சென்னையில் கன மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இலங்கையை ஒட்டி நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது குமரிக் கடல் பகுதியில் நகர்ந்து வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தின் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.