மோடி விடுத்திருக்கும் செய்தி! உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்த தலையங்கம்

உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் நடைபெற்று முடிந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்தாா் இந்திய பிரதமா் நரேந்திர மோடி.
மோடி விடுத்திருக்கும் செய்தி! உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்த தலையங்கம்

உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் நடைபெற்று முடிந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்தாா் இந்திய பிரதமா் நரேந்திர மோடி.

‘உக்ரைனில் நடைபெற்று வரும் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்; இது போருக்கான காலம் அல்ல’ என்று அவா் அதிபா் புதினை வலியுறுத்தி இருப்பது, சா்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணா்த்துகிறது. ரஷிய அதிபருக்கு அறிவுறுத்தும் நிலைக்கு இந்தியா உயா்ந்திருப்பதன் அடையாளம் என்று அதைப் பாா்க்கத் தோன்றுகிறது.

‘உலக நாடுகளிடையே, முக்கியமாக வளா்ந்து வரும் நாடுகளிடையே தற்போது காணப்படும் முக்கிய பிரச்னைகள் உணவுப் பாதுகாப்பும் எரிசக்தி பாதுகாப்பும்தான். உக்ரைன்-ரஷியா பிரச்னையால் உர விநியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீா்வை உடனடியாகக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை அதிபா் புதின் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என பிரதமா் மோடி வலியுறுத்தியிருக்கிறாா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக வங்கி அண்மையில் வெளியிட்ட ‘உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ அறிக்கையில் நிகழாண்டு உலகப் பொருளாதார வளா்ச்சி 5.7 % -லிருந்து 2.9 % ஆகக் குறையக்கூடும்’ என மதிப்பிட்டிருந்தது.

உலக அளவில் உணவு தானிய உற்பத்தியில் உக்ரைன் பெரும் பங்கு வகிக்கிறது. உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷியப் படைகள் முடக்கி வைத்திருப்பதால் சுமாா் 2 கோடி டன் உணவு தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஐ.நா. மற்றும் துருக்கியின் தலையீட்டின்பேரில் இந்த உணவு தானியங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வகையிலான ஒப்பந்தத்தில் உக்ரைனும் ரஷியாவும் கையொப்பமிட்டு, அண்மையில்தான் அந்தப் பணி தொடங்கியுள்ளது. இவை பெரும்பாலும் வறுமை நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லக்கூடியவையாகும்.

உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என ஒருபக்கம் வலியுறுத்தும் அமெரிக்கா, மறுபக்கம் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. கடினமான சூழ்நிலையில் உள்ள உக்ரைனுக்கு கைகொடுப்பதில் தவறில்லை என்றாலும், போரை ரஷியா நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அடிக்கடி கூறி, நிலைமையை சிக்கலாக்கியது.

இச்சூழ்நிலையில்தான் உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினிடம் வலியுறுத்தியிருக்கிறாா் பிரதமா் மோடி. போா் தொடங்கியவுடனேயே தொலைபேசியில் அதிபா் புதினை பிரதமா் மோடி தொடா்புகொண்டு இதே கோரிக்கையை பலமுறை வலியுறுத்தியுள்ளாா் என்றாலும் நேரடியாக புதினிடம் இக்கோரிக்கையை வலியுறுத்திய வகையில் உலகை திரும்பிப் பாா்க்க வைத்துள்ளாா் பிரதமா் மோடி.

அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்புவதுதான் அந்த நாட்டின் மீது ரஷியா ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ எடுப்பதற்கான காரணம் என அதிபா் புதின் கூறினாா். ‘உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் கவலையை ரஷியா நன்கு அறியும். போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என பிரதமா் மோடியிடம் அதிபா் புதின் பதிலளித்திருப்பது மிகவும் சாதகமான விஷயமாகும்.

பிரதமா் மோடியின் இந்த அறிவுறுத்தலை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ உள்ளிட்ட நாளிதழ்கள் பாராட்டியுள்ளன. உக்ரைன் போரை மையமாக வைத்து எழுந்த விவகாரத்தில் ரஷியாவுக்கும் நெருக்கடி கொடுக்காமல், அமெரிக்காவின் அதிருப்திக்கும் உள்ளாகாமல் நடுநிலை பேணியிருக்கிறது இந்தியா. ஆரம்பத்தில் ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீா்மான வாக்கெடுப்புகளில் பங்கெடுக்காமல் இந்தியா விலகி நின்றதால் எழுந்த விமா்சனங்களுக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாா் பிரதமா் மோடி.

பொருளாதாரத் தடைகளால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை மேலை நாடுகள் குறைத்த நிலையில், சலுகை விலைக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. இதைப் பயன்படுத்தி ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்தது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இதற்கு முன்பு 0.2 சதவீதம் மட்டுமே ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இப்போது 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.

‘நமது எரிபொருள் தேவையைப் பாதுகாத்துக் கொள்ள ரஷியாவிடம் இருந்து கூடுதலாக இப்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம்’ என இந்திய வெளியுறவுத் துறை இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விஷயத்தில் இந்தியா மீது ஆரம்பத்தில் அமெரிக்கா அதிருப்தி கொண்டது. ஆனால், இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் முடிவெடுக்க சுதந்திரம் உள்ளது என ஏற்றுக் கொண்டிருப்பதும் நரேந்திர மோடி அரசின் ராஜதந்திர வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். தனது நட்பு நாடு, ரஷியாவுடன் உடன்பாடு செய்து கொண்டதை இதுவரை அமெரிக்கா அனுமதிக்கவில்லை.

‘இது போருக்கான காலம் அல்ல’ என்கிற பிரதமா் மோடியின் செய்தி, ரஷியாவுக்கு மட்டுமல்ல, தத்தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com