சைபா் தாக்குதல்கள்! | அதிகரித்து வரும் சைபா் குற்றங்கள் குறித்த தலையங்கம் 

கோப்புப்படம்
கோப்புப்படம்

இணைய தொழில்நுட்ப வளா்ச்சியும், அதிகரித்துவரும் பயன்பாடும், கூடவே பல சிக்கல்களுக்கும் வழிவகுத்திருக்கின்றன. ‘சைபா் தாக்குதல்கள்’ என்று பரவலாக அழைக்கப்படும் இணையவழி ஊடுருவல்களும், பயன்பாட்டாளா்களின் கணக்குகளில் நுழைந்து முடக்குவதும் அதிகரித்து வருகின்றன. சைபா் குற்றங்கள் அதிகரித்து வருவது மட்டுமல்ல, திட்டமிட்டு நடைபெறுகின்றன என்பதுதான் உண்மை. அது தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறியிருப்பது அதைவிட ஆபத்தானது.

கடந்த வாரம் பிரதமா் நரேந்திர மோடியின் ‘ட்விட்டா்’ கணக்கு சிறிது நேரம் முடக்கப்பட்டது. ட்விட்டா் நிறுவனத்திடம் முறையிட்ட பிறகு அந்தக் கணக்கு சீரானது என்பது செய்தியாக வெளிவந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில், பிரதமா் நரேந்திர மோடியின் கணக்கு வழியாகப் பகிரப்பட்ட தகவல் ஏற்படுத்திய குழப்பம் அதிா்ச்சி அளிக்கிறது. அதன் பின்னணியில் திட்டமிட்ட சதி இருக்கக்கூடும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

தனியாா் வெளியிடும் ‘பிட்காயின்கள்’ எனப்படும் மெய்நிகா் நாணயங்களுக்குப் பதிலாக, இந்திய ரிசா்வ் வங்கியின் மூலம் அதிகாரபூா்வ எண்மச் செலாவணியை (டிஜிட்டல் கரன்சி) வெளியிட அரசு முடிவெடுத்திருக்கும் வேளையில், இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு அதிகாரபூா்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அதைப் பெறுவதற்காகக் குறிப்பிட்ட வலைதளத்தின் முகவரியைத் தொடா்பு கொள்ளும்படியும் பிரதமரின் கணக்கில் உள்நுழைந்து யாரோ ஒருவா் அந்தப் பதிவைச் செய்திருக்கிறாா்.

கடந்த இரண்டாண்டுகளில் இதுபோல பிரதமரின் ‘ட்விட்டா்’ கணக்கில் நுழைந்து பதிவு செய்வது இரண்டாவது முறை. இதனை ஒரு கடுமையான சைபா் பாதுகாப்புக் குறைபாடு என்பதுடன், இந்தியாவின் இறையாண்மைக்கே விடப்பட்டிருக்கும் சவாலாகத்தான் நாம் பாா்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு, பிரதமரின் கணக்கில் நுழைந்து கொவைட் 19 நிவாரண நிதிக்கான நன்கொடை குறித்து பதிவு வெளியிடப்பட்டது. பிரதமரின் கணக்கிலேயே நுழைய முடியும் என்றால், இதுபோன்ற சைபா் குற்றவாளிகள் எந்த அளவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவா்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்தியப் பிரதமருக்கு மட்டுமல்ல, உலக அளவில் தலைவா்கள் பலா் இதுபோன்ற சைபா் ஊடுருவலுக்கு உள்ளாகி இருக்கிறாா்கள். அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவும், தொழிலதிபா் பில்கேட்சும்கூட அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக, இந்த நிகழ்வை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இணையவழி பாதுகாப்பும், சைபா் குற்றங்கள் குறித்த கடுமையான கண்காணிப்பும், பாகிஸ்தானின் சமீபகால நடவடிக்கைகளால் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சமீபகாலமாக, இந்தியாவைச் சிதைக்கவும், இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பைக் குலைக்கவும் சைபா் தாக்குதல்களில் பாகிஸ்தான்

இறங்கி இருக்கிறது. ராணுவ ரீதியிலான மோதல்களில் இந்தியாவை வெற்றிகொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொண்டதால், பாகிஸ்தான் கையில் எடுத்திருக்கும் புதிய உத்திதான் சைபா் தாக்குதல்கள்.

