ராமராஜ்யம் என்பதை மத பாஷையில் சொல்வதானால் பூலோக ஸ்வர்க்கம் என்று சொல்லலாம்; எவ்வித வித்தியாசமும் இல்லாத உன்னத ஜனநாயகம் என்று சொல்லலாம். அதில் நிலமும் ராஜாங்கமும் மக்களுக்குச் சொந்தம்; உடனுக்குடன் நயமான நீதி கிடைக்கும். ஆகையால் பிரார்த்தனை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவை இருக்கும். இவ்வளவும் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் விதிகளாலும், கட்டுப்பாட்டாலும் ஏற்படுபவை.
இரண்டு புதிர்கள் என்ற தலைப்பின் கீழ் மகாத்மா காந்தி எழுதியுள்ள கட்டுரையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கட்டுரையின் வாசகம் பின்வருமாறு:-
ராமராஜ்யத்தைப் பற்றி கூறுகிறேன். ராமராஜ்யம் என்பதை பூமியில் கடவுளின் ராஜ்யம் என்றே மொழிபெயர்க்கக்கூடும். அரசியல் பாஷையில் செல்வம், செல்வமின்மை, நிறம், வருணம், மதம், பெண், ஆண் என்ற வித்தியாசம் இல்லாமல் சமத்துவத்துடன் கூடிய பரிபூரண ஜனநாயகம் என்று கூறலாம். அவ்வித ஜனநாயகத்தில் நிலமும் ராஜாங்கமும் மக்களுக்குச் சொந்தமாயிருக்கும்; உடனுக்குடனே குறைவோ செலவோ இன்றி நீதி வழங்கப்படும். ஆகவே மத சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் இருக்கும். தார்மிக ரீதியில் ஜனங்களின் சட்டப்படி ஏற்பட்ட ராஜ்யமாகையால் அவ்வித சுதந்திரங்கள் எல்லாம் இருக்கும்.
அவ்வித ராஜ்யம் ஸத்யம், அஹிம்சை இவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதில் சுபிட்சமும் சந்தோஷமும் தம் தேவைகளை தாமே கிராமங்களும் கிராம சமுதாயங்களும் இருக்க வேண்டும். இது ஒருபொழுதுமே கைகூடாத ஒரு கனவாயிருக்கலாம். அவ்வித கனவு காண்பதிலும் அதை துரிதமாக சாதிக்க முயலுவதிலும் கூட நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தினமணி (11-06-1945)