சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி 70 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இங்கு கரும்புச் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், உற்பத்தி செய்யப்படும் வெல்லம், மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல பூக்களும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்: 1,51,085
பெண்கள்: 1,43,623
மூன்றாம் பாலினத்தினர்: 4
மொத்தம்: 2,94,712.
தொழில்:
ஓமலூர் தொகுதியில் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக 70 சதவீதம் விவசாயமும், 10 சதவீதம் கோரைப்பாய் தயாரிப்பும், 10 சதவீதம் வெல்லம் தயாரிப்பும், 5 சதவீதம் செங்கல் சூளை தொழிலும், 5 சதவீதமும் பிற தொழில்களும் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் வரலாறு:
ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி இதுவரை 13 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இத்தொகுதியில் அதிமுக 7 முறை, திமுக 2 முறை, பாமக ஒரு முறை (திமுக கூட்டணி), தமாகா 1 முறை (திமுக கூட்டணி), காங்கிரஸ் ஒரு முறை, சுயேச்சை ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர்.
2016 தேர்தல் வெற்றி விவரம்:
எஸ்.வெற்றிவேல் (அதிமுக) 89,169 (வெற்றி)
எஸ்.அம்மாசி (திமுக) 69,213
நீண்ட நாள் கோரிக்கைகள்:
1. வாசனைத் திரவிய தொழிற்சாலை
ஒமலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கரில் பூக்கள் பயிரிடப்படுகின்றன. தும்பிப்பாடி, கஞ்சநாயக்கன்பட்டி, காஞ்சேரி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா, சாமந்தி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் பூக்கள் தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தில்லி போன்ற மாநிலங்களுக்கும், சென்னை, மதுரை, நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
பூக்கள் மலர்ந்து விட்டால் ஒரே நாளில் நிறம் மாறிவிடும். நிறம் மாறும் பூக்கள் அனைத்தும் வீணானவை தான். இத் தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.
இங்கு குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகும். மீதமுள்ள நாள்களில் உற்பத்தியாகும் பூக்களை விவசாயிகள் குப்பையில் கொட்டும் நிலை உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைத்து தரக் கோரி மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் புகார்.
2. கோரைப்பாய்க்கு இலவச மின்சாரம்
தமிழகத்திலேயே அதிக அளவில் ஓமலூரில்தான் கோரைப்பாய் தயாரிக்கப்படுகிறது. ஓமலூரில் சிக்கனம்பட்டி, செம்மாண்டப்பட்டி, தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, சின்னத் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் கோரைப் பாய்கள் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கோரைப்பாய் தயாரிப்புக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டால் கோரைப்பாய் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்கின்றனர்.
மேட்டூர், காவிரி ஆற்றின் படுகையில் கோரைப் புற்கள் அதிகம் விளைகின்றன. ஆற்றில் தண்ணீர் குறையும்போது விளைச்சலும் குறைகிறது. இதனைப் பயன்படுத்தி கொண்டு கோரைகளை இடைத்தரகர்கள் வாங்கிப் பதுக்கி அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் கோரைப்பாய் தயாரிப்புத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசே கோரைகளை கொள்முதல் செய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கை.
3. உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப கோரிக்கை:
ஓமலூரில் உள்ள பல்வேறு ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. வறண்ட ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை நீரேற்றுத் திட்டம் மூலமாக சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டியில் உள்ள கோட்டேரியில் நிரப்புவதன் மூலம் பொட்டியபுரம் ஏரி, நாகலூர் ஏரி, செட்டிப்பட்டி ஏரி, மூங்கில்ஏரி, முத்துநாயக்கன்பட்டி ஏரி, பெரியார்பட்டி ஏரி, செம்மண் கூடல் ஏரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஏரிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிரம்பும் என்றும் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலமாக 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் சரபங்கா ஆற்றைத் தூய்மைப்படுத்தி, நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டி ஏரிகளுக்கு நீரை நிரப்ப வேண்டும் என்பது கடந்த 35 ஆண்டுகாலக் கோரிக்கையாக உள்ளது.
இத்திட்டம் தொடர்பாக சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டு அரசு அனுமதி அளித்து ஆய்வுகள் நடைபெற்றன. பின்னர் இத்திட்டம் நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரசியல் நிலவரம்:
ஓமலூர் தொகுதியைப் பொருத்தவரை அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தொடங்கப்படுவதற்கு முன் இருமுறை இந்தத் தொகுதியில் வென்ற திமுக, அதற்குப் பின்னர் வெற்றி பெறவில்லை.
அதிமுக - திமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதிய நான்கு தேர்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் பங்கேற்று அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தமாகா, பாமக ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.
கடைசியாக நடைபெற்ற இரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை பொருத்தவரை தற்போதைய எம்.எல்.ஏ. எஸ்.வெற்றிவேல், முன்னாள் எம்.எம்.ஏ. பல்பாக்கி சி.கிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் போட்டியிடக் காத்திருக்கின்றனர். திமுகவைப் பொருத்த வரை முன்னாள் எம்.எல்.ஏ. அ.தமிழரசு, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.குபேந்திரன் ஆகியோர் களம் காணக் காத்திருக்கின்றனர்.