இரண்டாம் நிலைக் காவலர் எழுத்து தேர்வு முடிவுகள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காவல்துறை, சிறைதுறை தீயணைப்பு துறை ஆகியவற்றில் காலியாகவுள்ள 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் நடத்தியது.
இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 76 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள், www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண்கள் மூலம் தேர்ச்சி முடிவை தெரிந்துக் கொள்ளலாம். எழுத்துத் தேர்வில் 1:5 விகிதத்தில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டமாக, உடல்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை விரைவில் நடைபெற உள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம், விரைவில் இக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.