குழந்தைகள் உளவியல்

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். அந்த தனித்துவத்தைக் குழந்தைகளிடமும் பார்க்கிறோம்.
குழந்தைகள் உளவியல்

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். அந்த தனித்துவத்தைக் குழந்தைகளிடமும் பார்க்கிறோம். இருந்தும் சில நேரங்களில் குழந்தைகள் செய்வது அந்த வயதிற்கு உரியதா, இல்லையேல் கவனிக்கப்பட வேண்டியவையா என்ற கேள்வி எழலாம். குழந்தைகள் உளவியலில் எவ்வாறு இதைத் தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பற்றித்தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

எவை ‘நார்மல்’ என்ற புரிதல்தான் குழந்தை உளவியலில் ஆரம்பக்காலப் படிப்பு. ‘நார்மல்’ முழுதாகப் புரிந்து கொள்வதும், எவற்றுக்குக் கவனம் தர வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ளக் குழந்தை உளவியல் உதவும். எது சரியில்லை என்று கண்டுபிடிப்பதற்கு, அவற்றைக் கணிப்பதற்கென்று குறிப்புகள், காலக் கோட்டுப்பாடுகள் உள்ளன. இதை ஆங்கிலத்தில் symptoms (ஸிம்ப்டம்ஸ்), diagnosis (டயக்னோஸிஸ்) எனச் சொல்லப்படும். ஸிம்ப்டம்ஸ் என்றால் எப்போதிலிருந்து, என்னவெல்லாம் காணக் கூடும் என்பதை விவரிக்கும். Diagnosis (டயக்னோஸிஸ்) என்பது ஸிம்ப்டம்ஸ்களை ஒட்டுமொத்தமாக வைத்து எந்த வகையில் சரியில்லை என்பதற்கு ஒரு குறிப்பீடாகும். இப்படித் தீர்மானிப்பதை எவ்வாறு இந்த துறையில் அணுகுகிறார்கள், மற்றும் எப்படி செயலில் கொண்டு வரலாம் போன்றவற்றை மேலோட்டமாக இங்கே பார்க்கலாம்.

மனநல படிப்புகள் பிரிவுகளான: ஸைக்காட்ரிஸ்ட், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வொர்கர், ஸைக்காலஜிஸ்ட், ஸைக்காட்ரிக் செவிலியர், இவை ஒவ்வொன்றிலும் குழந்தைகளுக்கென தனியான உளவியல் பகுதிகளும் பயிற்சிகளும் இருக்கின்றன. இப்படிப் படிப்பு, தேர்ச்சி இரண்டினாலும் இந்தத் துறை நிபுணர்களால் குழந்தைகளின் நிறை குறைகளைக் கணித்து, அவற்றைச் சரி செய்ய வழிகளை வகுக்க முடிகிறது.

உருவுகளை முழுமையான புரிதலுடன் (Holistic) பார்வையிட்டால் அவற்றின் தாக்கம், அவை எவ்வாறு, எப்படியெல்லாம் ஒன்றுக்கொன்று பின்னியுள்ளன (Systemic) என்று அறிந்து கொண்ட பின்பு தான் “ஏன்”, “எப்படி” என்ற புரிதலின் மூலம், என்ன செய்வதென்று தீர்மானித்துச் செயல்படுவதுண்டு. இந்த கண்ணோட்டம் குழந்தைகளுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி, எல்லோருக்கும் பொருந்தும்.

இந்தத் தருணத்தில் இதை வலியுறுத்துவது அவசியமாகும்: ஏதோ ஒன்றைச் சரியில்லை என்றதும் அதைப் பார்த்ததும் அதைக் கோளாறு என முடிவு செய்வதும், அதனை இதுதான்-அதுதான் எனப் பெயர் சூட்டுவதும் தவறு. இதற்கு விளக்கம் என்னவென்றால், ஒன்று, முழு புரிதல் இருந்தால் தான் வேறுபாடுகளை அடையாளம் காண  முடியும். மற்றொன்று, முழு புரிதல் இருந்தாலே வேறுபாடுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிலவற்றைக் கொஞ்ச நேரம், சில தடவை பார்த்து முடிவிற்கு வருவது அறியாமை என்றே சொல்லலாம்.

