மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் ஜூன் 2-ஆவது வாரத்தில் வெளியீடு: துணைவேந்தர் பேட்டி

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு, கட்-ஆப் மதிப்பெண்கள்


நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு, கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்தார்.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :  2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மத்திய, மாநில அரசுகளின் உதவிகளால் அபரிமித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தொடக்கத்தில் 3 கல்லூரிகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 10 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. 
இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வளப் பொறியியல், இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல், இளநிலை தொழிற்கல்வி உள்ளிட்ட பட்டப்படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. 
புதிய பட்டப்படிப்புகள்... தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவர்கள் மட்டுமே தற்போதைய நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் பி.டெக் பட்டப்படிப்பு நிகழாண்டில் தூத்துக்குடியில் தொடங்கப்படுகிறது. 4 ஆண்டு கால இந்தப் பட்டப்படிப்பில், 20 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இதே போல, நாகையில் இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்பும், சென்னையில் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) பட்டப்படிப்பும் நிகழாண்டில் புதிதாகத் தொடங்கப்படுகின்றன. 4 ஆண்டு கால பி.டெக் பட்டப்படிப்புகளாக இக்கல்வி பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவர். 
இப்பல்கலைக்கழகத்தில், இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில விரும்புவோர் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை, ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து மே 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு இப்பல்கலைக்கழகத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் கீழ் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு 7 இடங்களும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு ஓர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இந்தச் சிறப்புப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், உணவுக் கட்டணம் இலவசம்.
கட்- ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியல் ஜூன் 2-ஆவது வாரம் வெளியிடப்படும். ஜூலை 2-ஆம் வாரத்தில் நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் சுக. பெலிக்ஸ். தேர்வு நெறியாளர் சண்முகம், மீன்வளப் பொறியியல் கல்லூரி டீன் (பொறுப்பு) கு. ரத்னகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com