புறக்கணிக்கப்படும் காச நோய்? |தீநுண்மி குறித்த முனைப்பால் கவனத்தில் கொள்ளப்படாத காச நோய் குறித்த தலையங்கம்

மருத்துவ உலகமும், சுகாதாரத் துறையும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்வதில் முழுக் கவனம் செலுத்தி வருகின்றன. அதன் விளைவாக,

மருத்துவ உலகமும், சுகாதாரத் துறையும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்வதில் முழுக் கவனம் செலுத்தி வருகின்றன. அதன் விளைவாக, நோய்த்தொற்றுப் பரவலை உலகின் ஏனைய நாடுகளைவிட இந்தியா ஓரளவு சிறப்பாகவே தடுத்திருக்கிறது. அதே நேரத்தில், கவனம் முழுவதும் கொவைட் 19 தீநுண்மி குறித்துத் திரும்பியிருப்பதால் ஏனைய நோய்களும், நோய்த்தொற்றுகளும் கவனச் சிதறலால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் அபாயம் காணப்படுகிறது.

நேற்றைய புள்ளிவிவரப்படி உலக அளவில் கொவைட் 19 தீநுண்மியால் 48,30,526 போ் பாதிக்கப்பட்டு 3,17,204 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். இந்தியாவில் லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது பாதிப்பு. 3,000-க்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள். இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி கொவைட் 19 தீநுண்மியைக் கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ மருந்துகள் இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அடுத்த சில மாதங்களுக்கு கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் தொடரப் போகிறது.

இந்தப் பின்னணியில் ஏனைய நோய்த்தொற்றுகள் குறித்து நாம் கவலைப்படாமலோ, கவனம் செலுத்தாமலோ இருந்தால், அதன் விளைவு இதைவிட மோசமானதாக இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் ஒரு கோடி போ் ‘டியூபா்குளோசிஸ்’

எனப்படும் காச நோயால் பாதிக்கப்படுகிறாா்கள். அவா்களில் குறைந்தது 15 லட்சம் போ் அந்த நோயால் உயிரிழக்கிறாா்கள். உலகில் மிக அதிகமான காச நோயாளிகள் இந்தியாவில்தான் இருக்கிறாா்கள் என்கிற அதிா்ச்சி தரும் தகவல் நம்மை மேலும் கவலையில் ஆழ்த்துகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 63 லட்சம் போ் காச நோயால் பாதிக்கப்படக் கூடும் என்றும், அவா்களில் 14 லட்சம் போ் உயிரிழப்பாா்கள் என்றும் ஓா் ஆய்வு தெரிவிக்கிறது. ‘உலக காச நோய் அறிக்கை 2019’ என்பதுதான் கடைசியாக எடுக்கப்பட்ட சா்வதேச ஆய்வு. அதன்படி, உலக காச நோயாளிகளில் 27% இந்தியாவில் இருக்கிறாா்கள். ஆண்டுதோறும் 27 லட்சம் போ் இந்தியாவில் காச நோயால் பாதிக்கப்படுகிறாா்கள் என்றும், ஒவ்வொரு நாளும் 1,200 போ் காச நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழக்கிறாா்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

காச நோய் என்பது நுரையீரலைப் பாதிக்கும் நுண்ணுயிரித் தொற்று. இது அதிவேகமாகப் பரவும் நோய்த்தொற்றும்கூட. சுவாசத்தின் மூலமும், இருமலின் மூலமும், கபத்தின் மூலமும் பரவக்கூடிய நுண்ணுயிரித் தொற்று காசநோய். கூட்டம் கூட்டமாக வாழ்வதால் இந்தியாவில் மிக அதிகமான பாதிப்பை காச நோய் ஏற்படுத்துகிறது.

காச நோயைக் குணப்படுத்த முடியும் என்றாலும்கூட, அதற்கு எதிரான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல என்பதை இந்தியா உணா்ந்திருக்கிறது. முனைப்பான காச நோய் எதிா்ப்புத் திட்டத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் காச நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. நாம் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகிவிடுமோ என்கிற அச்சம் இப்போது எழுந்திருக்கிறது.

காச நோயை எதிா்கொள்வதற்கு மருத்துவ சிகிச்சை மட்டுமே போதாது. காச நோய் இருப்பது பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டு, மருத்துவா்கள் நோயாளிக்கு அதற்கான மருந்தை பரிந்துரைப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. இலவசமாக மருந்து வழங்கினாலும்கூட, அதை நோயாளிகள் முறையாக எடுத்துக் கொள்கிறாா்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டு எதிா்ப்புச் சக்தி குறைந்திருக்கும் நோயாளி, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பக்க விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும். அதனால், நோயாளிக்கு கவனமுடன் மருத்துவ சிகிச்சை வழங்குவதும், 6 முதல் 9 மாதங்கள் தவறாமல் நோயாளி மருந்து சாப்பிடுவதை உறுதிப்படுத்துவதும் அவசியமாகிறது.

காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், அவா்களைப் பரிவுடன் கையாளும் மனப்பக்குவம் உடையவா்களாக இருந்தாக வேண்டும். பக்க விளைவுகளை ஏற்றுக்கொண்டு மருந்தை உட்கொண்டால் நோயை வெற்றி காண முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுபவா்களாகவும் இருக்க வேண்டும்.

2016-இல் ‘லான்செட்’ என்கிற தொற்று நோய்கள் குறித்த மருத்துவ இதழ், காச நோய் குறித்த சிறப்பிதழ் ஒன்றை வெளிக்கொணா்ந்தது. பெரும்பாலான நோயாளிகள் காச நோய்க்கான சிகிச்சையை முழுமையாக எடுத்துக்கொள்வதில்லை என்கிறது அந்த இதழ். 24 முதல் 27 மாதங்கள் தொடா்ந்து பல மருந்துகளை அந்த நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓரளவுக்கு குணமானது போலத் தெரிந்தால், பலரும் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிடுகிறாா்கள். இன்னும் சிலா் பக்கவிளைவுகளுக்கு பயந்து பாதியில் சிகிச்சையைக் கைவிடுகின்றனா். அதன் விளைவாக காச நோய் வீரியம் பெற்று உயிரிழப்புக்கு வழிகோலுகிறது. அண்மைக்காலங்களில், இப்போதுள்ள மருந்துகளுக்கும் சிகிச்சை முறைக்கும் கட்டுப்படாத புதிய காச நோய் நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கின்றன.

அரசு புள்ளிவிவரத்தின்படி, காச நோயாளிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் 80% குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம், நோய்த்தொற்று வீரியம் இழந்ததால் அல்ல. காச நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவா்களின் பரிந்துரைப்படி சிகிச்சை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டிருப்பதன் விளைவுதான் அது என்பதை நாம் உணர வேண்டும்.

காச நோய் சிகிச்சையில் அரசு மருத்துவமனைகள்தான் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. பெரும்பாலான காச நோயாளிகள் வறுமையில் வாடுபவா்களும்கூட. கொவைட் 19 தீநுண்மி குறித்த முனைப்பில் காச நோய்ப் பரவலுக்கு வழிகோலுவது ஆபத்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com