குழந்தை உளவியலில், பிறந்த குழந்தையிலிருந்து, குழந்தைப் பருவம், மலரும் பருவமான விடலைப் பருவம் வரை அடங்கும். வளர்ப்பு, குழந்தைகளிடம் பொதுவான இயல்புகள், வளர்ந்து வரும் சூழலின் பாதிப்பு, உறவுகளின் தாக்கம், இப்படிப் பலவற்றை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து, எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த பல்வேறு கோணங்களிலிருந்து கணிக்க ‘தியரிகள்’ (theories) வழிகாட்டிகளாகிறது. இந்த தியரிகள், உடல்-மனம்- மூளை-சமூகம்- குடும்பம்- உறவுகள் என ஒவ்வொன்றையும் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து அதிலிருந்து எழும் தகவல்கள், அதற்கான மூல காரணிகள், அவைகளினால் போகப் போக எழும் நிகழ்வுகள், விளைவுகள் என்று எடுத்துச் சொல்கின்றன. எப்படி இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது மையமாக வைத்தே பாடத்திட்டங்கள், பயிற்சிகள் உள்ளதால், படிக்கும்போதே  புரிய வருகிறது. இவற்றில் சில மணித்துளிகளை இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

இந்தத் துறையில் ‘வரும் முன் காப்போம்’ என்பதற்கு மிக முக்கியமான இடம் தரப்படுகிறது. பெரும்பாலும் பல மனநல திண்டாட்டங்கள், வெவ்வேறு இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கத் தெரியாமல் தடுமாறுவதில் வருவதுதான். சமாளிக்கும் திறமைகளை, எழாமலேயே காக்கும் திறமைகளை வளர்க்கச் சிறு வயதிலேயே அளிக்கும் பயிற்சிகள் தாம் ‘வரும் முன் காப்போம்’. இது குழந்தை உளவியல் தேர்ச்சி உள்ள  நிபுணர்கள், மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் என அனைவரும் கூடச் சேர்ந்து செய்வதாகும். இவர்களுடன் பெற்றோரின் பங்களிப்பும் உண்டு. இதைப் பற்றிய பல தரப்பான ஆராய்ச்சிகளின் மூலம் இவ்விதமான அணுகுமுறையால் எந்த அளவிற்கு நன்மை விளையும் என விவரித்து இருக்கிறார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து விடலை வயது வரையில் படிக்கச் செல்வது வழக்கம். அங்கு, குழந்தைகள் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து அவர்களின் மனநலத்தை அறிய முடியும். அதே போலவே எவை நலனற்றவை என்பதையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

ஒருவேளை, இந்த காலகட்டத்தில் தவறிவிட்டால், விடலைப் பருவத்தினரைப் பள்ளிக் கூடங்களில் அணுக முடியும். வகுப்பில் மாணவரின் நிலை புரிந்து கொண்டு வரும் முன் காப்போம் முறைகளுக்கு வழி அமைத்து, பாடங்களை அணுகுவதிலும், கற்றுத் தரும் விதங்களிலும் நலனற்றவற்றை அடையாளம் கண்டு கொண்டு அகற்ற முடியும்.

பொதுவாகப் பார்க்கக் கூடியவை, படிப்பில் தடுமாற்றம், பதட்டம், துயரம், அவநம்பிக்கை, சரியில்லாத நடத்தை எனப் பலவகையில் மனநலம் பாதிக்கப் படுவதைக் காட்டலாம். எப்பொழுதெல்லாம் இவை தோன்றுகின்றன, மாற்றங்களின் விவரங்கள் என்ன என்று அறிய வேண்டும்.

