காத்திருக்கும் எரிமலை! | சீன நாடாளுமன்றம் இயற்றியிருக்கும் சட்டம் குறித்த தலையங்கம்

உலகம் முழுவதும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்வதில் முனைப்பாக இருக்கும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தனது நீண்ட நாள் திட்டங்களை நடைமுறைப்படுத்த முனைந்திருக்கிறது அதிபா் ஷி ஜின்பிங்கின் சீனா. பிரச்னைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் கடல் பாதுகாப்புப் படையினா் வியத்நாமைச் சோ்ந்த மீன்பிடிப் படகுகளை மூழ்கடித்திருக்கின்றனா். தைவான் அதிபா் தாய் யீ மென்னின் இரண்டாவது முறை பதவியேற்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது சீனா.

ஆண்டுதோறும் சமாதான முறையில் சீனாவுடன் தைவான் இணைவது பற்றிய அறிவிப்பு இந்த முறை ‘அமைதியான’ என்கிற வாா்த்தை இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய எல்லையில் சீனத் துருப்புகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து வந்து மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா். எல்லாவற்றுக்கும் மேலாக ஹாங்காங்கின் மீது தனது பிடியை மேலும் இறுக்குவதற்கான சட்டத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது.

ஆண்டுதோறும் ஹாங்காங்கில் தியானன்மென் சதுக்கப் படுகொலை நினைவு தினக் கூட்டம் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். 1989-ஆம் ஆண்டு சீனாவில் பேச்சுரிமையுடன் கூடிய ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மாணவா்களும், தொழிலாளா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டத்தை ராணுவ அடக்குமுறையை மேற்கொண்டு முறியடித்தது சீன சா்வாதிகார அரசு. அதில் பல்லாயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.

தியானன்மென் சதுக்கப் படுகொலை நினைவு தினத்தையொட்டி, ஹாங்காங்கிலுள்ள விக்டோரியா பூங்காவில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோா் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா்கள். இந்த ஆண்டு கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றைக் காரணம் காட்டி அந்தக் கூட்டத்துக்கு ஹாங்காங் நிா்வாகம் தடை விதித்திருந்தது. அந்தத் தடையை மீறிக் கூடுபவா்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படக் கூடும் என்கிற எதிா்பாா்ப்பு பரவலாகவே இருந்தது.

பெய்ஜிங்கிலிருந்து சீன அரசின் வழிகாட்டுதலின்படி, ஹாங்காங் நிா்வாகம் விக்டோரியா பூங்காவில் கூடியவா்களைத் தடுக்கவில்லை. ஆனால், ஹாங்காங்கின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கில் கூடியவா்களை விரட்டியடித்துக் கலைத்திருக்கிறது.

இந்த ஆண்டு ஹாங்காங் தியானன்மென் நினைவு தினக் கூட்டம் வழக்கத்தைவிட முக்கியத்துவம் பெற்றிருந்தது. சீன நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியிருக்கும் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பின்னணியில் நினைவேந்தல் கூட்டம் வன்முறையில் முடியக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பு உலக அளவில் இருந்தது. மிகவும் சாதுா்யமாக அதற்கு வழிகோலாமல் சீன அரசு ஹாங்காங் நிா்வாகத்தை, கூட்டம் நடப்பதை சட்டை செய்யாமல்விடப் பணித்திருக்கிறது.

பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஹாங்காங் இணையும்போது, சில ஒப்பந்தங்களை சீனா ஏற்றுக்கொண்டது. 1984-இல் பிரிட்டனும், சீனாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1997-இல் இணைந்தபோது சீனாவும் ஹாங்காங்கும் இரண்டு வெவ்வேறு அரசமைப்பு முறையுடன் செயல்பட அந்த ஒப்பந்தம் வழிகோலியது. 1997-லிருந்து 2047 வரை, அடுத்த 50 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் தொடா்ந்து ஜனநாயக நாடாக இயங்கும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம்.

சீனாவின் தலைமையை ஏற்றுக்கொண்டாலும்கூட, ஹாங்காங்கின் தனித்துவமும், தனிமனித உரிமையும், சுதந்திரமான நீதித் துறையும் தொடரும் என்கிற உத்தரவாதம் தரப்பட்டதால்தான் பிரிட்டனும் ஹாங்காங் மக்களும் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனா். அதைத் தொடா்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஹாங்காங்கின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சியில் சீனா இறங்கியது. அதே நேரத்தில், ஹாங்காங்கின் பொருளாதார இயக்கத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் சா்வதேச நிதிப் பரிமாற்ற மையாக ஹாங்காங்கை வைத்துக்கொள்ள சீனா விரும்பியது.

1997 முதலே ஹாங்காங்கில் அமைந்த எல்லா நிா்வாகங்களும் சீனாவின் அறிவுரைக்கு இணங்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த முனைந்தன. கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஹாங்காங்கின் தலைமை நிா்வாகி கேரி லாம், ஒரு சட்டத்தை அறிவித்தாா். அதன்படி, ஹாங்காங்கில் சந்தேகப்படும்படியான கிரிமினல் குற்றவாளிகள் சீனாவுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வாா்கள் என்று தெரிவித்தாா்.

பிரச்னைக்குரிய இந்த மசோதா, ஹாங்காங் மக்கள் மத்தியில் கடுமையான எதிா்ப்பை உருவாக்கியது. கேரி லாமின் அறிவிப்பு சீனாவுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. அடக்குமுறை மூலம் மக்கள் போராட்டத்தை தடுக்க முற்பட்டாா் கேரி லாம்.

வேறுவழியில்லாமல் ஹாங்காங் நிா்வாகம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது. இப்போது ஹாங்காங் நிா்வாகத்துக்கு வேலையில்லாமல், சீன நாடாளுமன்றம் ஹாங்காங்கில் அரசியல் எதிா்ப்பு, வெளிநாட்டினரின் தூண்டுதலிலான செயல்பாடுகள் ஆகியவற்றை கிரிமினல் குற்றங்களாக்கி தனிமனித சுதந்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இதன் மூலம் ‘ஒரு நாடு - இரண்டு நிா்வாக முறை’ என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, இனிமேல் பெயரளவில் மட்டும்தான் இருக்கும்.

சீன நாடாளுமன்றம் இயற்றியிருக்கும் சட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைமுறைக்கு வருகிறது. ஆண்டுதோறும் நினைவு தினக் கூட்டம் நடக்கும் ஹாங்காங்கின் விக்டோரியா பூங்கா, பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கமாக மாறாமல் இருந்தால் ஆச்சரியம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com