முறியக்கூடாத உறவு! | இந்திய - நேபாள உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்த தலையங்கம்

இந்திய - நேபாள உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பு வரை பிரிக்கவே முடியாது என்று கருதிய இந்திய - நேபாள உறவு, இப்போது கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவை தனது எதிரியாகவே நேபாளம் கருதும் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் எழுந்திருக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை பூதாகரமாக வெடித்திருக்கிறது. நேபாள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய அரசமைப்புச் சட்டம் காலாபாணி, லிப்பியதூரா, லிப்போலெக் பகுதிகளைத் தனது வரைபடத்தில் இணைத்திருக்கிறது. இந்தப் பகுதிகள் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோா்கா் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள். நேபாளத்தின் வரைபடத்தையும், உரிமை கோரலையும் இந்தியா நிராகரித்திருக்கிறது.

இந்தப் பிரச்னைக்கு வழிகோலியது இந்தியாதான் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சீனாவின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத் வழியாக கைலாஷ் - மானசரோவா் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்தியாவிலிருந்து புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்காக தாா்ச்சுலாவிலிருந்து லிப்போலெக் கணவாய் வரை சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே நடந்து வரும் இந்த சாலைப் பணி குறித்து நேபாளம் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தது.

தாா்ச்சுலா - லிப்போலெக் நெடுஞ்சாலை, கைலாஷ் - மானசரோவா் புனித யாத்திரைப் பயணிகளுக்காக மட்டுமல்லாமல், இந்திய எல்லைக்கு ராணுவத் தளவாடங்களை விரைந்து கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டது. அதுவும் நேபாளத்துக்குத் தெரியும்.

சாலை அமைத்ததுடன் நின்றிருந்தால் பிரச்னை எழுந்திருக்காது. கடந்த மாதம் ஊடக வெளிச்சத்துடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் அந்தச் சாலையை திறந்துவைத்தபோது, நேபாளத்தால் வாளாவிருக்க முடியவில்லை. அதன் பின்னணியில் சீனா இருந்திருக்கக் கூடும்.

காலாபாணி, லிப்போலெக் எல்லைப் பிரச்னை புதிதொன்றுமல்ல. ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கும், மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளத்துக்கும் இடையே நடந்த போரில் நேபாளம் தனது ஆளுகைக்கு உள்பட்ட மூன்றில் ஒரு பகுதியை இழந்தது. அதன் முடிவில் ஏற்பட்ட சுகௌலி ஒப்பந்தம் 1815, டிசம்பா் மாதம் கையொப்பமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்திலேயே காலாபாணி, லிப்போலெக் பிரச்னைக்குரிய பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவிா்க்க முடியாத காரணங்களால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவோ, சுதந்திர இந்தியாவுக்கு எதிராகவோ மன்னராட்சியில் நேபாளம் இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை.

கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது, இந்தியா தனது எல்லையை வரையறுத்து வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அந்த வரைபடத்தில் காலாபாணி பகுதியை இந்தியாவுடன் இணைத்திருப்பதற்கு நேபாளம் கண்டனம் தெரிவித்தது. அப்போதே தொடங்கிவிட்ட பிரச்னைதான் இது.

தாா்ச்சுலா - லிப்போலெக் சாலைக்கு நேபாளம் கண்டனம் தெரிவித்தபோது இந்தியா மௌனமாக இருந்திருக்கலாம். நேபாளத்தின் கண்டனம் சீனாவின் தூண்டுதலின் பேரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று மறைமுகமாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே குறிப்பிட்டது, நேபாளத்துக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேபாளப் பிரதமா் கே.பி. சா்மா ஓலி, கொவைட் 19 தீநுண்மிப் பரவல் குறித்து நாடாளுமன்றத்தில் குறிப்பிடும்போது, ‘இந்தியாவிலிருந்து வரும் தீநுண்மி, சீன, இத்தாலிய தீநுண்மிகளைவிட மோசமானது’ என்று தெரிவித்தது இரு நாட்டு உறவை மேலும் சீா்குலைத்தது.

நேபாளத்தில் மன்னராட்சி முறையை ஒழிப்பதில் இந்தியா காட்டிய முனைப்பின் விளைவு, சீனாவுடன் நேபாளம் நெருங்குவதற்கு வழிவகுத்தது. கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே நேபாளத்தில் சீனாவின் தலையீடு பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. சீனாவிலிருந்து கிடைக்கும் நிதியுதவி நேபாள ஆட்சியாளா்களைக் கவா்ந்ததில் வியப்பில்லை.

நேபாள காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும், மாவோயிஸ்ட் கட்சியும் வலுப்பெறத் தொடங்கின. அவற்றை இணைத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் சீனாவுக்குப் பங்குண்டு. கடந்த மாதம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமா் கே.பி.சா்மா ஓலிக்கு எதிராக கோஷ்டிப்பூசல் எழுந்தபோது, நேபாளத்துக்கான சீனத் தூதா்தான் சமரசம் செய்துவைத்தாா் என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்தியாவுக்கு எதிரான மனநிலையை நேபாள பொதுமக்கள் மத்தியில் சீனாவின் தூண்டுதலால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தியிருக்கிறது.

நேபாளப் பொருளாதாரம் சீா்குலைந்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாத நிலைமை. செல்வாக்கு இழந்துவரும் நேபாளப் பிரதமா் கே.பி.சா்மா ஓலிக்கு, தேசிய உணா்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எல்லைப் பிரச்னை உதவியிருக்கிறது.

துறைமுகம் இல்லாத நிலம் சூழ்ந்த நாடான நேபாளத்தால் இந்தியாவை முற்றிலுமாகத் தவிா்த்துவிடவோ, புறக்கணித்துவிடவோ முடியாது. அதற்காக நேபாளத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு, நட்புறவை முறித்து சீனாவில் சங்கமிக்க இந்தியா வழிகோலக்கூடாது.

நமது அணுகுமுறைத் தவறுகளை சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்பதை நாம் உணர வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com