தூத்தி சந்த்தின் சாதனை!

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இந்திய

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இந்திய அணி இறுதிச் சுற்றை எட்டாமல் போனால் என்ன? உலக பல்கலைக்கழக விளையாட்டுகளில், இந்தியாவின் அதிவேக மங்கை தூத்தி சந்த் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அந்தக் குறையை ஈடுகட்டியிருக்கிறார்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது தூத்தி சந்த் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அரியதொரு விளையாட்டு வீராங்கனை. 400 மீட்டர் ஜூனியர் உலக சாம்பியன் ஹிமா தாஸ் (19 வயது) , ஜாவலின் வீரர் நீரத் சோப்ரா (வயது 21) , உயரம் தாண்டுதல் வீராங்கனை தேஜஸ்வின் சங்கர் (20 வயது) ஆகியோருடன் தூத்தி சந்த்தும் இந்தியாவின் தலைசிறந்த சர்வதேச விளையாட்டு வீரர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக வலம் வருகிறார். 
அவர்களைவிட தூத்தி சந்த்தின் வெற்றிக்குக் கூடுதல்              மரியாதை உண்டு. ஓட்டப் பந்தயம் என்பது இந்தியாவின் பலங்களில் ஒன்றாக இருந்ததில்லை. அதிக அளவில் வீரர்கள் இல்லாத காரணத்தால், தேசிய முகாம்கள் பல முறை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் அது ஆசிய விளையாட்டுப் போட்டியானாலும், பல்கலைக்கழக போட்டியானாலும், சர்வதேச அரங்கில் தூத்தி சந்த் வெற்றி பெறும் ஒவ்வொரு பதக்கமுமே ஏனைய வெற்றிகளையெல்லாம்விடச் சிறப்பு வாய்ந்தது என்று நாம் கொள்ள வேண்டும். 
நபோலியில் நடந்த உலக பல்கலைக்கழகங்களின் விளையாட்டுப் போட்டியில், தூத்தி சந்த் 100 மீட்டரை 11.32 விநாடிகளில் கடந்து சாதனை புரிந்திருக்கிறார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை என்கிற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சர்வதேச அளவில் முதல் முறையாக இந்தியா வெற்றி பெற்றிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நபோலியில் நடந்த போட்டியில் 11.32 விநாடிகளில் தூத்தி சந்த் 100 மீட்டரைக் கடந்து வெற்றி பெற்றது சாதனைதான் என்றாலும்கூட, அவருடைய தேசிய சாதனையைவிட இது ஒன்றும் பெரிதல்ல. ஏற்கெனவே தேசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டரை 11.26 விநாடிகளில் கடந்து தூத்தி சந்த் சாதனை புரிந்திருக்கிறார். ஆனால், இப்போதைய நபோலி வெற்றி தனிப்பட்ட முறையில் தூத்தி சந்த்தின் மிகப் பெரிய சாதனை. 
தூத்தி சந்த்தின் வெற்றிப் பயணம் ஆரம்பம் முதலே பல தடைகளை உடைத்தெறிந்த வண்ணம் முன்னேறி வந்திருக்கிறது. 2014-இல் காமல்வெல்த் விளையாட்டுகளில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் என்று இந்திய தடகள ஆணையம் அவருக்குத் தடை விதித்தது. அவருக்கு டெஸ்டோஸ்டிரோன் சோதனை நடத்தியபோது பெண்மைக்கான கூறுகள் குறைவாக இருப்பதாகக் கூறி, அவர் மகளிருக்கான விளையாட்டில் போட்டியிட முடியாது என்று நிராகரிக்கப்பட்டார். தூத்தி சந்த் தளர்ந்து விடவில்லை. அதை எதிர்த்து முறையீடு செய்து போராடி, அந்த முடிவை மாற்ற வைத்தார். அவரது போராட்டம் விளையாட்டு அரங்கில் பாலினசமத்துவத்தை உறுதிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. 
இந்த முறை அவர் எதிர்கொண்ட பிரச்னை முற்றிலும் வித்தியாசமானது. தனக்கு ஓரினச் சேர்க்கை உறவு இருப்பதாக துணிந்து அறிவித்தார் தூத்தி சந்த். அது சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓரினச் சேர்க்கைக்கு சட்ட ரீதியான அனுமதியை உச்சநீதிமன்றம்  வழங்கிவிட்டிருந்ததால் இந்தப் பிரச்னையை முன்வைத்து அவரை வீழ்த்திவிட முடியவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. 
பழக்கமில்லாத, பார்த்திராத எந்தவித மாற்றத்தையும் சமுதாயம் விமர்சிக்கத்தான் செய்யும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்துச் சிந்தித்து என்னுடைய வாழ்க்கையை நான் வீணடித்துக்கொள்ள விரும்பவில்லை என்பதுதான் தன்மீதான விமர்சனங்களுக்கு தூத்தி சந்த் அளித்த பதில்.
கடந்த சில மாதங்களாகவே மிகப் பெரிய எதிர்ப்புகளை தூத்தி சந்த்  சந்தித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது பயிற்சியாளர் அவரிடமிருந்து பிரிந்தார். ஓரினச் சேர்க்கை உறவை பயன்படுத்தித் தனது சகோதரி மிரட்டிக் கொண்டிருந்ததிலிருந்து வெளியேறுவதற்காகத்தான் துணிந்து தன்னுடைய உறவை வெளிப்படுத்தினார் தூத்தி சந்த். 
ஒடிஸா மாநிலம் சக்ககோபால்பூர் கிராமத்திலுள்ள நெசவுத் தொழிலாளிகளான அவரது பெற்றோர் அந்த உறவை ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் தூத்தி சந்த்தின் விளையாட்டுப் பயணம் தொடர்ந்தது. 
அதனால்தான் நபோலி தங்கப் பதக்கம் அவரது தன்னம்பிக்கைக்குக் கிடைத்திருக்கும் தனிப் பெரும் வெற்றி.
ஒவ்வொரு முறை வீழும்போதும் பிரச்னையை எதிர்கொள்ளும்போதும் தூத்தி சந்த் மீண்டெழுந்து வந்திருக்கிறார். இப்போது அவருடைய அடுத்த இலக்கு செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்க இருக்கும் தோஹா உலக சாம்பியன் போட்டி. 
இந்த முறை நபோலி பந்தயத்தில் கலந்துகொள்ள அரசு உதவவில்லை. அவரது  பல்கலைக்கழகம்தான் அந்தச் செலவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலோ, செப்டம்பர் மாத தோஹா போட்டியிலோ தேர்வாவதற்கு குறைந்தது 11.24 விநாடிகளில் 100 மீட்டர் ஓடியாக வேண்டும். அதற்கான பயிற்சி தேவை. 
இதுகுறித்தெல்லாம் தூத்தி சந்த் கவலைப்படுவதாக இல்லை. தனது சுட்டுரையில் அவரது பதிவு இதுதான் - என்னை வீழ்த்துங்கள், நான் அதிக வலுவுடன் மீண்டும் எழுவேன்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com