ரயில் விபத்து: காந்திஜி தப்பினார்

ரயில் விபத்து: காந்திஜி தப்பினார்

மகாத்மா காந்தியையும் அவரது கோஷ்டியையும் பம்பாயிலிருந்து பூனாவுக்கு ஏற்றிவந்த ஸ்பெஷல் ட்ரெயின் இன்று

மகாத்மா காந்தியையும் அவரது கோஷ்டியையும் பம்பாயிலிருந்து பூனாவுக்கு ஏற்றிவந்த ஸ்பெஷல் ட்ரெயின் இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு விபத்துக்காளாகி அதிர்ஷ்டவசமாகத் தப்பியது.
பூனாவுக்கு 68 மைலில் உள்ள கோராலுக்கு அருகில் ரயில் தண்டவாளத்தின் மீது கிடந்த இரண்டு மூன்று பாறாங்கற்களில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டது. 
எலெட்ரிக் என்ஜினின் முன்பாகம் சிறிது சேதமடைந்தது. மோதலால் வண்டியிலிருந்தவர்கள் பலமாக உலுக்கப்பட்டனர். நல்லவேளையாக யாருக்கும் அடி, காயம் எதுவும் இல்லை.
விபத்து நேர்ந்த சமயம் மணிக்கு 35 முதல் 40 மைல் வேகத்தில் பூனாவை நோக்கி ட்ரெயின் சென்றுகொண்டிருந்தது. பாதையில் பெரிய பாறாங்கற்களிருப்பதைக் கண்டு என்ஜின் டிரைவர்கள் வண்டியை நிறுத்த முயற்சிப்பதற்குள் என்ஜினுக்கு முன்புள்ள ஆள் தூக்கி, பாறாங்கற்கள் மீது மோதி விட்டன. பெரிய பாறாங்கற்கள் சிதறி என்ஜினுக்குச் சேதம் விளைவித்து விட்டன. ட்ரெயினை நிறுத்தி என்ஜினை பழுது பார்க்க வேண்டியதாயிற்று. இதன் விளைவாக காலை 2.30 மணிக்கே பூனாவுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய மகாத்மா காந்தியாரும் அவரது கோஷ்டியாரும் சுமார் ஏழே முக்கால் மணி நேரம் தாமதித்து காலை 9.15 மணிக்கு வந்து சேர்ந்தனர். 
காந்திஜி பூனா வந்து சேர்ந்ததும் டிரைவருக்கும் கார்டுக்கும் வெகுவாக நன்றி செலுத்தினார்.
காயங்களெதுவுமில்லாமல் நீங்கள் தப்பியதற்கு நாங்களல்லவா உங்களுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்று அவ்விருவரும் கூறினர். பூனா ஸ்டேஷனில் பம்பாய் பிரதமர் ஸ்ரீ. பி.பி.கேர், ஹோம் மந்திரி ஸ்ரீ. மொரார்ஜி தேசாய், மேல்சபைத் தலைவர் ஸ்ரீ. மங்களதாஸ் பக்வாஸா ஆகியோரும் மற்றும் பல பிரபல பூனா காங்கிரஸ் தலைவர்களும் காந்திஜியை வரவேற்றனர்.

தினமணி (30-06-1946)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com