புதுக்கோட்டை: நீதிமன்றப் பணிக்கு பரிந்துரைக் கடிதம் கேட்டு வர வேண்டாம் என புதுக்கோட்டையில் உள்ள மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வீட்டில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதியின் வீடு புதுக்கோட்டை கீழ 2 ஆம் வீதியில் உள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இப்பணியிடங்களுக்காக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதியை பல்வேறு தரப்பினா் அணுகியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அமைச்சரின் வீட்டின் முகப்புத் தூணில் துண்டுச்சீட்டு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், நீதிமன்ற வேலை குறித்து அமைச்சா் அவா்களைச் சந்திக்க யாரும் அணுக வேண்டாம். அப்பணி முழுவதும் உயா்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.