ஆசிரியர், பெற்றோர் இருவருக்கும் இவற்றை அடையாளம் காண்பதில் சம பங்கு உண்டு. அவர்களுக்கு இப்படிக் கண்டறியும் பயிற்சி கொடுக்கப் பல யுக்திகளை உபயோகிக்கலாம். கண்டறிந்ததும்  மேற்கொண்டு எடுக்க வேண்டிய  நடவடிக்கைகளை மனநல நிபுணர்களுடன் சேர்ந்து செயல் படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையால் மனநலக் கோளாறுகள் ஏற்படும் முன்னரே அவற்றைச் சரி செய்ய முயல்வதில், குழந்தைக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் நன்மைகள் ஏற்படும். மனநலம் குன்றி விடாமல் பாதுகாக்க முடியும்!

இதற்குள் இருப்பது

எல்லா மனநலத் துறைகளிலும் கவனித்தலே (observation ஆப்ஸர்வேஷன்) மிக முக்கியமான யுக்தியாகும். இந்த கருவியால் குழந்தைகளின் செயல்பாடுகளை, அவர்களைப் பற்றி, அவர்களின் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், வெளி உலகில் மற்றவருடன் பழகும் விதங்களை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனதிடம், வளர்ச்சி பற்றிய தகவல்கள் சேகரித்துக் கொள்ள முடிகிறது.

குழந்தைகள் வளர்ச்சிக்குப் பங்களிப்பு, அவர்களின் பிறப்பிலேயே இருக்கும் உயிர்மம் (genes), இயல்பான தன்மை, வளர்ப்பு முறைகள் மூன்றுக்குமே உண்டு. குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் பழகும் அன்றாட மனிதர்கள் (தாத்தா, பாட்டி, உதவும் அக்கா, என), சுற்றுச்சூழல், சூழ்நிலை, சந்திக்கும் அனுபவங்கள், என பலவற்றுடன் சேர்ந்தவை. இவை ஒவ்வொன்றும் குழுந்தை, விடலை பருவத்தினரின் சிந்தனை- உணர்வு- நடத்தை- உடல்நலம்-மற்றவருடன் பழகுவது-வளர்ச்சியில் தாக்கத்தைக் காட்டும். அதே போல் இவற்றில் ஏதேனும் ஒன்று சரியில்லை என்றாலும் மற்றவற்றில் அதன் பாதிப்பைக் காண முடியும். அதனால்தான் இந்த ஒவ்வொன்றையும் ஏன்- எதற்கு-எப்படி, இவற்றை நிர்ணயிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளக் கூர்ந்து வர்ணிப்பதற்கு மனநல உளவியலில் பெரிய பங்குண்டு.

நலம், பாதிப்புகள் (health, issues and concerns)

நலம் கொள்வதற்கு, வளர்ச்சி அடைவதற்கு உள்ள இடையூறுகளைக் கவனிக்கத் தேவை. அதே போல், எந்த விதத்தில் பார்த்தாலும், ஏதோவொரு பிரச்னை என்றாலும், அதில் உடல்-உணர்வு-உறவு என்ற கலவை தென்படும். இவை மூன்றும் எப்பொழுதும் இணைந்து வேலை செய்வதினால் இப்படி ஆகும். இந்தக் கலவையில் நம் பெற்றோரிடமிருந்து நாம் கற்றது, காலம் காலமாக வாழையடி வாழையாக வரக் கூடிய கலாச்சார பழக்க வழக்கங்கள் நம்மை உருவாக்கும். நம்முடைய சுய உளவியல், சமூக நியதி, சூழ்நிலை எனப் பல வண்ணங்கள் இவற்றுடன் இணைந்து கொள்ளும். இதிலிருந்து தான் நமக்கு நடப்பதைத் தாங்கக்கூடிய தன்மை, கஷ்டங்களிலிருந்து வெளிவரும் திறன்கள் இருப்பதும், அல்லது இல்லாமல் போவதும் நிகழும்.

