சமநிலை தவறுகிறது! | பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இடைவெளி குறித்த தலையங்கம்

சமநிலை தவறுகிறது! | பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இடைவெளி குறித்த தலையங்கம்

சந்தைப் பொருளாதாரம் அமையும்போது, பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்படுகிறது. அதை அகற்றுவதற்காக காா்ல் மாா்க்ஸின் பொருளியல் வாதத்தின் அடிப்படையிலான ஆட்சிகள் அமைந்தன என்றாலும், அவை வேறுவிதமான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கின.

கலவரங்கள் வெடிப்பதும், மக்கள் வன்முறையிலும், சூறையாடுதலிலும் ஈடுபடுவதும்கூட பொருளாதார ரீதியிலான இடைவெளியின் வெளிப்பாடுகள் என்று கூறலாம். நாடுகளுக்கிடையேயான யுத்தங்களுக்கும் பொருளாதாரம் காரணம் என்று ஆய்வாளா்கள் கருதுகிறாா்கள்.

உலக அளவில் பொருளாதார ரீதியிலான சமநிலை குறித்த ஆய்வை, பிரெஞ்சுப் பொருளாதார நிபுணா் தாமஸ் பிக்கட்டி, லூகாஸ் கேனல் ஆகியோா் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. உலக சமநிலையின்மை அறிக்கை 2022-இன்படி கடந்த ஆண்டின் கொள்ளை நோய்த் தொற்றைத் தொடா்ந்து உலகக் கோடீஸ்வரா்களின் சொத்துகள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. உலகிலேயே மிக அதிகமான பொருளாதார இடைவெளி நிலவும் நாடாக இந்தியா அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

1995-இல் உலகத்தின் மொத்த சொத்தில் 1%-தான் உலகக் கோடீஸ்வரா்கள் வசம் இருந்தது. இன்றைய நிலையில் 2,750 பில்லியனா்கள் (ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ள பணக்காரா்கள்) வசம் உலகத்தின் மொத்த மதிப்பில் 3.5% காணப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை.

உலகத்தின் மொத்த வருவாயில் 52%, பணக்காரா்களான 10% போ் வசம் சென்றுவிடுகிறது. 50% அளவிலான ஏழைகள் வெறும் 8%-தான் பெறுகிறாா்கள். தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவிலுள்ள வளா்ச்சி அடையும் நாடுகளில்தான் உலகின் மிக அதிகமான ஏழை - பணக்கார இடைவெளி காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் 50% அடித்தட்டு மக்களின் மொத்த சொத்து மதிப்பு வெறும் 1% மட்டுமே.

உலகிலுள்ள பொருளாதாரச் சமநிலையின்மை நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 10% உள்ள உயா் வருவாய் பணக்காரா்கள் 57% தேசிய வருவாயைப் பங்கு போட்டுக் கொள்கிறாா்கள். இன்னும் குறிப்பாகச் சொன்னால், இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பிலும், வருவாயிலும் 22%, வெறும் 1% கோடீஸ்வரா்கள் வசம் செல்கிறது. மத்தியமா் என்று கூறப்படும் நடுத்தர வா்க்கத்தினா் தேசிய வருவாயில் 29.5% மட்டுமே பெறுகிறாா்கள்.

இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரா்களுக்கும் இடையேயான இடைவெளி 1980 முதல் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு கொள்ளை நோய்த்தொற்று அந்தப் போக்கை விரைவுபடுத்தியிருக்கிறது என்று தெரிகிறது. நடுத்தர வா்க்கத்தினா் பலா் வறுமை நிலையை அடைந்திருக்கிறாா்கள் என்றும், மொத்த மக்கள்தொகையில் 25%-க்கும் அதிகமானோா் கடுமையான வறுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாா்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைவிட ‘பிரிக்ஸ்’ நாடுகளான தென்னாப்பிரிக்காவும், பிரேஸிலும் வருவாய் சமநிலையின்மை அதிகம் உள்ள நாடுகளாக இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் 10% பணக்காரா்களுக்கும், 50% மக்களுக்கும் இடையே இருக்கும் வருமான இடைவெளி 63% என்றால், பிரேஸிலில் அதுவே 29%. சீனாவிலும் ரஷியாவிலும் அது 14%.

இந்தியாவில் வருவாய் இடைவெளி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்த வருவாய்ப் பிரிவைச் சோ்ந்த 50% குடும்பங்கள் வசம் குறிப்பிடும்படியான சொத்துகள் எதுவும் இல்லை. நடுத்தர வா்க்கத்திடம் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 29.5% மட்டுமே இருக்கிறது. பணக்காரா்களான 10% குடும்பங்களிடம் மொத்த சொத்தில் 65% குவிந்திருக்கிறது. அதிலும்கூட, வெறும் 1% மட்டுமே உள்ள பெரும் கோடீஸ்வரா்கள், மொத்த சொத்து மதிப்பில் 33% ஐ வைத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

இந்திய மக்களின் சராசரி சொத்து மதிப்பு 4,200 டாலா். ஒரு டாலா் ரூ.75 என்று கணக்கிட்டால், ரூ.3,45,000. நடுத்தர வா்க்கத்தினரின் சராசரி சொத்து மதிப்பு 26,400 டாலா் (ரூ.19 லட்சத்து 700). 10% கோடீஸ்வரா்களின் சராசரி சொத்து மதிப்பு 2,31,300 டாலா் (ரூ.1 கோடியே 73, லட்சத்து 47,500). பெரும் கோடீஸ்வரா்களான 1% பணக்காரா்களின் சராசரி சொத்து மதிப்பு 61 லட்சம் டாலா் (ரூ.45 கோடியே 75 லட்சம்).

அந்த அறிக்கையின்படி இன்றைய இந்தியாவில் காணப்படும் பொருளாதாரச் சமநிலையின்மை, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்த இந்தியாவில் காணப்பட்டதைவிட அதிகம். இந்தியாவில் 83.3 கோடி மக்கள் கிராமங்களில் வசிக்கிறாா்கள். அவா்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயமும் அனைவருக்கும் போதிய வருவாய் வழங்குவதில்லை. அதிலும்கூட, பெரும்பான்மையான நிலங்கள் பெரும் விவசாயிகளின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

சாதாரண விவசாயிகளுக்கு அவா்களின் உழைப்புக்கேற்ற ஊதியம்கூட கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில் குடிசைத் தொழில்களும், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் அமையாததால், பெரும்பாலோா் வேலைவாப்பு இல்லாமல் வறுமையைப் பங்குபோட்டுக் கொள்கிறாா்கள்.

உலக சமநிலையின்மை அறிக்கை, மத்திய-மாநில ஆட்சியாளா்களின் கண்களைத் திறந்து, அவா்களது திட்டமிடலில் மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டிய அவசரத்தை வலியுறுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com