இயற்கை முறை உணவுகளே ஆரோக்கியமானது என்று இயற்கை விவசாயி வரதராஜன் கூறினார்.
சீர்காழியை அடுத்த ஆலங்காடு, வட்டாரம் ஆகிய கிராமங்களில் 150 ஏக்கரில் முற்றிலும் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண்புலம் இறுதியாண்டு பயிலும் சுஷ்மிதா, தமிழரசி, சூரியபிரபா, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 21 மாணவிகள், வி. சுவாதி தலைமையில் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் களப் பயிற்சிக்கு வருகை தந்து ஒருவாரமாக பயிற்சி பெற்று வருவதோடு, விவசாயிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர். அவ்வாறு களப் பயிற்சியில் ஒன்றான இயற்கை விவசாயம் குறித்து வயல்களில் திங்கள்கிழமை பயிற்சி பெற்றனர். மாணவிகளுக்கு, நம்மாழ்வார் விருது பெற்ற வரதராஜன், இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியளித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: நல்ல ஆரோக்கியமான இயற்கை முறை உணவு தானியங்களை விளைவித்து விற்பனை செய்வது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. பல்வேறு நோய்த் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பற்ற தமிழக அரசு மக்களிடம் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முதல்கட்டமாக அரசு மருத்துவமனைகளில் உள்ள உணவகங்களிலும், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு இயற்கை நெல் உள்ளிட்ட தானியங்களைப் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் உணவே மருந்து என்பதை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்றார் வரதராஜன்.