தளபதியின் எச்சரிக்கை!| இந்திய விமானப் படையை நவீனப் படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த தலையங்கம்

விமானப் படையில் கடந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற்ற ஏர் சீஃப் மார்ஷல் டி.எஸ்.தனாவ் விடுத்திருக்கும் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளத்தக்கது. நமது விமானப் படையின் மிக் - 21 ரக விமானங்கள் உருவான காலத்தைச் சேர்ந்த மோட்டார் வாகனங்கள் சாலைகளில் இப்போது இல்லை என்பதிலிருந்து, எந்த அளவுக்குப் பழைமையான விமானங்களுடன் இந்திய விமானப் படை செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி பட்காமில் எம்ஐ - 17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதற்குக் காரணம், பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்திய விமானப் படையிலிருந்தே செலுத்தப்பட்ட ஏவுகணையால் அந்த ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நவ்ஷெராவில் இந்திய - பாகிஸ்தான் விமானப் படைகள் ஒருபுறம் மோதிக் கொண்டிருக்கும்போது, பட்காமில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 6 விமானப் படை வீரர்களும், 1 சாமானியரும் மரணமடைந்தனர்.
அந்த நிகழ்ச்சி பல கேள்விக்குறிகளை எழுப்பியது. விமானக் கட்டுப்பாட்டு அறை, நட்பு விமானத்துக்கும் எதிரி விமானத்துக்கும் இடையேயான வேறுபாட்டைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியாததால்தான் நமது விமானப் படைஹெலிகாப்டர், நமது வீரர்களாலேயே வீழ்த்தப்பட்ட அவலம் நேர்ந்தது. முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் தனாவ், ஸ்ரீநகர் விமான தளத்தில் விமானப் படைத் தளபதியையும், இன்னும் சில அதிகாரிகளையும் நடைமுறைக் குறைபாடுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். 
இந்திய விமானப் படையின் கவனக்குறைவும், கண்காணிப்புக் குறைவும் ஒருபுறமிருந்தாலும்கூட, எதிரி விமானத்தையும் நட்பு விமானத்தையும் வித்தியாசப்படுத்தி தெரிவிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்கிற குறைபாட்டை அந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டிருக்கிறது. இந்திய விமானப் படையின் விமானக் கட்டுப்பாட்டு அறையின் வசமுள்ள ராடார்கள் மிகவும் பழைமையானவை. நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பத்துடன் கூடிய ராடார்கள் எல்லைப்புறப் பகுதியில், அதிலும் குறிப்பாக, சீன - பாகிஸ்தான் எல்லைகளில் இல்லாமல் இருப்பது விமானப் படையின் குற்றமல்ல. அவர்களுக்கு அவற்றை வழங்காமல் இருப்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் குற்றம். 
ராடார்கள் மட்டுமல்ல, இந்திய விமானப் படையின் தாக்குதல் விமானங்களின் எண்ணிக்கையும் போதுமான அளவில் இல்லை என்பது முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் டி.எஸ். தனாவின் குற்றச்சாட்டிலிருந்து தெரிகிறது. பல்வேறு பாதுகாப்புச் சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டுமானால், உடனடியாக இந்திய விமானப் படையின் தாக்குதல் படையில் (பைட்டர் ஸ்குவாட்ரன்ஸ்) காணப்படும் கடுமையான தேவைக்கு விடை காண வேண்டும். 
இன்றைய நிலையில் இந்திய விமானப் படையில் 30 தாக்குதல்  படைகள்தான் இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் அது 26-ஆகக் குறைந்துவிடும். நம்மைவிட, அளவிலும் வலிமையிலும் குறைந்த பாகிஸ்தான் விமானப் படையில் 2021-இல் 25 தாக்குதல் படைகள் காணப்படும் என்பதை நாம் கவனத்தில்  கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலாகோட் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நடந்த விமானப்  படைப் போரில் நமது பலவீனம் தெளிவாகவே வெளிப்பட்டது. பாகிஸ்தானின் அதி நவீன  எஃப் - 16 ரக விமானங்களை இந்தியாவின் பழைமையான மிக் - 21 பைசன்ஸ் ரக விமானங்களை வைத்துக்கொண்டு நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் கூறுவதுபோல, மிக் - 21 கால மோட்டார் வாகனங்கள் காயலான் கடைக்குப் போன பிறகும்கூட, அந்தப் பழைய தொழில்நுட்ப விமானங்களை வைத்துக்கொண்டு நமது வீரர்கள் போரிடுகிறார்கள். விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப் - 16 விமானத்தை மிக் - 21 விமானத்திலிருந்து வீழ்த்தினார். பழைய தொழில்நுட்பத்துடன் அபிநந்தன் போன்ற வீரர்கள் தீரமுடன் போரிடுகிறார்கள் என்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இதே நிலைமை தொடர்ந்தால், வருங்காலத்தில் போர் நடைபெறும் சூழல் ஏற்படும்போது நாம் மிக அதிகமான விலை கொடுக்க வேண்டிவரும். இந்திய விமானப் படை மிகப் பழைமையான விமானங்களுடன் செயல்படுகிறது என்பது மட்டுமல்ல, நவீனமயமாக்கும் முயற்சியில் மெத்தனம் காட்டுகிறது. வெளிநாடுகளிலிருந்து புதிய இறக்குமதிகள் இல்லை. நவீன தொழில்நுட்ப விமானத் தளவாட உற்பத்தியை நாம் முழுமூச்சில் முடுக்கிவிடவில்லை. பிரான்ஸிலிருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஃபேல் விமானங்கள் இதுவரை வந்து சேரவில்லை.
ரஷியாவில் 1980-இல் தயாரிக்கப்பட்ட 21, மிக் - 29 ரக ஜெட் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது. ஏனைய நாட்டு விமானப் படைகள், ஐந்தாவது, ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது, நவீனமயமாக்கலுக்கு போதிய ஒதுக்கீடு இல்லாததால் இந்திய விமானப் படை காலாவதியான தொழில்நுட்பத்துடன் கூடிய மிக் - 29 போன்ற போர் விமானங்களை வாங்க முற்படுவது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல. 
முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் டி.எஸ். தனாவ் சரியான நேரத்தில், சரியான எச்சரிக்கையை முன்வைத்திருக்கிறார். பாதுகாப்பு அமைச்சரும் நிதியமைச்சரும்  ராணுவ நவீனமயமாக்கலை போர்க்கால அணுகுமுறையுடன் எதிர்கொள்ள வேண்டும். வீரமும், வீராவேச வசனங்களும் எதிரிகளை எதிர்கொள்வதற்கு உதவாது. இன்றைய நிலையில், தொழில்நுட்பத்தின் அடிப்படையில் யுத்தங்கள் நடத்தப்படுகின்றன என்பதை அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டியதில்லை, நினைவூட்ட விரும்புகிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com