இது தாய்மை அடைய உதவும் அருமருந்து!

குழந்தைப் பேறு தள்ளிப் போய் தாய்மைக்காக ஏங்கிடும் பெண்களுக்கு என பல்வேறு தீர்வுகள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது. 
இது தாய்மை அடைய உதவும் அருமருந்து!

புலிப்பாணிச் சித்தர் அருளிய பெண்களுக்கான தீர்வுகள்

குழந்தைப் பேறு தள்ளிப் போய் தாய்மைக்காக ஏங்கிடும் பெண்களுக்கு என பல்வேறு தீர்வுகள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது. 

அத்தகைய தீர்வுகள் சிலவற்றை முன்னரே சில பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று தாய்மை எய்திட உதவிடும் எண்ணை ஒன்றினைப் பற்றி இன்று
பார்ப்போம்.

இந்த தகவல் புலிப்பாணி சித்தர் அருளிய “புலிப்பாணி வைத்தியம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

"தானே தானின்ன மொன்று சொல்லக் கேளு
தயவான வீழியலைச் சாறு நாழி
மானேதான் தைவேளைச் சாறு நாழி
மைந்தனே பிரமியிலைச் சாறு நாழி
கோனேதான் கொட்டையிலைச் சாறு நாழி
கொடிதான நிலவாகைச் சாறு நாழி
தேனேதா னாவின்பால் படிதா னாழி
தெளிவாகச் சரக்குவகை சொல்லக் கேளு.
கேளேநீ மஞ்சளுடன் கடுகுகூடக்
கெணிதமுட னிந்துப்பு வெண்கரந்தான்
நாளேநீ கடுக்காயும் வெள்ளைப் பூண்டு
நலமான ஆண்வசம்பு சுக்குங்கூடப்
பாளேநீ வகைவகைக்கு விராகன் மூன்று
பண்பாகப் பொடிசெய்து இதனிற் போட்டுக்
கேளேநீ விளக்கெண்ணெய் நாழிவிட்டுக்
கொடிதாக மெழுகுபதந் தன்னில் வாங்கே.
பாங்குடனே மாதவிடா மூன்றாம் நாள்தான்
பண்பாகத் தலைமுழுகிக் கரண்டி எண்ணெய்
தாங்கியே கொடுத்துவிடு நாள்மூன்றப்பா
தயவாக மறுபத்திய மொருநாள் காரு
தூங்கியே திரியாதே ஐந்தா நாளில்
துருசாகச் சிரசுக்கு நீரை வாரே
வாரேநீ வறுத்தவுப்பு பொரிச் சாறப்பா
வளமாக மற்றாநாளெல்லாஞ் சேரு..."

வீழி இலைச் சாறு ஒரு நாழி, தைவேளைச் சாறு ஒரு நாழி, கொட்டைக் கரந்தைச் சாறு ஒரு நாழி, பிரமியிலைச் சாறு ஒரு நாழி, நிலாவாகைச் சாறு ஒரு நாழி, பசும்பால் ஒரு நாழி ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

மஞ்சள், கடுகு, இந்துப்பு, வெண்காரம், கடுக்காய், வெள்ளைப் பூண்டு, ஆண்வசம்பு, சுக்கு ஆகியவற்றில் வகைக்கு மூன்று விராகன் வீதம் எடுத்து நன்றாகப் பொடியாக்கிக் கொள்ள வேண்டுமாம்.

பின்னர் இந்தப் பொடியினையும், முன்னர் சேகரித்த சாறு வகைகளுடன் சேர்த்து அதனுடன் மேலும் ஒரு படி விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் மெழுகு பதம் வரும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ள வேண்டுமாம்.

கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள், தலை மூழுகிய பின்னர் இந்த எண்ணெயிலிருந்து ஒரு கரண்டி எண்ணெயை அருந்தக் கொடுக்க வேண்டுமாம். 

பின்னர் இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் ஒவ்வொரு கரண்டிவீதம் அருந்தி, இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்கும் என்கிறார்.

மருந்துண்ணும் மூன்று நாளும் பத்தியமாக இருந்து, நான்காவது நாள் மருந்து சாப்பிடாமல் பத்தியமாக இருக்க வேண்டுமாம். மேலும் நான்காம் நாள் பகலில் தூங்காமலும், வெய்யிலில் அலையாமலும் இருக்க வேண்டுமாம். ஐந்தாவது நாள் முழுகி அனைத்தும் வழக்கமான உணவுகளை உண்ணத் தொடங்கலாமாம்.

நான்கு நாட்களும் பத்தியமாக உப்பு அதிகமுள்ள, வறுத்த, பொரித்த பண்டங்களை நீக்க வேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

குறிப்பு :- ஒரு விராகன் என்பது தற்போதைய அளவுகளில் நான்கு கிராம் ஆகும்.

நன்றி - சித்தர்கள் இராச்சியம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com