2018-2019-ஆம் ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் உள்ளிட்ட பணிகளுக்கு தோ்வுகள் முடிவடைந்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 உள்ளிட்ட 2,144 நேரடி நியமன பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் கணினி வழித்தோ்வு நடைபெற்றது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி நவம்பர் 8, 9 ஆகிய இரு நாட்களில் இணையவழியில் நடைபெற்றது. இதனிடையே, இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் தற்காலிக தெரிவு சார்ந்த விவரம், தற்போது முதல் கட்டமாக 12 பாடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.