எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தொடங்கி வைத்தார். நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த வாகனப் பிரசாரத்தை ஆட்சியர் ச.நடராஜன் தொடங்கி வைத்தார். மேலும், தவறாமல் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய வாகனப் பிரசாரத்தில் மீனாட்சி மகளிர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரிகளில் மாணவிகளிடம் தவறாமல் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது.