தேவையான பொருட்கள்
பச்சரிசி - 100 கிராம்
முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி
கடலைப் பருப்பு - 10 கிராம்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
இலவங்கைப் பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
தோலுரித்த பூண்டு - 10
செய்முறை :
முதலில் பச்சரிசியைக் களைந்து வடிகட்டி மிக்ஸியில் போட்டு நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பச்சரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு 600 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் கடலைப் பருப்பு, வெந்தயம், தோலுரித்த பூண்டுப் பல், முருங்கைக் கீரை ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அவற்றில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை வறுத்துக் கொள்ளவும்.
நொய்யரிசி நன்கு வெந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பின்பு அதனுடன் வறுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பலன்கள்
இந்தக் கஞ்சி உடல் சோர்வு மற்றும் வயிற்றில் காற்றுப் பிடித்தல் போன்ற உணர்வு மற்றும் தீராத மலக்கட்டு பிரச்சனைகளையும் தீர்க்கும்.
முருங்கைக் கீரை பச்சரிசிக் கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால், உடலுக்குத் தேவையான சக்தியையும் வலிமையையும் தரும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி இது. ஆண்கள் மட்டுமில்லை பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது.
குறிப்பு
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com