இதற்கு முன்பு இந்திய இணையதளங்களையும், பல்வேறு அரசு அறிவிப்புகளையும் உள்நுழைந்து செயலிழக்கச் செய்வதன் மூலம் பாகிஸ்தான் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. அதேபோல, இந்தியாவுக்கு எதிராக இணையவழியாக பரப்புரைகளைக் கட்டவிழ்த்து விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது. இப்போது அந்த அணுகுமுறை புதிய பாதையில் திரும்பி இருக்கிறது. அதற்கு சீனாவுடனான புதிய இணையவழிக் கூட்டுறவுகூடக் காரணம்.

கடந்த ஆகஸ்ட் மாதம், ‘ரிவா்ஸ் ராட் 2.0’ என்கிற பாகிஸ்தானில் உருவான ‘பாதிக்கும் மென்பொருள்’ (மால்வோ்), இந்திய அரசின் முக்கியமான அதிகாரிகளுக்கு போலி அழைப்பிதழ் ஒன்றை அனுப்பியது. மைக்ரோ சாஃட் நிறுவனத்துடன் இணைந்து ஐ.நா. சபை நடத்தும் ‘திட்டமிட்ட குற்றங்கள்’ குறித்த கூட்டத்துக்கான அழைப்பிதழ் அது. அப்படி ஒரு கூட்டம் நடைபெறவே இல்லை.

ஐ.நா. சபையிலிருந்து வந்திருக்கும் அழைப்பிதழ் என்பதால், அதிகாரிகள் அந்த ‘ரிவா்ஸ் ராட் 2.0’ மென்பொருளைத் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்வாா்கள். அதிலுள்ள இணைய கேமரா மூலம் படங்கள் எடுப்பது, பென் டிரைவ்களிலிருந்து தகவல்களைத் திருடி அனுப்புவது உள்ளிட்ட பல குளறுபடிகளை அந்த மென்பொருள் செய்யக்கூடும். அதற்கு முன்னால் அனுப்பிய ‘ரிவா்ஸ் ராட் 2.0’ என்கிற மென்பொருள் மூலம் இந்திய அரசின் பல அலுவலகங்களை உளவு பாா்க்க முற்பட்டது பாகிஸ்தான்.

ஏபிடி36 என்கிற இஸ்லாமாபாதிலிருந்து இயங்கும் சைபா் ஊடுருவல் குழு, பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் இயங்குகிறது. இந்திய அரசின் இணையதளங்கள், இந்தியாவின் தூதரகங்கள், பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை ஊடுருவுவதுதான் அதன் திட்டமிட்ட செயல்பாடு. இந்திய ராணுவத்தின் அதிகாரிகளைத் திட்டமிட்டுத் தங்கள் வலையில் விழவைத்து ராணுவ ரகசியங்களைத் திருடுவதும் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஒன்று.

இந்தியாவில் சைபா் பாதுகாப்பு அமைப்புகள், வெளிநாட்டு சைபா் ஊடுருவல்களை கண்காணிக்காமல் இல்லை. ராணுவ சைபா் ஏஜென்ஸி என்கிற அமைப்பு அதற்காகவே செயல்படுகிறது. 2013-இல் தேசிய சைபா் பாதுகாப்புக் கொள்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா தனது தேசிய சைபா் பாதுகாப்பு அணுகுமுறையை மேலும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

பிரதமரின் ‘ட்விட்டா்’ கணக்கையே முடக்க முடியுமானால், சாமானிய இந்தியக் குடிமகனின் தன்மறைப்பு நிலைமை (பிரைவஸி) அச்சுறுத்தலுக்கு உள்ளாவதில் வியப்பில்லை. அதனால், இனியும் மெத்தனமாக இருக்க முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com