அதனாலேயே மனநல உளவியலிலும் சரி, குழந்தை உளவியலிலும் சரி மேற்சொன்ன எந்த ஒன்றையும் அதி முக்கியமானது என்று ஒரு அம்சத்தை மட்டும் தனிமைப்படுத்துவதில்லை. ஏனெனில் இவை எல்லாவற்றிலும் ஒன்றின் மேல் ஒன்றின் தாக்கம் இருக்கும், ஒன்று சரியாக இல்லாவிட்டால் மற்றொன்று தூக்கி விடலாம். நம்முள் எதை எடுத்துக் கொண்டாலும் மற்றவற்றின் பாதிப்பு இருக்கும். வித்தியாசப்படுத்தல் முடியாது.

குழந்தை உளவியலில் பொதுவாகப் பேசப்படும் சிலவற்றைப் பார்க்கலாம்:

உடல் Development வளர்ச்சி

உடல் வளர்ச்சியில் குழந்தைகளின் பெரிய மற்றும் சிறிய தசை (muscles) உள்ளடங்கும். பெரிய தசைகள் நன்றாக வளர்வதைக் குழந்தைப் பருவத்திலிருந்து பார்க்கலாம். இதனால் குழந்தை நிற்பது, பிறகு  நடப்பது, ஓடுவது, மாடி ஏறுவது எனச் செய்யமுடிகிறது. சின்ன தசைகள் உன்னிப்பாகப் பிடித்துச் செய்ய உதவும். பொருட்களை எடுத்துச் செய்ய, உதாரணத்திற்கு, ஆள்காட்டி விரல்-கட்டைவிரல்களால் பிடித்துக் கொள்வது (எடுக்க, எழுத, தைக்க) என்பதைப் போல். ஒரு வேளை வயதிற்கேற்ற அளவிற்கு இந்தத் திறமைகளின் வளர்ச்சி இல்லை என்றால் கண்டிப்பாக அந்த குழந்தையின் சூழலைப் புரிந்து மேற்கொண்டு என்ன, எப்படிச் செய்ய என்பதை நிர்ணயிக்கும் வகையில் வழி தேடவேண்டும்.

Milestones வளரும் நிலை

குழந்தை முறையாக வளர்வதை வகையாகத் தெரிவிப்பது தான் வளரும் நிலை. ஒவ்வொரு வளர்ச்சி நிலை இந்த மாதத்திலிருந்து/வயதிலிருந்து இதற்குள் சாதாரணமாக ஏற்படும் என்று எண்கள், குறிப்புகள் மூலம் காட்டும். ஒவ்வொரு குழந்தையின் நிலை, பல்வேறு குழந்தைகளின் வேறுபாடுகள், அவைகளின் கலவை, ஒத்துழைப்பு இரண்டையும் மனதில் வைத்தே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. இதன் உபயோகம், தற்போதைய வளரும் நிலை தெரிந்ததும் அந்தக் குழந்தைகள் எந்த வளர்ச்சி நிலையில் இருக்கிறார்கள், எது தேவை, எது பின்தங்கிய படி இருக்கிறது என்பதை உளவியல் துறையினரால் கணிக்க முடிகிறது. அடுத்த கட்டமாக, காரணிகள் என்ன என்று அறிந்து, நிலையைச் சரி வரச் செய்ய மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் செயல்படுத்த முடியும். 

