பற்றி எரிகிறது காடு! | காட்டுத் தீ போல பரவிக்கொண்டிருக்கும் கொவைட்-19 குறித்த தலையங்கம்

நாடு தழுவிய அளவில் கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று காட்டுத் தீ போல பரவிக்கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவின் வனப் பகுதிகளில் கொள்ளை நோய்த்தொற்றைப்போலப் பரவிக் கொண்டிருக்கிறது காட்டுத் தீ. ஆசியாவின் இரண்டாவது பெரிய சூழலியல் மையமான மத்திய பிரதேசம், ஒடிஸô வனப் பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே பல வாரங்களாகக் காட்டுத் தீ  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல, கோடை தொடங்கிய சில வாரங்களிலேயே தெலங்கானாவில் 15,000-க்கும் அதிகமான காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. கடந்த கோடைக்காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் கடுமையான பாதிப்பு வனத் துறையினருக்கும் வனப் பகுதியில் வாழும் மக்களுக்கும் அச்சத்தை 
ஏற்படுத்தியிருக்கிறது.

வெள்ளப்பெருக்கும் காட்டுத் தீயும் ஒருசேரத் தாக்கும் விசித்திரம் உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு அரங்கேறியிருக்கிறது. பிப்ரவரி மாதம் கடுமையான காட்டாற்று வெள்ளத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகள் மூழ்கின. பல நாள்கள் தொடர்ந்த வெள்ளப் பெருக்கில் பலர் உயிரிழந்தனர். வாழ்வாதாரம் இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். 

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு ஊடகங்களில் முன்னுரிமை பெற்றதுபோல, அந்த மாநிலம் எதிர்கொண்ட காட்டுத் தீயால் ஏற்பட்ட நாசங்கள் அதிகம் பேசப்படவில்லை. கோடைக்காலத்தில்தான் பொதுவாக காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் முடிவடைந்த குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலம் எதிர்கொண்ட காட்டுத் தீ சம்பவங்கள் ஏராளம். 

உத்தரகண்ட் மாநில வனத்துறையினரின் செய்திக் குறிப்பின்படி, அக்டோபர் 1, 2020-க்கும் ஏப்ரல் 4, 2021-க்கும் இடையே 989 காட்டுத் தீ சம்பவங்கள் அம்மாநிலத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அதிகமான பல்லுயிர்ப் பெருக்கம் நிகழும் உத்தரகண்ட் மாநிலக் காடுகளில் சுமார் 1297.43 ஹெக்டேர் பகுதி எரிந்து சாம்பலாகியிருக்கிறது. கடந்த 2000 முதல் இதுவரை மாநில வனப் பகுதியின் 48,000 ஹெக்டேர் காட்டுத் தீக்கு உள்ளாகி கருகியிருக்கிறது. 

கடந்த ஆண்டு இதே பருவத்தில் உத்தரகண்ட் சந்தித்த காட்டுத் தீ சம்பவங்களின் எண்ணிக்கை வெறும் 39 தான். 

தற்போது பதிவாகியிருக்கும் 989 நிகழ்வுகளைக்கூட குறைத்து  மதிப்பிடப்பட்டவை என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 

பொதுவாகவே வெள்ளப்பெருக்கு என்பது மழைக்காலத்திலும், காட்டுத் தீ என்பது கோடைக்காலத்திலும் எதிர்கொள்ளப்படும் சம்பவங்கள். குளிர்காலத்தின் முதல் மூன்று மாதங்கள் இமயமலைப் பகுதியின் அடிவாரமும் நடுப் பகுதியும் மிகவும் மிதமாகவும் அமைதியாகவும் இருப்பது வழக்கம். அமைதி தேடி பலரும் இமயமலையை நாடும் பருவமும் அதுதான். அப்படிப்பட்ட பருவத்தில் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கும், அதிக அளவிலான காட்டுத் தீயும் சர்வதேச அளவிலேகூட பல ஆய்வாளர்களை 
ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன.

ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தரகண்ட் மாநில வனப்பகுதியில் தொடங்கிய காட்டுத் தீ இன்னும் அடங்கியபாடில்லை. அந்த மாநிலத்தின் இமயமலைப் பகுதியிலுள்ள காடுகளின் பெரும்பகுதி காட்டுத் தீயால் அழிவை எதிர்கொண்டு வருகிறது. வனப்பகுதியில் வசிப்போருக்கு காட்டுத் தீ புதிதல்ல என்றாலும்கூட இதுபோல பருவநிலை மாறி வனப் பகுதிகளில் தீப்பிடிப்பதும், அது அணையாமல் தொடர்ந்து காடுகள் எரிந்து கொண்டிருப்பதும் முன்னெப்போதும் எதிர்கொள்ளாத புதிய அனுபவம். அதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

காட்டுத் தீ முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியதும் அல்ல. ஒருவகையில் சூழலியல் சமநிலையை நிலைநிறுத்த காட்டுத் தீ உதவுகிறது. இயற்கையாக உருவாகும் காட்டுத் தீ அதிகம் நீண்டு நிற்காமல் தானாகவே அணைந்துவிடும். ஆனால், இப்போதுபோல தொடர்ந்து சில வாரங்கள் காட்டுத் தீ எரிந்து கொண்டிருப்பதற்கு பல செயற்கைக் காரணங்களும், சில இயற்கைக் காரணிகளும் கூறப்படுகின்றன. குறைவான மழை, அதிகரித்த கோடை இரண்டுமே இமயமலைப் பகுதியின் காடுகள் சட்டென்று தீப்பற்றிக் கொள்வதற்கான காரணங்கள். பருவநிலை மாற்றத்தின் விளைவுதான் அது. 

காட்டுத் தீ உருவாவதற்கு வனப்பகுதியில் காணப்படும் ஆக்கிரமிப்புகளும் மனிதத் தலையீடும்கூட காரணங்கள். வன விலங்குகளை விரட்டுவதற்கு உருவாக்கப்படும் நெருப்பின் விளைவால் காடுகள் பற்றிக்கொள்வதும், விவசாய பயன்பாட்டுக்காக வனப்பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டுமென்றே உருவாக்கப்படும் காட்டுத் தீயும்கூட இந்த நிலைமையை ஏற்படுத்தி விடுகின்றன.

காட்டுத் தீ பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கிறது. காடுகள் அழியும்போது அதன் தொடர் விளைவாக மழைப்பொழிவு குறைந்து கோடையின் வெப்பம் அதிகரிக்கிறது. காட்டுத் தீயை இயற்கைச் சீற்றமாகவோ, பாதிப்பாகவோ தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏன் கருதுவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது. 

சர்வதேச நிகழ்வுகளிலிருந்து இந்தியா பாடம் படிக்கவில்லை. காட்டுத் தீயை எதிர்கொள்வதற்கான தொழில் நுட்பமும் மனித வளமும் நம்மிடம் இல்லை. வளர்ச்சி என்கிற பெயரில் சுற்றுச்சூழல் குறித்த கவலையே இல்லாமல் பல திட்டங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. 

அரசியல் தலைவர்கள் தங்களது  சந்ததியர் குறித்து கவலைப் படுகிறார்களே தவிர, வருங்கால இந்திய சந்ததியினர் குறித்துக் கவலைப்படுவதாக தெரியவில்லை. அதனால்,  காட்டுத் தீ அடங்காது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com