பருவமழை சொல்லும் செய்தி! | வழக்கத்துக்கு மாறாக மழைப் பொழிவு குறித்த தலையங்கம்

பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு.
பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு.


தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வரும் நேரம். வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு சீரான மழைப் பொழிவுடன் பருவ மழை காணப்படவில்லை. இந்திய விவசாயத்தின் அடிப்படையான பருவமழை சீராக இல்லாமல் போனால் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் கவலைப்படாமல் இருக்க முடியாது. 

வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போலவே, நிகழாண்டில் வழக்கத்துக்கு முன்பாகவே பருவ மழை தொடங்கிவிட்டது. அடைமழையுடன் கூடிய ஜூன் மாதம்; மழைப்பொழிவே இல்லாத ஜூலை; அதிகமான மழைப்பொழிவு காணப்படும் ஆகஸ்டில் மழையே இல்லாமல் இருந்தது; செப்டம்பரில் அடைமழை; ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காணப்படாதது; பருவ மழைக் காலத்தில் மூன்று இடைவெளிகள் } இப்படி வழக்கத்துக்கு மாறான பருவ மழையை இந்த ஆண்டு இந்தியா சந்திக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பயிர்கள் நாசமடைந்தது உள்பட வழக்கத்துக்கு மாறான பருவநிலை இந்திய விவசாயிகளை அச்சுறுத்தியது. 

மொத்தமாகப் பார்த்தால், நிகழாண்டின் பருவ மழை வழக்கம் போலவே இருந்திருக்கிறது. ஜூன் மாதம் வழக்கத்தைவிட 9.6% அதிகமான மழைப் பொழிவுடன் தொடங்கி முக்கியமான ஜூலை, ஆகஸ்ட் மாத நாற்று நடவுப் பருவத்தில் வழக்கத்தைவிட குறைவான மழைப் பொழிவு காணப்பட்டது. செப்டம்பர் மாதம் எடுத்துக்கொண்டால் வழக்கத்தைவிட 29% மழைப் பொழிவு அதிகம். 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பான "வழக்கமான பருவ மழை' என்பது ஒட்டுமொத்தமாக சரியாக இருக்கிறது என்றாலும், வேளாண்மைக்குச் சாதகமான வகையில் அமையவில்லை. முக்கியமான பருவ மழைக் காலத்தில் மத்திய இந்தியாவில் வழக்கமான பொழிவும், வடமேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் வழக்கமான மழையும் காணப்படும் என்பதுதான் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பாக இருந்தது. வடமேற்கு இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் காலதாமதமான மழைப் பொழிவும், தேவையான அளவுக்கு இல்லாத மழைப் பொழிவும் காணப்பட்டது. தென்னிந்திய மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகமான பருவ மழை இருந்தது. 

மிக முக்கியமான பயிரிடும் மாதங்களில் மழை குறைவாகவும், அறுவடைக் காலத்தில் அதிகமான மழையும் காணப்பட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டதே தவிர பயன்பட்டதாகக் கூற முடியாது. பயிர்களைப் பொறுத்து பாதிப்புகளும் சாதகங்களும் காணப்படுவதால், விவசாயிகள் இழப்பை எதிர்கொள்ளாத அளவிலான மகசூல் பெறுவதற்கு அரசு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்மூலம்தான் உணவுப் பொருள்களின் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். 

மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதல் கட்ட மதிப்பீட்டின்படி நெல், பருப்பு வகைகள், கரும்பு ஆகியவற்றின் மகசூல் நன்றாகவே இருக்கும். அதேநேரத்தில், ஏனைய தானியங்களான பருத்தி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் மகசூல் பாதிப்பை எதிர்கொள்ளும். காரீப் பருவத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி எதிர்பார்த்ததுபோல மீண்டும் 94.5 லட்சம் டன்களாக இருக்குமேயானால் அது நுகர்வோருக்கு நல்ல செய்தியாக இருக்கும். 2017}18 நிதியாண்டில் 95.8 லட்சம் டன்களாக இருந்த பருப்பு வகைகளின் உற்பத்தி, 2020}21}இல் 86.90 டன்களாக குறைந்ததால் விலை அதிகரித்தது. இப்போது அதிக மகசூலால் பருப்பு வகைகளின் விலை குறையக்கூடும். 

தேவைக்கு அதிகமான அரிசி உற்பத்தி நல்ல செய்தி அல்ல. இந்த ஆண்டு 10.7 கோடி டன்கள் அளவிலான அரிசி உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் "கரீப் கல்யாண்' திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அரிசியும் கோதுமையும் வழங்கி, இந்திய உணவு தானியக் கழகத்தின் கிடங்குகளில் தேங்கிக்கிடந்த தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டன. செப்டம்பர் மாதத்திலிருந்து மீண்டும் உணவு தானியக்கழகக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. பல லட்சம் டன்கள் மழையில் நனைந்து வீணாவதும் தவிர்க்க முடியாதது.

அதேபோல, கரும்பு உற்பத்தியும் 41.9 கோடி டன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனால் உற்பத்தியை முனைப்புடன் நிறைவேற்றாமல் போனால் அதிகரித்த சர்க்கரை உற்பத்தியுடன் சர்க்கரை ஆலைகள் திணறப் போகின்றன. இந்த நிலையில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அதிகரிக்கப்படுகிறது. 

அதிகமாக தண்ணீரை உறிஞ்சக்கூடிய நெல், கரும்பு, கோதுமைப் பயிர்களிலிருந்து விவசாயிகளை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல், ஆதரவு விலையை அதிகரித்து ஊக்குவிக்கும் போக்கை மத்திய } மாநில அரசுகள் தொடர்வது தவறான அணுகுமுறை. எண்ணெய் வித்துகளின் உற்பத்தி கவலையளிக்கிறது. சமையல் எண்ணெய் இறக்குமதியிலிருந்து இந்தியாவுக்கு விடிவு காலம் ஏற்படாது என்று தோன்றுகிறது. நிகழாண்டில்  எண்ணெய் வித்துகளின் உற்பத்தி 2.33 கோடி டன். இது நமது தேவையைவிட மிகக் குறைவு. அதனால் சமையல் எண்ணெய்யின் விலை குறையப் போவதில்லை என்பது உறுதி. 

சமீபத்தில் 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பருவகாலம் எதிர்பார்ப்பதுபோல மழைப் பொழிவை வழங்காமல் இருக்கும் நிலையில், வேளாண்மையில் அறிவியலின் பங்கு அதிகரிக்கிறது. வறட்சி, அதிகரித்த வெப்பம், கூடுதல் மழைப் பொழிவு உள்ளிட்ட எல்லாப் பருவ நிலைகளையும் எதிர்கொள்ளும் பயிர்களை கண்டுபிடிப்பதிலும், ஊக்குவிப்பதிலும்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது. மானியங்களும், இழப்பீடுகளும் தீர்வல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com