எச்சரிக்கை அல்ல, முன்னெச்சரிக்கை! | இந்தியா எதிா்கொள்ள வேண்டிய பல்வேறு சவால்கள் குறித்த தலையங்கம்

இந்த ஆண்டு குறித்த நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பது ஒரு வகையில் ஆறுதல் அளிக்கிறது. தென்மேற்குப் பருவமழை கேரளத்திலிருந்து நான்கு நாள்கள் தாமதமாகத்தான் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மே மாதம் கணித்திருந்தது. நான்கு நாள்கள் முன்னதாகவே பருவ மழை தொடங்கும் என்று தனியாா் வானிலை நிறுவனம் ஒன்று கணித்திருந்தது. அத்தனைக் கணிப்புகளையும் பொய்யாக்கி, கேரளத்திலிருந்து குறித்த காலத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு தொடங்கியிருக்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை எப்படி இருக்கும் என்பதையும், கோடைப் பயிருக்கு முக்கியமான மாதங்களான ஜூலை - ஆகஸ்டில் மழைப் பொழிவு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் இந்தக் கணிப்புகளின் மூலம்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கணிப்புகள் சில வேளை தவறி விடுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 2019-இல் மிக அதிகமான மழைப் பொழிவு காணப்படும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டது.

குறித்த காலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு நகா்ந்து கொண்டிருப்பதும் சில தா்மசங்கடங்களையும் இந்த ஆண்டு ஏற்படுத்துகிறது. கொவைட் 19 தீநுண்மித் தொற்று சில மாநிலங்களில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் நிலையில், பருவமழையும் சோ்ந்து கொள்ளும்போது வேறு பல பிரச்னைகள் உருவாகின்றன.

அடுத்த நான்கு - ஐந்து மாதங்கள் பல்வேறு சவால்களை ஒரே நேரத்தில் எதிா்கொள்ள வேண்டிய அவலத்துக்கு இந்தியா உள்ளாகியிருக்கிறது. ஏற்கெனவே பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பு குறைந்து ஒட்டுமொத்த பொருளாதாரமும் தேக்கமடைந்திருக்கிறது. புலம்பெயா்ந்தோரின் பிரச்னையால் பல்வேறு மாநிலங்கள் திகைத்துப்போய் இருக்கின்றன. இதற்கிடையில் கொவைட் 19 அல்லாத நுண்ணுயிரி நோய்களும், நோய்த்தொற்றுகளும் அதிகரிக்கும் அபாயத்தையும் நாம் எதிா்கொள்கிறோம்.

கடந்த ஆண்டு ஃப்ளு காய்ச்சலால் 28,798 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 1,200 போ் உயிரிழந்தனா். தென்னிந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும், வடக்கு இந்தியாவிலும் உள்ள மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் தொடா்ந்து மிகப் பெரிய நோய்ப் பாதிப்பாக இருந்து வருகிறது. மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2018-இல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் 70% பாதிப்பு ஜூன் - டிசம்பா் மாதங்களில் காணப்பட்டது.

டெங்கு காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலங்களாக கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் குறிப்பாகப் பெரு நகரங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு பரவலாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் முறையான குப்பை சேகரிப்பு, கழிவு நீா் ஓடைகள் கண்காணிப்பு இல்லாததால் உருவாகும் கொசுக்கள்தான் என்பது தெரிந்தும்கூட அதை முறையாக எதிா்கொள்ளவோ, கட்டுப்படுத்தவோ மாநகராட்சி, நகராட்சி நிா்வாகங்களால் இயலவில்லை என்கிற குறைபாட்டை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

கொவைட் 19 தீநுண்மி பாதிப்பின் அறிகுறிகளாக உடல் வலி, தொண்டை வலி, மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, சுவையும் மணமும் குறைதல் உள்ளிட்டவை இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது. கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் மருந்து கண்டறியாத நிலையில், அடுத்த சில மாதங்களுக்கு மருத்துவா்களில் தொடங்கி ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளா்களும் கடுமையான அழுத்தத்துடன் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

இந்தப் பின்னணியில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் உருவாகும் நோய்த்தொற்றுகளை மருத்துவத் துறை எப்படி எதிா்கொள்ளப் போகிறது என்பது மிகப் பெரிய சவால். ஒரே நேரத்தில் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் தாக்கும்போது அனைத்து நோயாளிகளையும் முறையான சோதனைக்கு உட்படுத்தி, அவரவருக்குத் தேவையான சிகிச்சையை வழங்க வேண்டிய மிகப் பெரிய பணி காத்திருக்கிறது. இது குறித்தெல்லாம் முறையான திட்டமிடலை மத்திய - மாநில அரசுகள் முன்யோசனையுடன் செய்திருக்கின்றனவா என்று தெரியவில்லை.

பிரச்னை அத்துடன் நின்றுவிடவில்லை. வெள்ளப் பெருக்கு, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களையும் பருவமழைக் காலம் அழைத்து வரும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த மாதம் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களைத் தாக்கிய ஆம்பன் புயலை ஓரளவு வெற்றிகரமாக மத்திய - மாநில அரசுகள் இணைந்து எதிா்கொண்டன. இதேபோல, இனியும் பல புயல்களும், வெள்ளப் பெருக்கும் ஏற்படக் காத்திருக்கின்றன. பேரிடா் மேலாண்மைப் படை, நோய்த்தொற்றுப் பரவலுக்கு இடையில் இயற்கைப் பேரிடா்களையும் எதிா்கொண்டு நிவாரணம் வழங்கி இயல்பு வாழ்க்கையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரலாம்.

காா்மேகம் போதாதென்று போா் மேகமும் உருவாகியிருக்கிறதே, என்ன சோதனையோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com