தரமின்மையும், திறனின்மையும்!

சுதந்திரமடைவதற்கு முன்னால் இந்தியாவில்

சுதந்திரமடைவதற்கு முன்னால் இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 18 விழுக்காடாக இருந்தது. இப்போது அது 80 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்பது சரி. அவர்கள் எழுதுவதோ, படிப்பதோ குறித்த புரிதல் உள்ளவர்களா என்கிற கேள்வி எழுகிறது. பல்வேறு ஆய்வுகள் நமக்குத் தெரிவிப்பதெல்லாம், இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் புரிதலுடன் படிக்கவோ, தவறில்லாமல் எழுதவோ தெரிந்தவர்களல்ல என்பதுதான்.
உலக வங்கி ஒவ்வோர் ஆண்டும் உலக வளர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. "கல்வியின் இலக்கை அடைவதற்கான பயிற்சி' என்கிற தலைப்பில் உலக வளர்ச்சி அறிக்கை 2018 வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கிராமப்புறங்களில் கல்விச்சாலைகள் செயல்படும் விதமும் அவற்றில் கல்வி கற்பிக்கப்படும் விதமும் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை கல்வி கற்பித்தலின் தரம் மிகவும் குறைந்திருக்கிறது என்றும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களே தவிர அவர்கள் எதையும் படித்துப் புரிந்துகொள்வதில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2016-இல் கிராமப்புறப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் ஏறத்தாழ பாதிப்பேரும், எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரும் சாதாரண கூட்டல், கழித்தல்கூட செய்யத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கிராமப்புறங்களில் ஆறாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 85 விழுக்காடு குழந்தைகள் புரிதலுடன் ஒரு வாக்கியத்தைச் சரியாக எழுதவோ, படிக்கவோ தெரிந்தவர்களாக இல்லை. அதைவிட வேதனை என்னவென்றால், இந்த நிலைமை ஆண்டுக்கு ஆண்டு மோசமாகி வருகிறது என்பதுதான். 
2014-இல் ஊரகப்புற மாணவர்களில் 47.3 விழுக்காடு மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க முடிந்தவர்களாக இருந்தார்கள். 2016-இல் இது 42.1 விழுக்காடாகக் குறைந்ததே தவிர, புரிதல் அதிகரிக்கவில்லை. அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பித்தல் முறையாக இல்லை என்று வசதியுள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முற்படுகிறார்கள். ஆனால், ஊரகப்புறங்களில் தனியார் பள்ளிகளும் எந்தவிதத்திலும் அரசுப் பள்ளிகளைவிட சிறப்பானதாக இல்லை என்பதுதான் ஆய்வுகளின் முடிவு. 
2014-இல் கிராமப்புறப் பள்ளிகளில் படித்த 33.4 விழுக்காடு குழந்தைகள் சாதாரண அரிச்சுவடிக் கணக்குகளைக்கூட போடத் தெரியாமல் தவித்தனர் என்றும், அவர்களுக்குப் பெருக்கல், வகுத்தல் போன்றவற்றில் சரியான புரிதல் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரியப்படுத்துகிறது. 2014-இல் புரிதலுடன் படிக்கும் மாணவர்களின் விகிதம் 33.4 விழுக்காடாக இருந்தது, 2016-இல் 28.1 விழுக்காடாகக் குறைந்ததே தவிர அதிகரிக்கவில்லை.
கற்பித்தலின் தரத்தை உயர்த்துவதும் மாணவர்களுக்குத் தாங்கள் படிக்கும் பாடங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும் இயலாத ஒன்று அல்ல. பல்வேறு நாடுகள் அதை சாதித்துக் காட்டியிருக்கின்றன. சொல்லப்போனால் உள்நாட்டுப் போர், உச்சகட்ட வறுமை என்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாடுகள்கூட கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தைச் சாதித்துக் காட்டியிருக்கின்றன. இந்தியா அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியும், மனித வளமும் இல்லாமல் இருந்தும்கூட சிறிய பல நாடுகள் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளின் தரத்துக்கு தங்களது கல்வியின் தரத்தை உயர்த்த முடிந்திருக்கிறது.
வியத்நாமை எடுத்துக்காட்டாகக் கொண்டால், மலைப்பை ஏற்படுத்துகிறது அவர்களது கல்வி வளர்ச்சி. வியத்நாமில் 15 வயதான மாணவர்கள் எழுதுதல், வாசித்தல், கணக்குப் போடுதல் ஆகிய அனைத்திலும் ஜெர்மானியர்களுக்கு நிகரான கல்வித்தரம் பெற்றவர்களாக இருக்கின்றனர். லைபீரியா, பப்புவா நியுகினி, டோங்கா உள்ளிட்ட பல சிறிய நாடுகள் அரசின் முனைப்பாலும், செயல்பாட்டாலும் மிகக் குறுகிய காலத்தில் கல்வியில் சர்வதேசத் தரத்தை எட்டியிருக்கின்றன. இந்த நாடுகளிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.
ஒருபுறம் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றால், இன்னொருபுறம் பாதியில் படிப்பை நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை சவாலாக இருக்கிறது.
தரமான ஆசிரியர்கள் இல்லாமை மிகப்பெரிய பிரச்னை. அவர்களுக்கு முறையான கற்பித்தல் பயிற்சி இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு மாணவர்களை வழிநடத்தும் திறமையும் இல்லாமல் இருக்கிறது. தங்களுக்கே அறிவுச்செறிவு இல்லாததால் மாணவர்கள் கேள்வி கேட்பதை உற்சாகப்படுத்துவது இல்லை. ஆசிரியர்கள் பள்ளிக்கு முறையாக வருவதும்கூட இல்லை என்று கூறப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு பள்ளிப் பாடத் திட்டங்களிலும் கற்பித்தல் முறையிலும் தொடர்ந்து பயிற்சி அளிப்பதையும், தரமானவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிப்பதையும், கற்பித்தல் முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதையும் செய்யாமல் போனால், கல்விச்சாலைகளில் குழந்தைகள் செலவழிக்கும் நேரம் வீண் என்றுதான் கொள்ள வேண்டும்.
நூறு விழுக்காடு குழந்தைகளையும் கல்விச் சாலைகளுக்குப் படிக்கக் கொண்டுவந்து விடலாம். ஆனால் அவர்கள் புரிதலுடன் கற்றுத் தேர்வதை எப்படி உறுதிப்படுத்தப் போகிறோம் என்பதுதான் சவால்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com