முதல் முறையாக ஒரே மாதத்தில் தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர்.
இதையடுத்து, அதற்கான உத்தேச விடைகள் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த முறை விடைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அவற்றை மறுத்து இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க முடியும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது.
ஏற்கனவே, இது போன்ற கோரிக்கைகள் இதுவரை எழுத்துப்பூர்வமாகவே அதாவது கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவே பெறப்பட்டு வந்தன. இதனால், தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுவதால் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிந்து வருட கணக்கில் காத்திருந்து பழகிபோன தேர்வாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக, தேர்வுகள் நடத்தப்பட்டு முதல் முறையாக ஒரு மாதத்திலேயே முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.