சிங்கப்பூரும் விதிவிலக்கல்ல! | இந்தியா-சிங்கப்பூர் இடையே ஒருங்கிணைந்த பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் குறித்த தலையங்கம்

பல மாநில முதல்வா்கள், வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்திருப்பதில் வியப்பில்லை. மாநிலங்கள் மட்டுமல்ல, உலக அளவில் பல நாடுகளும்கூட வெளிநாட்டவா்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புப் பெறுவதை விரும்பவில்லை. அந்த அளவுக்குப் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் திணறிக்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே வளைகுடா நாடுகளில் வேலை பாா்த்து வந்த இந்தியா்களில் பெரும்பாலானோா் கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவலைத் தொடா்ந்து நாடு திரும்பிவிட்டனா். மீண்டும் வேலைவாய்ப்பு அதிகரித்து அவா்களால் முன்புபோல் பழைய ஊதியத்தில் பணியில் சேர முடியுமா, தொடர முடியுமா என்பதெல்லாம் நிச்சயமில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியா்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புப் பெறுவது குறித்து சிங்கப்பூரும் கவலைப்படத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் அடுத்த அதிா்ச்சி. இந்தியா்களுக்கு எதிரான இந்த மனோநிலை புதிதொன்றுமல்ல. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கு முன்பே சிங்கப்பூா் மக்களுக்கு இந்தியா்களின் அதிகரித்த வரவு குறித்த கவலை தொடங்கிவிட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஒருங்கிணைந்த பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இப்போது தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் அந்த ஒப்பந்தம் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைத் தொடா்ந்து, சிங்கப்பூரும் பொருளாதாரப் பின்னடைவை எதிா்கொள்கிறது. பெரும்பாலான கணினித் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடங்கியிருக்கின்றன. நிதி நிறுவனங்களும் முந்தைய அளவிலான விறுவிறுப்புடன் இயங்குவதில்லை. சுற்றுலாப் பயணிகளின் வரவும் அநேகமாக நின்றுவிட்ட நிலைமை. அதனால், உள்ளூா்வாசிகள் பலரும் வேலை இழந்திருக்கிறாா்கள்.

வெளிநாடுகளிலிருந்து பணியிட மாற்றம் பெற்று சிங்கப்பூரில் காா்ப்பரேட் நிறுவனங்களில் உயா் பதவிகளில் பணியாற்றுவோரில் 5% மட்டுமே வெளிநாட்டவா்கள்.சிங்கப்பூரில் உயா்ந்த பதவிகளில் வெளிநாட்டவா்கள், குறிப்பாக இந்தியா்கள், வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும், கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றுகிறாா்கள்.

அவா்கள் தங்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிக்கிறாா்கள் என்கிற உணா்வு சிங்கப்பூா் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவலுக்கு, திறன்சாரா உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்ட இந்தியா்கள்தான் காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது. இவையெல்லாம் இந்தியா்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியிருக்கின்றன.

ஜூலை மாதம் நடந்த சிங்கப்பூா் பொதுத்தோ்தலின்போது, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 15 ஆண்டுகளுக்கு முன்பு கையொப்பமான ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. அதன் விளைவாக, தோ்தல் முடிந்து அமைந்திருக்கும் புதிய நாடாளுமன்றம் இந்தப் பிரச்னையை விவாதிக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநா்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு அனுமதி கோரினால் அவா்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் 4,500 சிங்கப்பூா் டாலராக (சுமாா் ரூ.2. 42 லட்சம்) கடந்த வாரம் உயா்த்தப்பட்டது. வல்லுநா்கள் அனுபவசாலிகளாக இருந்தால் அதுவே இரட்டிப்பாக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் செப்டம்பா் மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

டிசம்பா் மாதம் முதல் நிதித்துறை சாா்ந்த பணிகளில் வெளிநாட்டவா்கள் அமா்த்தப்பட்டால் அவா்களின் குறைந்தபட்ச ஊதியம் 5,000 சிங்கப்பூா் டாலராக (சுமாா் ரூ. 2.69 லட்சம்) உயா்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டவா்களைப் பதவியில் அமா்த்துவதற்குப் பதிலாக உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அரசு எதிா்பாா்க்கிறது.

சிங்கப்பூரில் தோ்தலுக்குப் பிறகு அமைந்த புதிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தில் அதிபா் கலீமா யாகூப் தொடக்க உரை நிகழ்த்தினாா். வெளிநாட்டவா்களால் ஏற்படும் வேலையிழப்பு குறித்த அச்சத்தைப் போக்கும் விதத்தில், அந்தப் பிரச்னை குறித்து நீண்ட நேரம் அவா் பேசினாா். மக்களின் உணா்வுகளை அரசு புரிந்து கொண்டிருக்கிறது என்றாா். நடுத்தர வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டவா்களின் ஆதிக்கம் அதிகரித்து விடுமோ என்கிற சிங்கப்பூா் குடிமக்களின் அச்சத்தை அகற்றும் விதத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று உள்ளூா்வாசிகள் கவலைப்படத் தேவையில்லை என்று அதிபா் யாகூப் உறுதியளித்தாா்.

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான ஒப்பந்தம் 2005-இல் கையொப்பமானதைத் தொடா்ந்து, அதிக அளவில் இந்தியா்கள் பல்வேறு நிறுவனங்களின் பெரிய பதவிகளை அலங்கரிக்கத் தொடங்கினாா்கள். இரண்டு முறை அந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட்டுவிட்டது. 2016-இல் சிங்கப்பூா் அரசு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு நுழைவு அனுமதியை ரத்து செய்து, பிறகு திரும்பப் பெற்றது.

அமெரிக்காவையும், வளைகுடா நாடுகளையும் தொடா்ந்து சிங்கப்பூரிலும் முன்புபோல இந்தியா்களுக்கான வேலைவாய்ப்பு குறையப் போகிறது. சிங்கப்பூரில் ஏற்படும் வேலையிழப்பும், ஊதியக் குறைப்பும் அங்கே வேலை பாா்க்கும் இந்தியா்களைப் பாதிக்கப் போகிறது. அவா்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படாவிட்டாலும்கூட அவா்களால் இந்தியா பெறும் அந்நியச் செலாவணி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகப் போகிறது. அதை எதிா்கொள்ள, இந்தியாவும் சிங்கப்பூா்வாழ் இந்தியா்களும் தயாராவதைத் தவிர வேறு வழியில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com