அறிவு வளர்ச்சி Cognitive Development 

அறிவு வளர்ச்சி ஆராய்ச்சி, இந்த காலகட்டத்தில் பல மடங்கு முன்னேற்றம் பெற்றுள்ளது. இதிலிருந்து பல தகவல்கள் தெரியவந்துள்ளது. வயிற்றில் வளரும் கருவிற்கு வெளி உலகின் சூழலின் பாதிப்பைப் பற்றிய ஆராய்ச்சிகள், கருவிலிருக்கும் போதே கவனிப்புத் தேவை என்பதைக் காட்டி வருகிறது. கருவில் இருக்கும் போது, தாய்மார்கள் கேட்கும் பாடலைப் பிறந்த குழந்தைக்கு அடையாளம் தெரிகிறது என்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். நம் கலாச்சாரத்தில் பாடுவது, தகவல் சொல்வதை உணர முடிகிறது என்று அத்தாட்சியாகப் பக்தப் ப்ரஹலாதன் பற்றிய வர்ணனை உண்டு. அதே போல், பிறந்ததிலிருந்து குழந்தைகள் எந்த அளவுக்கு தங்களின் சூழலுக்குக் கவனம் செலுத்துகிறார்கள் என ஆராய்ச்சி காட்டி இருக்கிறது. மற்றும், அறிவு வளர்வதற்கு உணர்வு+சமுதாய திறன்களுடன் பலவகையான தூண்டுதல் முக்கியமாகும் என உறுதிப்படுத்துகிறது. அப்படி என்றால் அறிவு வளர்ச்சியில் என்னவெல்லாம் சேரும்? இதில், மொழி, கற்றல், ஞாபகத் திறன், முடிவு செய்தல், விடை காணுதல், கூர்ந்து கவனித்தல், ஆராய்ந்து பார்ப்பது, புரிந்து கொள்வதும் அடங்கும். இவை சில சமயங்களில் தனியாகவும், பல தடவை கலவையாகும் உபயோகப்படுத்தப்படும். அதனால் தான் குழந்தை உளவியலில் இதில் எவை இருக்கிறது, எது குறைகிறது என்பதைக் கண்டுகொண்டு அதை மேம்படுத்த  வழிகளைச் செய்யத் தேவை. 

Behaviour நடத்தை 

பொதுவாகக் கூறும் 'பிஹேவியர்' (behaviour) என்பது நாம் நடந்து கொள்ளும் விதங்களைக் காட்டுவது ஆகும். குழந்தைகளின் நடத்தை வைத்து அவர்களை 'மௌனமானவர்', 'சாந்தமானவர்', 'படுசுட்டி' என நாம் குறிப்பிடுவது வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்து விடலை பருவம் முடியும் வரை அவர்கள் கற்றுக்கொள்ளும் நிலையிலிருந்தாலும் இவ்வாறு கூறி அவர்கள் தகுந்த நிலையில் இருக்கிறார்களா என்று தராசில் வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பதும் வழக்கம். உண்மையில், பெற்றோரின் வளர்ப்பு முறை, கண்டிக்கும் வகை, அவர்களுடன் இருப்போரிடமிருந்து கற்றுக் கொள்வதெல்லாம் நடத்தையில் அடங்கும். அதனால் தான் குழந்தை உளவியலில் இவற்றைப் பற்றி பல்வேறு கோணங்களில் கேள்வி கேட்பது தேவையாகிறது. உதாரணத்திற்கு இரண்டு வயதினரை பொதுவாக ‘டெரிபில் டூ’ (terrible two) எனச் சொல்வதுண்டு. அந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் அதிகமாக ஓடியாடி விளையாடி, சோர்வே தெரியாத அளவிற்கு துருதுருவென இருப்பதை இவ்வாறு ஒரு துச்சமாகச் சொல்வது அப்படிச் சொல்பவர்களின் மனப்பான்மையைச் சுட்டிக் காட்டுகிறது. இரண்டு வயதில் அவ்வாறு இருப்பதினால் தனித்துவம் வளர, நிறையக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அமையும். குழந்தைகள், விடலைப் பருவத்தினருக்கு வாழ்க்கை மாற்றங்கள் ஏற்படும் போது,  பிறகு நெடுநாட்களுக்கு நீடித்து அவர்கள் வித்தியாசமாக நடந்து கொண்டால் அதற்கு மனநல நிபுணரை அணுகுவது உசிதமாகும். இப்படி மாற்றம் என்பது வீடு மாறுதல், தங்கை-தம்பி பிறப்பு, பெற்றோர் விவாகரத்து எனப் பல்வேறு. குழந்தைகளிடம் அதிக கோபம், வெறுப்பு, அதிக அடம்பிடிப்பது என்பவற்றையும் குழந்தை உளவியலில் புரிந்து கொள்ள இடமுண்டு. இவை ஏன் நேர்கிறது, எதனால் (அது உணவினாலேயா, நண்பர்களா, வீட்டு நிலைமையா, வளர்ப்பு முறைகளினாலா, பள்ளியிலா) என்று காரணிகளை ஆராய்ந்து கண்டுபிடித்து, வழி அமைக்கலாம். 

