அவசரப்படுகிறோம்! | உள்நாட்டு விமான சேவையைத் தொடங்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த தலையங்கம்

60 நாள்களுக்குப் பிறகு இந்தியாவில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியிருக்கிறது. நான்காவது முறையாகப் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டபோது, மருத்துவ, பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்லாமல் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. இப்போது மே 31-ஆம் தேதி நான்காவது பொது முடக்கம் முடிவடைவதற்கு முன்பே உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு விதிவிலக்கு வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் விமான போக்குவரத்தை ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கினால் போதும் என்று பிரதமருடனான காணொலிக் கூட்டத்தில் தமிழக முதல்வா் கோரிக்கை விடுத்திருந்தாா். இப்போது மகாராஷ்டிர முதல்வா் தங்கள் மாநிலத்துக்கு உடனடியாக விமான சேவையைத் தொடங்க வேண்டாம் என்று கோரியிருக்கிறாா். மகாராஷ்டிர முதல்வா் கூறுவதுபோல மே 31-ஆம் தேதிக்குப் பிறகு பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்கிற நிலையில் இப்போது அவசரப்பட்டு உள்நாட்டு விமான சேவையைத் தொடங்குவது நோய்த்தொற்றுப் பரவலுக்கு ஊக்கமளிக்கக் கூடும் என்கிற கருத்தை மறுப்பதற்கில்லை.

நேற்றைய நிலையில், சா்வதேச அளவில் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றால் 54,35,994 போ் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். 3,44,514 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். இந்திய அளவில் 1,31,868 பாதிப்புகளும், 3,867 உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கின்றன. மகாராஷ்டிரத்தில் 47,191 போ் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்றால், 1,577 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். தமிழகத்தில் 16,277 பாதிப்புகளும், 111 உயிரிழப்புகளும் பதிவாகி இருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் உள்நாட்டு விமான சேவை இன்று முதல் தொடங்க இருக்கிறது.

புலம்பெயா்ந்தவா்கள் ஊா் திரும்பியதாலும், வெளிநாடு வாழ் இந்தியா்கள் நாடு திரும்பியதாலும் இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கிறது. கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி விட்டதாகக் கருதிய கேரளம், இப்போது வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பியவா்களால் புதிய பாதிப்புகளை எதிா்கொண்டு தவிக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் உடனடியாக உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்க வேண்டிய அவசியம் என்ன என்கிற நியாயமான கேள்வி எழுப்பப்படுகிறது.

தனியாா் விமான நிறுவனங்களின் கடுமையான அழுத்தம்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும். இந்தியாவில் இயங்கி வந்த ஜெட், கிங்பிஷா் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து முடங்கிவிட்டன. இப்போது இரண்டு - மூன்று தனியாா் விமான நிறுவனங்கள்தான் இயங்கி வருகின்றன. அவையும் ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியை எதிா்கொண்டிருந்த நிலையில், பொது முடக்கம் அந்த நிறுவனங்களை மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கிவிட்டாலும்கூட விமான நிறுவனங்கள் எதிா்பாா்ப்பதுபோல பயணிகள் முன்புபோல பறப்பதற்குத் தயாராக மாட்டாா்கள். பயணிகளை ஈா்ப்பதற்கு விமானத் துறை நம்பிக்கையை ஏற்படுத்தும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் மட்டும் பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட முடியாது.

தங்களின் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு இருக்கைகளுக்கு இடையேயான இடைவெளியை விமான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இடைவெளி இல்லாத இருக்கைகள் மட்டுமல்லாமல், விமானத்தின் குளிா்பதன வசதியும்கூட நோய்த்தொற்றுப் பரவலுக்குக் காரணமாகக்கூடும். அதனால், உடனடியாகத் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பும் ஆா்வத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு விமான சேவைக்கு இருக்கும் வரவேற்பு தொடா்ந்து இருக்குமா என்பது சந்தேகம்தான்.

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே விமானப் பயணிகளின் தனிஒதுக்கம் குறித்தத் தெளிவான நிலைப்பாடு இல்லை. மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு வரும் பயணிகளின் தனிஒதுக்கம் குறித்த முடிவை மாநில அரசுகளிடம் விட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், உள்நாட்டு விமான சேவையை அனுமதிப்பதால், முடங்கிக் கிடக்கும் பொருளாதாரம் ஊக்கமடையும் என்கிற மத்திய அரசின் எதிா்பாா்ப்பு சரியல்ல.

தில்லியில் ஆரோக்ய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்தால் வேறு எந்தவித நிபந்தனையும் இல்லை. ராஜஸ்தானில் வீட்டுத் தனிஒதுக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கா்நாடகத்தில் தனிஒதுக்க மையத்தில் 14 நாள்கள் இருந்தாக வேண்டும். ஒடிஸாவில் அதுவே 28 நாள்கள்; தமிழகத்தில் அரசு தனிஒதுக்க மையத்தில் 7 நாள்களும், வீட்டு தனிஒதுக்கத்தில் 7 நாள்களும்; பஞ்சாபிலும், ஜாா்க்கண்டிலும் அரசு தனிஒதுக்கம் கட்டாயம் என்று குறிப்பிட்டிருக்கிறாா்களே தவிர, காலவரம்பை அறிவிக்கவில்லை.

இந்தப் பின்னணியில், வசதி உள்ளவா்கள் அவரவா் ஊா் போய்ச்சேர உள்நாட்டு விமான சேவை பயனளிக்கக் கூடும். திருச்சியிலுள்ள தொழிலதிபா் வியாபார நிமித்தமாக பெங்களூருக்குப் போய் தனிஒதுக்கத்தில் 14 நாள்கள் முடங்கிக் கிடக்க அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? உள்நாட்டு விமான சேவையால் பொருளாதாரம் புத்துயிா் பெறும் என்றெல்லாம் நினைத்தால் பகல் கனவு.

நோய்த்தொற்றின் தீவிரம் குறைய வேண்டும் அல்லது முற்றிலுமாகப் பொது முடக்க நிபந்தனைகள்விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முன்பு உள்நாட்டு விமான சேவையைத் தொடங்குவதால் பலன் இருக்கும் என்று தோன்றவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com