப்பு கிடைத்தும், ஆளுநராக, மத்திய அமைச்சராக என பல்வேறு உயர்பதவிகள் தேடி வந்தபோதும் அவற்றை மறுத்து தமிழக அரசியலிலே முழு பங்காற்றினார்.
அரசியல் பணிகளையும், எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்துவந்தார்.

இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதியானது முரசொலி,  குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன.  இந்த நூல் ஐந்து பாகங்களாக வெளிவந்துள்ளது.

விருதுகளும், பெற்ற சிறப்புகளும்..

உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில ஹிந்திய திரைப்பட தொழிலாளர்கள் என்ற பெப்சி மாநாட்டில்,  2009-ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

1970-இல் பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கௌரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987-இல், அவர் மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010-க்கான "உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்' அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார்.  இதுபோன்று நூற்றுக்கணக்கான விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர்.

மறைவு

2016- ஆம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதி 2018-ஆம் ஆண்டு ஜூலை 27-இல் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு,  ஆகஸ்ட்  7-இல், தனது 94-ஆவது வயதில் சென்னையில் காலமானார். “மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர். அவரது வாழ்க்கை ஒரு சகாப்தம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com