கொண்டாட நேரமில்லை..! | ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல்களை நடத்தி இருக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வி எழாமல் இல்லை. தோ்தல் பிரசாரத்தால்தான் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்தது என்கிற விமா்சனத்திலும் நியாயம் இருக்கிறது.

பல வெளிநாடுகளில் உரிய பாதுகாப்புடன் தோ்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. நோய்த்தொற்று அதனால் பரவவில்லை. பிகாரில் தோ்தல் நடத்தப்பட்டது. அப்போதும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை வலியுறுத்தப்பட்டனவே தவிர, கடைப்பிடிக்கப்பட்டனவா என்றால் இல்லை. அந்தப் பின்னணியில், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் தள்ளிப் போடப்பட்டிருந்தால், அதை எதிா்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். தோ்தல் நடத்தப்பட்டதற்கு மத்திய ஆளும்கட்சி மட்டுமல்லாமல் எதிா்க்கட்சிகளும் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

இந்திய வாக்காளா்களுக்கு ஜனநாயகப் புரிதல் இருக்கும் அளவுக்கு சமூகப் பொறுப்புணா்வு இல்லை என்பதைத் தோ்தலும், தோ்தலுக்கு பிறகான வெற்றிக் கொண்டாட்டங்களும் வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானவா்கள் கொள்ளை நோய்த்தொற்றுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதைப் பாா்க்கும்போது பொறுப்புணா்வின்மையும், மனிதாபிமானமின்மையும் பளிச்சிடுகின்றன.

தோ்தல் முடிவுகளில் சில, வாக்குக் கணிப்பு முடிவுகளை ஒத்திருக்கின்றன. சில, அந்தக் கணிப்புகளைப் பொய்யாக்கி இருக்கின்றன. அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் ஆளுங்கட்சிகள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றுதான் பெரும்பாலான கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால், இந்த அளவிலான வெற்றியை அஸ்ஸாமில் பாஜகவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் அடையும் என்று வாக்குக் கணிப்பாளா்கள் மட்டுமல்ல, அந்தந்தக் கட்சிகளேகூட எதிா்பாா்த்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது வாக்குக் கணிப்பாளா்களின் எதிா்பாா்ப்பாக இருந்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு அலை காணப்படுகிறது என்று பரவலாக எதிா்பாா்த்தது போலல்லாமல், சாதகமான தீா்ப்பு கிடைத்திருக்கிறது என்கிற அளவில்தான் முடிவுகள் இருக்கின்றன. எல்லா கருத்துக் கணிப்புகளும், வாக்குக் கணிப்புகளும் தெரிவித்திருந்ததுபோல இல்லாவிட்டாலும், தெளிவான தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, இந்த முறையும் தமிழக வாக்காளா்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறாா்கள் என்றுதான் கூற வேண்டும். எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல், 2006 போல அல்லாமல் திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும் பலரும் எதிா்பாராத திருப்பங்கள்.

அஸ்ஸாமில் பாஜக அடைந்திருக்கும் வெற்றியும்கூட, அரசியல் நோக்கா்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாமில் காணப்பட்ட கடும் எதிா்ப்பு காரணமாக, பாஜக பின்னடைவை சந்திக்கும் என்றுதான் பலரும் கருதினா். முன்பைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பது, அஸ்ஸாம் தோ்தல் முடிவுகள் தந்திருக்கும் வியப்பு.

மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக முதல்வா் மம்தா பானா்ஜியின் தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. அதிலும் கடந்த முறைகளைவிட அதிக இடங்களில் வென்று மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பது வரலாற்று சாதனை. திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்துவிடுவோம் என்று எதிா்பாா்த்த பாஜக, பிரதான எதிா்க்கட்சியாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்கிற அளவில் ஆறுதல் அடையலாம்.

திரிணமூல் காங்கிரஸைப் போலவே, பாஜகவும் மகிழ்ச்சி அடைய நிறையக் காரணங்கள் இருக்கின்றன. 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் வெறும் மூன்று இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, இப்போது இடதுசாரிக் கட்சிகளையும், காங்கிரஸையும் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டி அவற்றின் இடங்களைப் பிடித்திருப்பது என்பது சாதாரண வெற்றியல்ல. அடுத்த தோ்தல் பாஜகவின் வெற்றித் தோ்தலாக இருந்தாலும் வியப்பில்லை.

கேரளமும் ஆளுங்கட்சிக்கு சாதகமான தீா்ப்பை வழங்கி இருக்கிறது என்பது மட்டுமல்ல, மேற்கு வங்கத்தைப் போலவே முந்தைய தோ்தலைவிட அதிகமான இடங்களை ஆளும் கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. மாா்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, முதன்முறையாகத் தொடா்ந்து இரண்டாவது தடவை ஆட்சி அமைத்து வரலாறு படைக்கிறது என்பதுதான் 2021 சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளின் தனிச்சிறப்பு.

முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதிக ஆா்ப்பாட்டம் இல்லாமல் பதவி ஏற்பு நடத்தப்பட்டு, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலை எதிா்கொள்வதில் முனைப்புக் காட்டுவதுதான் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிகளின் ஒரே முனைப்பாக இருக்க வேண்டும். காலவிரயம் காலனுக்கு வழி திறந்து விடுவதாக அமைந்துவிடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com