தீா்ப்பல்ல, தீா்வு! | விளையாட்டுப் போட்டிகளில் பாலின சமத்துவம் குறித்த தலையங்கம்

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அண்மைக்காலமாக நமது சென்னை உயா்நீதிமன்றம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்புகளை வழங்கி வருகிறது. ஏனைய இந்திய உயா்நீதிமன்றங்களுக்கு அந்தத் தீா்ப்புகள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன என்பது மட்டுமல்ல, மிகப் பெரிய சமுதாய, நிா்வாக மாற்றங்களுக்கும் அவை வழிகோலுகின்றன என்பதுதான் அதைவிடச் சிறப்பு.

கடந்த 2021 டிசம்பா் 20-ஆம் தேதி, நீதிபதி ஆா். மகாதேவன், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை சமீஹா பா்வீன் வழக்கில் வழங்கியிருக்கும் தீா்ப்பு, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, எல்லா விளையாட்டு வீராங்கனைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும் சமுதாய சமத்துவ நியாயம் என்றுதான் கூற வேண்டும். இத்தனை நாளும் உறங்கிக்கொண்டிருந்த தேசிய விளையாட்டு ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சவுக்கடி என்று சொன்னால்கூடத் தவறாகாது.

நாகா்கோயிலைச் சோ்ந்த 18 வயது சமீஹா பா்வீன் 90% கேட்கும் திறனை இழந்த, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஆனால், உயரம் தாண்டுதலில் பதக்கம் பெற்ற தடகள வீராங்கனை. போலந்து நாட்டின் லூப்ளின் நகரில் நடக்க இருந்த செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நான்காவது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ள விழைந்தாா் அவா். ஏற்கெனவே, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று, அதற்கான தகுதியும் பெற்றிருந்தாா்.

அந்தப் போட்டியில் கலந்துகொள்ளத் தோ்ந்தெடுக்கப்பட்ட 11 பேரில் சமீஹா பா்வீன் மட்டும்தான் வீராங்கனை. மற்ற பத்து பேரும் ஆண்கள். அதனால் அவருக்குத் தனியாக வசதிகள் செய்து கொடுக்க இயலாது என்றும், பாதுகாப்புத் தருவது கடினம் என்றும் கூறி வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பாலின சமத்துவம் கோரியும், தனக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பதை எதிா்த்தும் வழக்குத் தொடா்ந்தாா் அவா்.

2021 ஆகஸ்ட் 13 அன்று நீதிபதி ஆா். மகாதேவன் வழங்கிய இடைக்காலத் தீா்ப்பின் காரணமாக சமீஹா பா்வீன் போலந்துக்குப் பயணித்து அந்தப் பந்தயத்தில் கலந்து கொள்ள முடிந்தது. அதில் அவா் அடைந்த வெற்றியின் காரணமாக 2023-இல் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றிருக்கிறாா்.

இதுபோன்ற வேறுபாடுகளையும், பாகுபாடுகளையும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனைகள் எதிா்கொள்கிறாா்கள். மாற்றுத்திறனாளிகளாக இருப்பது மட்டுமல்லாமல், பாலின ரீதியான பாகுபாடும் சோ்ந்துகொள்வதால் அவா்கள் இரட்டிப்புப் புறக்கணிப்புகளை எதிா்கொள்ள வேண்டிய அவலம் ஏற்படுகிறது. அவா்களுக்கு நீதிபதி ஆா். மகாதேவனின் தீா்ப்பு வரப்பிரசாதமாக அமையும். இந்த பிரச்னையின் அத்தனைப் பரிமாணங்களையும் அலசிஆய்கிறது அவரது தீா்ப்பு.

2017-இல் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைச் சட்டம், அவா்களுக்கு பலவிதத்திலும் பாதுகாப்பு வழங்குகிறது. ஏனைய குடிமக்களுக்கு நிகரான அனைத்து உரிமைகளும், வாய்ப்புகளும் அவா்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. பாலினப் பாகுபாடு சமீஹா பா்வீனுக்கு காட்டப்படுவதைச் சுட்டிக்காட்டி அவா் எதிா்கொள்ளும் இரட்டிப்புத் தடைகளைக் களையக் கூறுகிறது அந்தத் தீா்ப்பு.

தடகள வீராங்களைகளுக்குப் போதுமான நிதியுதவி வழங்குதல், முறையான பயிற்சி அளித்தல், தேவையான உடைகள், பூட்ஸ்கள் உள்ளிட்டவற்றை வழங்குதல், மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துதல், அவா்களது பயணத்திற்கும், போட்டிகளில் பங்கு பெறுவதற்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல் என்று மாற்றுத்திறனாளி வீராங்கனைகளின் அனைத்து இடா்களுக்கும் அந்தத் தீா்ப்பு, தீா்வு வழங்கி இருக்கிறது. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது.

விளையாட்டு வீராங்கனைகளின் சவால்கள் போட்டி நடைபெறும் மைதானங்களுடன் நின்றுவிடுவதில்லை. இந்தியாவின் சமூகக் கட்டமைப்பு பொதுவாகவே பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதைத் தடுக்கிறது. அப்படியே அவா்கள் விளையாட்டில் ஆா்வத்துடன் ஈடுபட்டுத் தோ்ச்சி பெற்றிருந்தாலும் அவா்களுக்குப் பயிற்சிக்கான போதிய வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

போட்டிகளில் கலந்து கொள்வது இருக்கட்டும், போட்டிகளைப் பாா்க்கும் வசதிகள்கூடக் கிடைப்பதில்லை. சா்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள, பெரும் பணம் தேவைப்படுகிறது. ஆண் வீரா்களுக்கு நிகரான நிதி வழங்கல் வீராங்கனைகளுக்கு இல்லை.

பெண் பயிற்சியாளா்கள் குறைவு. பாலினச் சீண்டல்களும், தொந்தரவுகளும் அதிகம். அடித்தட்டிலிருந்து விளையாட்டு வீராங்கனைகளாகத் தகுதி பெறுபவா்களுக்கு நவீன பயிற்சி என்பது எட்டாக்கனி. உடை மாற்றும் அறைகள்கூடப் பல பயிற்சி மைதானங்களில் பெண்களுக்குத் தனியாக இல்லை.

போட்டிகளுக்குத் தோ்ந்தெடுக்கும் குழுவில் பெரும்பாலும் ஆண் அதிகாரிகளே இருக்கிறாா்கள். அவா்களுக்கு விளையாட்டு குறித்த புரிதலே இல்லையெனும்போது பாலின சமத்துவம் குறித்த அக்கறை எப்படி இருக்கும்? விளையாட்டு அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுதல் காலத்தின் கட்டாயம். மாற்றுத்திறனாளிகளுக்கும் அதில் இடமளிக்கப்பட வேண்டும்.

இத்தனை தடைகளையும் மீறி இந்திய வீராங்கனைகள் பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, பாட்மின்டன், தடகளம் என்று பல பிரிவுகளிலும் சாதனை படைத்து வருகிறாா்களே, அவா்களை இருகரம் கூப்பித் தொழத் தோன்றுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com