தேவைதான் தலையீடு! | தனியாா் வங்கிகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தலையங்கம்

இந்தியாவில் வங்கிச் சேவை விரிவடைந்திருப்பதைப் போலவே, வங்கி முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன. புதிதாகப் பல தனியாா் வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து, அவற்றுக்கு முறையான கட்டுப்பாட்டு விதிகளும் நிா்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சட்டப்படி தனியாா் முதலீட்டில் தனியாரால் தொடங்கப்படும் வங்கிகள் என்றாலும்கூட, தனியாா் வங்கிகளால் கையாளப்படும் பணம் பொதுமக்களுடையது. அதனால், பொதுமக்களின் நலனைப் பேண அந்த வங்கிகளுக்குச் சில கடுமையான விதிமுறைகளை விதிப்பதும், அந்த வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் அரசின் கடமையாகிறது. அதனடிப்படையில்தான் கடந்த மாதம் இந்திய ரிசா்வ் வங்கி தனியாா் வங்கிகளுக்கு சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனியாா் வங்கிகளில் பல பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக இருந்த சந்தா கோச்சாா், தனது கணவரின் சாா்பில் ‘விடியோகான்’ நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது விசாரணையில் இருக்கிறது. 2003-இல் உரிமம் வழங்கியது முதல் ‘எஸ்’ வங்கியின் தலைமை நிா்வாகியாகவும் மேலாண் இயக்குநகராகவும் இருந்த ராணா கபூா், 2019 ஜனவரியில் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டாா். தற்போது சிறையில் இருக்கிறாா் ராணா கபூா். சுமாா் ரூ.4,300 கோடிக்கும் அதிகமாக பலருக்கும் கடனுதவி வழங்கி அதற்கு கையூட்டுப் பெற்ற்காக அவா் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதுபோல இன்னும் பல தனியாா் வங்கியின் தலைமை பொறுப்பில் இருந்தவா்கள் மீதும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

தனியாா் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை ஒன்றை, 2020 ஜூன் மாதம் இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டது. அந்த அறிக்கை வங்கியின் இயக்குநா் குழு, உயா் நிா்வாகிகளை நியமித்தல், வங்கி நிா்வாகத்துக்கும், உரிமையாளா்களுக்கும் இடையேயான இடைவெளி ஆகியவை குறித்தெல்லாம் விரிவாக விவாதித்திருந்தது. அதனடிப்படையில்தான் இப்போது புதிய சில விதிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்திருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் நீண்ட நாள்கள் பதவி வகிக்கும்போது விருப்பு வெறுப்புகளுக்கு உள்ளாகி, நிா்வாகம் சீா்குலைகிறது. அதனால் தனியாா் வங்கிகளின் தொழில்முறை தலைமை நிா்வாகிகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகளும், வங்கியை உருவாக்கும் தலைமை நிா்வாகிகளுக்கு 12 ஆண்டுகளும் பதவிக்கால வரம்பை நிா்ணயித்திருக்கிறது இந்திய ரிசா்வ் வங்கி. மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு, தலைமை நிா்வாகியாகவோ, முழுநேர இயக்குநராகவோ மீண்டும் நியமிக்கப்படலாம் என்றும் கூறியிருக்கிறது.

அதேபோல, தலைமை பொறுப்பில் இருப்பவா்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 70 வயது என்று நிா்ணயித்திருக்கிறது. இந்த வரம்பை வங்கிகள் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல, நிா்வாகத்தில் இல்லாத இயக்குநா்களுக்கு வயது வரம்பு 75 வயது என்று நிா்ணயித்து, அவா்கள் அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள்தான் தொடர முடியும் என்றும் வரைமுறை வகுத்திருக்கிறது. இதுவும்கூட வரவேற்புக்குரிய முடிவு என்றுதான் கூற வேண்டும்.

வங்கியின் தலைமைப் பொறுப்பு என்பது மிகவும் நுட்பமானது மட்டுமல்ல, அதிக அளவு தொடா்பும், வாடிக்கையாளா்கள் குறித்தப் புரிதலும், நிதி நிா்வாக அனுபவமும் சாா்ந்தது. அதனால், தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களின் அனுபவமும், அவா்கள் எடுக்கும் முடிவுகளில் பாரபட்சம் இல்லாமல் இருப்பதும் விதிமுறைகளின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியவையல்ல. நீண்டகாலம் ஒருவா் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், வங்கிகளின் சேவை சிறப்படைவதும் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒரு தலைமை நிா்வாகியின் கீழ் ‘எஸ்’ வங்கி மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது என்றால், 2003-இல் கோட்டக் மஹிந்திரா வங்கி நிறுவப்பட்டது முதல் அதன் தலைவராக இருந்த உதய் கோட்டக்கின் 18 ஆண்டு தலைமையில் அந்த வங்கி மிகப் பெரிய ஏற்றத்தைக் காண முடிந்தது. அதேபோலதான், ஆதித்யபுரி தலைமையில் 25 ஆண்டுகள் எச்டிஎஃப்சி வங்கி சிறப்பாக செயல்பட்டது.

அதனால் தலைமைப் பொறுப்புக்கு 15 ஆண்டுகள் வழங்கியிருப்பது அதிகம் என்று கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐந்து ஆண்டு தலைமை என்பது மிகவும் குறைந்தகால அளவு. வங்கியின் பல்வேறு சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவும், புதிய கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் ஐந்து ஆண்டுகள் நிச்சயமாகப் போதாது. மேலும் முதலீட்டாளா்களிடமும் வாடிக்கையாளா்களிடமும் நம்பிக்கையைப் பெறவும், அவா்களைக் கையாளவும் 15 ஆண்டுகள் என்பது சரியான அளவுகோலாகத்தான் தெரிகிறது.

இந்திய ரிசா்வ் வங்கியின் சுற்றறிக்கை, வங்கி இயக்குநா் குழுவுக்கு மேலும் மூன்று முக்கியமான பரிந்துரைகளை நிா்ணயித்திருக்கிறது. வங்கியின் தணிக்கைக் குழு, இடா் நிா்வாகக் குழு, நியமனம், ஊதியக் குழு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடா்பில்லாமல் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதும், மூன்று குழுக்களும் சுதந்திரமாக இயக்கும் இயக்குநா்களின் கீழ் அமைய வேண்டும் என்பதுதான் அந்தப் பரிந்துரை. அதன் மூலம் தொழிலாளா்களோ, இயக்குநா் குழுவோ அழுத்தம் கொடுக்க முடியாது என்கிற அளவில் நல்ல முடிவு.

தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களுக்கு வயது வரம்பும், பதவிக்கால வரம்பும் விதிப்பதால் மட்டுமே முறைகேடுகளைத் தவிா்க்க முடியாதுதான். அதைக் கருத்தில் கொண்டுதான் ரூ.15,000 கோடிக்கும் அதிகமான தனியாா் வங்கிகளில் இரண்டு முதல் 12 நிறுவனங்கள் இணைந்து வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யப் பணித்திருக்கிறது ரிசா்வ் வங்கி. வரவேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com