டெங்குவா பயப்படாதீர்கள், குணப்படுத்திவிடலாம்!

கடந்த சில ஆண்டுகளாக டெங்கு என்ற சொல் அனைவரும் பயப்படும் ஒரு சொல்லாகிவிட்டது.
டெங்குவா பயப்படாதீர்கள், குணப்படுத்திவிடலாம்!

கடந்த சில ஆண்டுகளாக டெங்கு என்ற சொல் அனைவரும் பயப்படும் ஒரு சொல்லாகிவிட்டது. வீட்டில் கதவுகள், ஜன்னல்களுக்கு வலை அடித்தாயிற்று, கொசு மருந்தை அடிக்கடி பயன்படுத்தியும் வருகிறோம், கொசுவலையில்தான் உறக்கம், ஆனால் எல்லாவற்றையும் ஏமாற்றி இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் இந்தக் கொசு வந்துவிடுகிறது. எப்படி? நாம் சுத்தமாக இருந்தாலும், நம் சுற்றுப்புறம் அப்படியிருப்பதில்லையே. அதற்கு என்னதான் செய்வது? சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக அவசியம் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு முயற்சிகளில் இறங்கினால் டெங்கு இங்கு வரவே வராது.

இது ஏடிஸ் என்ற கொசுவினால் பரவும் ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல். இந்த வகை கொசு மற்ற கொசுக்களை போல் இல்லாமல் பகலில்தான் கடிக்கும். ஆண்டுதோறும் 24,000 நபர்கள் டெங்குவால் மரணம் அடைகின்றனர். 7 கோடி நபர்கள் பாதிக்கப்பட்டு மீள்கின்றனர்.

தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. 19- ம் நூற்றாண்டில் தான் இந்த டெங்கு பரவ தொடங்கி இருக்கிறது. தமிழகத்தை பொருத்தவரை, கடந்த சில வருடங்களாக டெங்கு தாக்கம் நிலவி வருகிறது. இப்போது மழைக்காலம் தொடங்கும் முன்பே, அனேக இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வருகிறது கவலை அளிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளது. சென்னையில், அரசு மருத்துவமனைகளில் மட்டும் 100 பேருக்கும் மேல் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இன்றளவும் மக்களிடையே டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. டெங்கு பற்றிய முக்கிய குறிப்புகள் :

அறிகுறிகள்

தலைவலி, காய்ச்சல், தோலில் தடிப்புகள், உடம்பு வலி, களைப்பு வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி உள்ளிட்டவை ஏற்படும். டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என டெங்குவில் நான்கு வகைகள் உள்ளன. மேற்சொன்ன அறிகுறிகள் அத்தனை அல்லது சில அறிகுறிகள் மட்டும் தெரிந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சையை தொடங்க வேண்டும். டெங்கு மருத்துவ கண்காணிப்பு கோரும் நோய் எனவே அலட்சியம் வேண்டாம். மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது நல்லது. காரணம் சிலருக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' என்றால் ப்ளேட்லெட்ஸ் (தட்டணுக்கள்) அளவு குறைந்து, நுரையீரலின் கூடுப் பகுதியில் நீர் தேங்கிவிடுதல். இது அபாயகரமான நிலை, உடனடியாக சீர்படுத்தாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம்.

எப்படிப் பரவுகிறது?

`ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்கு மேல் உயிர் வாழும் தன்மையுடையது. இது பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். நல்ல தண்ணீரில் உருவாகக் கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. டெங்குவை உருவாக்கக்கூடிய இந்தக் கொசுவின் உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் புள்ளிகள் இருக்கும். இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. வீடுகளில் சரியாக மூடப்படாத தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், டேங்குகள், ட்ரம், சரியாக மூடப்படாத சம்ப், சரியாக மூடப்படாத ஓவர்ஹெட் டேங்க், குப்பைக் கூளங்கள், டயர்கள், சுத்தம் சுகாதாரமற்ற இடங்கள் உள்ளிட்ட இடங்களில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் வளர்ச்சி அடைகின்றன. எனவே சுற்றுப் புறத்தை மிக மிக சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.'

ஒருவருக்கு  காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ளவேண்டும்.

என்ன சிகிச்சை?

காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசெட்டமல் மாத்திரையும், உடல்வலியைப் போக்க உதவும் மாத்திரைகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே Dengue Shock Syndrome ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட்ஸ் என்ற தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலிலுள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்க பழச்சாறு, தண்ணீர் அருந்தவேண்டும்.

டெங்கு காய்ச்சலிலிருந்து மீண்ட பின்னர்

ஒரு முறை டெங்கு வந்தால் கூட மீண்டும் அது மீண்டும் வர வாய்ப்பு இருப்பதால், மிக கவனமாக இருக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம். டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்த பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு உடனடியாக செல்ல வேண்டாம். பெரியவர்கள் என்றாலும் உடனடியாக வேலைக்குச் செல்லக் கூடாது. காரணம் நிச்சயம் அவர்கள் 3 முதல் 5 நாள்கள் ஓய்விலும் மருத்துவ கண்காணிப்பிலும் இருக்க வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், எளிய யோகா பயிற்சிகள் செய்யுங்கள். சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். நிலவேம்புக் கஷாயம் குடிப்பது நல்லது. அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருமே நிலவேம்புக் கஷாயம் குடிக்கலாம். உணவுக்கு முன் குடிப்பது சிறந்த பலனைத் தரும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com