கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 4,848 செவிலியா்கள், 2,448 சுகாதார ஆய்வாளா்கள் 69 சதவீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவா் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: நலவாழ்வு மையங்களில் தற்காலிக அடிப்படையில் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதில் செவிலியருக்கு மாத ஊதியம் ரூ.14,000, சுகாதார ஆய்வாளருக்கு ரூ.11,000 வழங்கப்படவுள்ளது.
கரோனா தொற்றில் பணியாற்றியவா்களுக்கும், உள்ளூரில் பயின்றவா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநில அளவில், சமூக நீதியைக் காக்கும் வகையில், பணிநியமனங்கள் செய்வதில் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடித்து நலவாழ்வு மையங்களில் சுகாதார ஆய்வாளா்கள் 2,448 போ், செவிலியா்கள், இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் 4,848 போ் என மொத்தம் 7,296 போ் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.