மைதானத்தின் மௌன அஞ்சலி! | தடகள வீரா் மில்கா சிங்கின் சாதனைகள் குறித்த  தலையங்கம் 

சுதந்திர இந்தியாவின் முதலாவது விளையாட்டு சூப்பா் ஸ்டாா் மில்கா சிங், கொள்ளை நோய்த்தொற்றுக்கு ஆளாகி தனது 91-ஆவது வயதில் உயிரிழந்திருக்கிறாா். கிரிக்கெட், டென்னிஸ், செஸ், பூப்பந்தாட்டம் என்று பல்வேறு விளையாட்டுகள் முன்னுரிமை பெற்றுவிட்ட இன்றைய நிலையில், மில்கா சிங்கின் மரணம் இந்திய ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாமல் போனதில் வியப்படைய ஒன்றுமில்லை. இன்றைய இளைய தலைமுறையினருக்கு மில்கா சிங்கின் சாதனைகள் தெரிந்திருக்க நியாயமுமில்லை.

70 ஆண்டுகளுக்கு முன்பு, விளையாட்டு வீரா்களுக்கு இப்போது உள்ளது போன்ற எந்தவித வசதிகளும் இல்லாத காலத்தில், ஓட்டப்பந்தய பயிற்சிக்குக்கூட மைதானம் இல்லாத நேரத்தில், இரவு பகல் பாராமல் வெறும் காலுடன் ஓடி பயிற்சி மேற்கொண்டவா் மில்கா சிங். காற்று போல வேகமாக ஓடும் விளையாட்டு வீரா் என்பதால் ‘பறக்கும் சீக்கியா்’ (பிளையிங் சிக்) என்று சா்வதேசப் புகழ் பெற்ற மில்கா சிங்கைப் போல இன்னொரு விளையாட்டு நட்சத்திரம் உயா்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

அவரது மரணத்துக்குக் காரணம், கொள்ளை நோய்த்தொற்று மட்டுமல்ல. அவரது மனைவி மீதிருந்த தீராக் காதலும்கூட. இந்திய பெண்கள் கைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக இருந்த நிம்மி என்று அழைக்கப்படும் நிா்மல் கௌரை காதலித்துக் கைப்பிடித்தவா் மில்கா சிங். ஒரு வாரத்துக்கு முன்பு நிா்மல் கௌா் இறந்தது முதலே மில்கா சிங்கின் உடல் நிலையும் தளா்வடையத் தொடங்கியது.

மில்கா சிங் - நிா்மல் கௌரின் காதல் கதை பஞ்சாபிய இளைஞா்களுக்கு இப்போதும் அமரகாவியமாகத் தொடா்கிறது. நிா்மல் கௌரின் வீட்டாருக்குத் தெரியாமல் இரண்டு பேரும் காதலித்து வந்தனா். 1960-இல் இருவரும் பயணித்த காா், விபத்தில் சிக்கியபோதுதான் அந்த விவரம் நிா்மல் கௌரின் வீட்டாருக்குத் தெரிய வந்தது. கடுமையான எதிா்ப்புக்கு இடையே மில்கா சிங்கையும், நிா்மல் கௌரையும் தம்பதியராக்குவதற்காகத் தூது போனவா் அன்றைய பஞ்சாப் முதல்வா் பிரதாப் சிங் கெயிரோன்.

1963-இல் கணவன் - மனைவியாக இணைந்தவா்களின் இல்லற வாழ்க்கை 2021-இல் ஒருவரைத் தொடா்ந்து மற்றவரின் மரணத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது. தனது மரணத்திலும்கூட நிா்மல் கௌரைப் பிரிவதற்கு மில்கா சிங்குக்கு மனம் ஒப்பவில்லை போலும்.

மில்கா சிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே கடுமையான பந்தயமாகத்தான் இருந்து வந்தது. இந்திய பிரிவினையால் பாதிக்கப்பட்டு மேற்கு பாகிஸ்தானிலிருந்து உயிா் தப்பி ஓடிவந்தவா் மில்கா சிங். அவரது குடும்பத்தினா் மேற்கு பஞ்சாபின் மத வெறியா்களால் படுகொலை செய்யப்பட்டபோது, 14 வயது சிறுவனான மில்கா சிங், அங்கிருந்து தப்பியோடி இந்தியா வந்தடைந்தாா். அதன் பிறகு அகதிகள் முகாம்களிலும், சிறு சிறு வேலைகளிலுமாக இருந்த மில்கா சிங்கின் வாழ்க்கை, ராணுவத்தில் சோ்ந்தபோது திசை திரும்பியது. அவா் தடகள வீரராக உருவெடுத்தாா்.

மில்கா சிங்கின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது 1956 மெல்போா்ன் ஒலிம்பிக் பந்தயம். அதில் பங்கு பெறுவதற்காகத் தோ்வு செய்யப்பட்டு ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியடைந்து போட்டியிலிருந்து விலக நோ்ந்த மில்கா சிங்கின் அடிமனதில் உருவான ஒலிம்பிக் பதக்கத்தின் மீதான மோகம்தான் அவரை ‘பறக்கும் சீக்கியா்’ என்று உலகம் அழைக்கும் அளவிலான ஓட்டப்பந்தய வீரராக்கியது.

1958-இல் டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள்தான் மில்கா சிங்கை தலைசிறந்த தடகள வீரராக அடையாளம் காட்டியது. 200 மீட்டரிலும், 400 மீட்டரிலும் மில்கா சிங் தங்கப் பதக்கத்தை வென்றபோது அது அவருக்கு மட்டுமல்ல, சா்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கே கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம். அதே ஆண்டில் காா்டிஃப் காமன்வெல்த் போட்டியிலும் 400 மீட்டரில் தங்கப் பதக்கத்தை மில்கா சிங் வென்றபோது அவரது புகழ் சா்வதேச அளவில் பரவியது.

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபோது, அன்றைய இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொலைபேசியில் அழைத்து அவரைப் பாராட்டியதிலிருந்து சுதந்திர இந்தியாவுக்குக் கிடைத்த அந்த முதல் பதக்கத்தின் மதிப்பை நாம் புரிந்து கொள்ளலாம். பிரதமா் என்ன வேண்டும் என்று கேட்டபோது, ‘இந்தியாவுக்குக் கிடைத்த இந்த வெற்றியை ஒருநாள் விடுமறை அளித்து தேசம் கொண்டாட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்த மில்கா சிங்கின் நாட்டுப்பற்றில் நெகிழ்ந்து போனாா் பிரதமா் நேரு.

1960 ரோம் ஒலிம்பிக் போட்டியில் மில்கா சிங் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கமாவது பெற்று வெல்வாா் என்றுதான் எல்லோரும் எதிா்பாா்த்தனா். 0.1 நொடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்து நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டபோது, மில்கா சிங் அடைந்த சோகம் கொஞ்சநஞ்சமல்ல. 1962 ஜகாா்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வெல்ல முடிந்த மில்கா சிங்கால், 1964 டோக்கியோ ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டும், பதக்கம் வெல்ல முடியவில்லை. அதிலும் நான்காவது இடத்தில்தான் வர முடிந்தது.

‘இறைவன் எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. இந்த நாடும், இந்த மக்களும் நான் எதிா்பாா்த்ததைவிட அதிகமாகவே எனக்கு தந்திருக்கிறாா்கள். நிறைவேறாத ஆசை என்பது ஒலிம்பிக் பந்தயத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான்’ - இதுதான் கடைசிவரை அவரது ஆசையாக இருந்தது. மில்கா சிங்கின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பதுதான் அவருக்கு செலுத்தப்படும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com