குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் சுட்டெரிக்கும் வெயில் பல உடல் பாதிப்புகள் உண்டாக்க வல்லது. இதில் இருந்து தப்பிக்க, உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் வைக்க பழங்கள் இன்றி அமையாத ஒன்று. வெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள் பற்றி பார்ப்போம்.
கிர்ணிப்பழம்
தர்பூசணியைத் தொடர்ந்து கிர்ணிப் பழத்திலும் அதிக நீர்ச்சத்து உண்டு. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழமும் கண்ணுக்கு நல்லது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் ஏ மற்றும் சி நோய்த் தோற்றை தீர்ப்பதோடு சருமத்தையும் பொலிவடைய செய்யும்.
மாம்பழம்
நம்மால் தவிர்க்க முடியாத பழம் மாம்பழம்; மா, பலா, வாழை என எப்பொழுதுமே மாம்பழம் முன்னிலை வகிக்கும். இதில் ஒட்டு மாம்பழம், அல்போன்ஸா, இமாம் பசந்த், மல்கோவா, பங்கனப்பள்ளி என்று பல வகையுண்டு. நிச்சயம் இதை சுவைக்க மறக்காதீர்கள்.
தர்பூசணி
இதற்கு தண்ணீர் பழம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது சூட்டை தணிக்கும் சிறந்த, அதிக நீர் சத்துக் கொண்ட பழம். 94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம். இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் ஏ மற்றும் சி. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது.
நாவற் பழம்
நாவற் பழத்தின் தனித்துவமான சுவையே இப்பழத்தின் சிறந்த அம்சம். மற்ற பழங்கள் போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பழம் இது. 1.41 மில்லி இரும்பு சத்து , 15 மில்லி கால்சியம் மற்றும் 18 மில்லி விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம் இது. இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக் கொண்ட இந்தப் பழத்தில் பாரம்பரிய மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மரத்தில் வேரிலிருந்து பழம் வரை அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறனும் கொண்டது.
- பொன்.பாலாஜி