பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான்! | ஹெச்1பி நுழைவு அனுமதிக்குத் தடை அறிவிப்பு குறித்த தலையங்கம்

ஹெச்1பி நுழைவு அனுமதி நிறுத்தப்பட்டிருப்பது, அதிபர் டிரம்ப்பின் தேர்தல் உத்தி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஏனைய துறைகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 15%-க்கும் அதிகமாக இருக்கும்போது, தொழில்நுட்பத் துறை


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச்1பி நுழைவு அனுமதி (விசா) குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தவில்லை.

பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கும், பணியாற்றுவதற்கும் தடைகளை விதிப்பது குறித்த அவரின்  அறிவிப்பு எதிர்பார்த்ததுதான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலின்போதே அவர் கொடுத்த வாக்குறுதிதான் இது. நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த ஆண்டு முழுவதும் இனிமேல் வழங்க இருக்கும் ஹெச்1பி நுழைவு அனுமதிக்குத் தடை விதித்திருக்கிறார் அதிபர் டிரம்ப். பொது முடக்கத்தாலும், தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும் வேலை இழந்தவர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும்  உதவுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்திருக்கிறார்கள் என்றும், அவர்களுக்குப் பதிலாக வெளிநாட்டினருக்கு அந்த வேலையைக் கொடுக்க சில தொழில் நிறுவனங்கள் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது அந்த அறிக்கை.

அமெரிக்காவில் ஹெச்1பி நுழைவு அனுமதி என்பது ஆறு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றவும், அந்தக் காலகட்டத்தில் சொந்தமாக அசையாச் சொத்துகளை வாங்கிக் கொள்ளவும்  உரிமை வழங்குகிறது. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைவாய்ப்புத் தேடியும், பல்கலைக்கழகங்களில் படிக்கவும் செல்லும் இளைஞர்கள் இந்த நுழைவு அனுமதி வரம்பில் வருவார்கள். 

அதிபர் டிரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து சுமார் 5.25 லட்சம் பேர் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள். ஏற்கெனவே நுழைவு அனுமதி பெற்று அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை என்றாலும், வெளிநாடுகளுக்கோ தாய்நாட்டுக்கோ சென்றுவிட்டவர்கள், மீண்டும் அமெரிக்காவில் நுழைந்து பணியாற்றுவது  இந்த ஆண்டு இறுதிவரை தடை செய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை வழங்கப்பட்டிருக்கும் 3.88 லட்சம் ஹெச்1பி  நுழைவு அனுமதிகளில் சுமார் 2.78 லட்சம், அதாவது 78%, இந்தியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை. தங்களது வர்த்தகத்தை அதிகரிக்கவும், புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கவும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஊழியர்களை அனுப்பும் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், ஹெசிஎல் உள்ளிட்ட  நிறுவனங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைவிட  அதிகமாக பாதிக்கப்பட இருப்பது அமெரிக்காதான். அறிவியல் தொழில்நுட்பத்திலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா மிகப் பெரிய வெற்றியை அடைந்திருப்பது வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து  குடியேறியவர்களால்தான். ஜாதி, மதம், இனம் பார்க்காமல் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் சூழல் அமெரிக்காவில் இருந்ததால், உலகெங்கிலும் இருந்து, குறிப்பாக ஆசிய நாடுகளிலிருந்து, அதிலும் இந்தியாவிலிருந்து படித்த இளைஞர்கள் பலர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.

ஹெச்1பி நுழைவு அனுமதி நிறுத்தப்பட்டிருப்பது, அதிபர் டிரம்ப்பின் தேர்தல் உத்தி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஏனைய துறைகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 15%-க்கும் அதிகமாக இருக்கும்போது, தொழில்நுட்பத் துறையில் அது வெறும் 2.8% மட்டுமே. மேலும், கணினித் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை, விண்வெளி ஆய்வு, மருத்துவ ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஈடுபட அமெரிக்கர்கள் இல்லை என்கிற நிலையில், இதனால் அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியாமல் போவதும், தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாமல் தடுக்கப்படுவதும்,  அண்டை நாடான கனடாவுக்கும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும்தான் சாதகமாக மாறும். இந்த வாய்ப்பை சீனாவும் பயன்படுத்திக் கொள்ளும். "சுயசார்பு இந்தியா' என்று அறிவித்திருக்கும் மத்திய அரசு, அதற்கேற்ற சூழலை ஏற்படுத்துமானால், நமது பலவீனத்தை பலமாக்கிக் கொள்ள இதுவே வாய்ப்பாகவும் அமையும்.

நோபல் பரிசு பெற்ற இந்தியர்களான ஹர்கோபிந்த் குரானா, எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமார்த்திய சென், அபிஜித் பானர்ஜி என்று அனைவருமே அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான். இந்தியாவில் இருந்திருந்தால் இவர்கள் வெற்றிகரமாக ஆராய்ச்சியை மேற்கொண்டு நோபல் விருது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதற்கான சூழலை இந்தியா ஏற்படுத்தித் தருவதில்லை.

அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது மாணவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும், தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோரும் குழந்தைகளும்கூடத்தான். வெளிநாடுகளில் இருந்தால், அவர்கள் ஹெச்1பி  நுழைவு அனுமதி பெற்றுத் திரும்ப முடியாது.

அமெரிக்காவில் குடியேறியவர்களை ஒரே நொடியில் தனது எதிரிகளாக்கிக் கொண்டிருக்கிறார் அதிபர் டிரம்ப். 2019 செப்டம்பர் 22-இல் ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டு அமெரிக்கவாழ் இந்தியர்களின் ஆதரவைக் கோரிய அதிபர் டிரம்ப்பா இப்போது இப்படியொரு முடிவெடுத்திருக்கிறார் என்று வியப்படைய வேண்டாம். இனிமேல் எல்லா நாடுகளும் இதைத்தான் பின்பற்றப் போகின்றன. அதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தீரும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com