வெற்றியல்ல, தார்மிகத் தோல்வி!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக பாரதிய ஜனதா கொண்டு வந்த விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றதில் வியப்பொன்றும் இல்லை.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக பாரதிய ஜனதா கொண்டு வந்த விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், இந்த வெற்றி தார்மிக வெற்றியா என்று கேட்டால், இல்லை என்றுதான் கூறவேண்டும். மக்களவையில் ஒரு தீர்மானத்தின் மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் 276 வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே அதை உண்மையான வெற்றியாகக் கருத முடியும். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான வாக்கெடுப்பில் மத்திய அரசுக்குக் கிடைத்திருப்பது 253 வாக்குகள் மட்டுமே. எதிர்ப்பான வாக்குகள் 218.

பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 35 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அரசு வென்றுள்ளது. அன்னிய நேரடி முதலீட்டுக்கு முழுமூச்சில் எதிர்ப்பு தெரிவித்த 22 உறுப்பினர்கள் உள்ள சமாஜவாதி கட்சியும் மற்றும் 21 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியும், வெளிநடப்பு செய்து அரசை மறைமுகமாகக் காப்பாற்றி இருக்கின்றன. இந்த வாக்குகளையும் எதிர்ப்பு வாக்குகள் என்று கருத்தில் கொண்டால், அரசு தோல்வி கண்டிருக்கும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாறுபட்ட முடிவால் (சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி) இன்று இந்தியா முழுவதும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. இதை மாநில அரசுகளின் தனிப்பட்ட முடிவுக்கு விடும்போது, குறிப்பாக, ஒரு மாநிலத்தைப் பற்றி அண்டை மாநிலம் அக்கறை கொள்ளாதபோது எத்தகைய மோசமான விளைவுகள் நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு யார் சொல்லி விளங்க வைப்பது?

மதுவிலக்கைப் போன்றதுதான் சில்லறை வணிகத்தின் அன்னிய முதலீடும். பக்கத்து மாநிலத்தில் போய் குடிப்பதால், நமது அரசு வருவாய் இழப்பானேன் என்று மதுவிலக்கை ரத்து செய்வதுபோல பக்கத்து மாநிலத்தில் வால்மார்ட்டும் ஏனைய பன்னாட்டு வணிகர் குழுமங்களும் செயல்படுவதுபோல, நமது மாநிலத்திலும் செயல்படட்டும் என்று அத்தனை மாநிலங்களும் கதவைத் திறந்துவிடத்தான் போகின்றன.

இதில், மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தனித்து நிற்கலாம் என்பதே ஒரு தோற்றப்பிழை. மத்திய அரசு அனுமதித்துவிட்ட திட்டத்தில், அரசியல்வாதிகள் தங்களுக்கு லாபம் கிடைப்பதைத்தான் விரும்புவார்கள். அல்லது தங்கள் கட்சிக்கு நன்கொடை கிடைப்பதைத்தான் விரும்புவார்கள். ஆகவே, மக்களுக்காகக் கொஞ்சம் கூச்சப்பட்டு ""முடியாது'', ""வேண்டாம்'' என்றெல்லாம் சொன்னாலும், கடைசியில் எல்லா மாநிலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அன்னிய நேரடி முதலீடுக்கு அடிபணியும், கடைவிரிக்க அனுமதிக்கும் என்பதுதான் நிஜம்.

ஒரு சில மாநில முதல்வர்கள் இந்தத் திட்டத்துக்கு உண்மையாகவே எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட அந்த மாநிலங்களுக்கு மறைமுகமான பாதிப்புகள் ஏற்பட்டு, இவர்களை அனுமதிக்கும் கட்டாய நிலைமை உண்டாகும். உதாரணமாக, தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்கள் வெங்காயத்துக்கு வடமாநிலங்களை நம்பியுள்ளன. குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் கொள்முதல்பலம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் வழங்குவதைத் தவிர்த்தால், இங்கே தட்டுப்பாடு ஏற்படும். விலை உயரும். மக்கள் ஆட்சியாளர்களை வசைபாடுவார்கள்.

மக்களிடம் "திட்டு' வாங்கி அனுமதிப்பதைக் காட்டிலும் "துட்டு' வாங்கி அனுமதிப்போம் என்ற முடிவுக்கு எல்லா மாநிலங்களும் தள்ளப்படும். அதனால் மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம் என்பது வெறும் சப்பைக்கட்டு மட்டுமே!

மக்களவை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது போல, மாநிலங்களவை வாக்கெடுப்பிலும் அரசு வெற்றி பெற்றதில் வியப்பு ஏதுமில்லை. இது ஒன்றும் எதிர்பார்க்காததல்ல. கடந்த நவம்பர் 22-இல் வெளிவந்த "ஈயமும் பித்தளையும்' தலையங்கத்தில், '"விதி எண் 184-ன் படி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தினால், மத்திய அரசுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்கிற நிலைமை இருப்பதுபோல ஒரு தோற்றம் காட்டப்படுகிறதே தவிர, நிலைமை அவ்வாறாக இல்லை. சிலருக்கு "விருந்தும்', சிலருக்கு "மருந்தும்' ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாமல் வெளியேறும் கட்சிகளும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகும் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பை அரசுக்குச் சாதகமாகவே அமையச் செய்யும். தனது பாசறையை முதலில் ஒருமுறை சோதித்துப் பார்த்துக் கொள்வதற்கான கால அவகாசம் பெறுவதற்காகவே, தற்போது வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறதே தவிர, வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கே கூட காங்கிரஸ் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று நம்ப இடமிருக்கிறது'' என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். நாம் எதிர்பார்த்ததுதான் நடத்திருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம் என்று வாய்கிழிய வெளியே பேசிவிட்டு, வாக்களிப்பில் ஆதரவாக வாக்களிப்பதும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதும் புத்திசாலித்தனமான அரசியல் முடிவாக இருக்கலாம். இதற்கு ஆட்சி கவிழ்ந்துவிடும், பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. திமுகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவுடன் கொஞ்சிக் குலாவிக் கூட்டணி அமைத்து "ஆட்சி சுகம்' கண்ட கட்சிகள். மல்லாந்து படுத்து காறி உமிழ்ந்தால், அது மார்பில்தான் வந்து விழும் என்பதுகூட இவர்களுக்குப் புரியவில்லை.

சாம, தான, பேத, தண்டத்தைப் பயன்படுத்தித் தேர்தலிலும் வெற்றிபெற்ற பிறகு, அவைகளிலும் வெற்றி பெறுவது ஒரு கலை என்றால், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அதைத் தெளிவாகவே கற்றுத் தேர்ந்திருக்கிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழிகோலி இருப்பதுபோல, நாடாளுமன்றத்திற்கே அன்னிய நேரடி முதலீடு வராமல் இருந்தால் சரி... நமது கவலை அதிகரிக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com