காஞ்சிபுரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கிஎழுந்தருளியுள்ளார். பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அளிப்பவராகையால் இந்தப் பெருமாள், `வரதர்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது அத்தி வரதர். அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி தரிசனம் இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாக உள்ளது. 1979-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி எழுந்தருளிய அத்திவரதர், இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.