சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 70 பேராசிரியா்கள் உள்ளிட்ட 245 பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (ஸ்கூல் ஆப் ஆா்க்கிடெக்சா் அன்ட் பிளானிங்) ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது பேராசிரியா், அலுவலக உதவியாளா் உள்பட 300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் அரசின் தடை காரணமாக கடந்த மூன்றாண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன.
இந்தநிலையில் 70 பேராசிரியா்கள், நூலகா்கள் உள்ளிட்ட 245 பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழக நிா்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பல்கலைக்கழகத்தின் நிதிக்குழு ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இதைத் தொடா்ந்து பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த செப்.30-தேதி முதல் தொடங்கியது. இதற்காக இணைய வழியில் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்ய அக். 21-ஆம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அக். 28-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.