உணர்வுகள் Emotional 

உணர்வுகள் ஒன்றிணைந்தது. ஏனென்றால், இதில் தன் உணர்வுகளைப் புரிந்து, மற்றவரின் உணர்வுகளையும் அறிந்து, ஏன், எதற்காக இவ்வாறு உணர்கிறோம் என்றும், எப்படி இவற்றைக் கையாளுவது என்ற முழுப் புரிதலும் அடங்கி உள்ளது. இப்படி நாம் செயல்படுவது நம் பிறப்பிலிருந்து ஆரம்பமாகி, வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கிறது. இருந்தாலும் பல குழந்தைகள், விடலை பருவத்தினரும் தம் உணர்வுகளைக் கையாளுவதில், தெரிவிப்பதில் தடுமாற்றம் கொள்வதுண்டு. குழந்தை உளவியலில் இதற்குத் தீர்வு உண்டு. இப்படி நிகழ்வதற்கு முன்பே இப்படி ஆகாமல் இருக்க, வரும் முன் காப்போம், உணர்வுகளைக் கையாளுவதில் தேர்ச்சி பெறுவோம் என்பதற்குப் பல பாதைகள் உள்ளன. ஆராய்ச்சி பல முறை காட்டியிருக்கிறது, இந்த திறனை வலுப்படுத்தியதில் பிள்ளைகள் வளர்ச்சி, முன்னேற்றம் பல மடங்கு அதிகரித்து என்று.

சமூக சந்திப்புகள் Socialisation

உணர்வு வளர்ச்சியின் ஒரு பங்கு சமூக சந்திப்புகளில் அடங்கி உள்ளன. எப்படி என்றால், நம் உணர்வுகள் நாம் தன்னுடனோ, மற்றவர்களுடனோ சந்திக்கையில் / உறவாடுகையில் ஏற்படுவது. அப்படி என்றால் நம்மைப் பற்றி, நம் கோட்பாடுகளைப் பற்றி, அவற்றை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதும், புறக்கணிப்பதும் அதை நாம் சந்திக்கும் விதங்களும் நம்முடைய உணர்வுகளால் வெளிப்படுத்தப் படுகிறது. அதனால் தான் உணர்வுகளும் சமுக திறனும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.

பிள்ளைகளின் உறவுமுறை, வளர்ப்பு, ஆரம்பக்கால அனுபவங்கள், சுற்றம் சூழல் எல்லாம் இந்த இரு திறனையும் உருவாக்கும். தன்னையும், மற்றவர்களையும் நம்புவது, நண்பர்களை, பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன், மரியாதை செலுத்துவது, எல்லாம் இந்த இரு திறன்களின் வெளிப்பாடாகும்.

இதன் அடிக்கல்லை நாட்டுபவர்கள் பிள்ளைகள் யாருடன் முதலில் வளரத் தொடங்குகிறார்களோ அவர்கள் தான். மற்றவர்களுடன் பழகுவது, உரையாடல், இத்துடன் எவரிடமிருந்து அன்பு, ஆதரவு கிடைக்கிறது எனப் பலவை வாழ்வாதாரம் ஆகும். குழந்தை உளவியலில் அதனால் தான் திரும்பத் திரும்ப இந்த ஆரம்ப நிலைக்கு முக்கியத்துவம் தருவதுண்டு. இதிலிருந்து தான் தனக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வருகிறது.

மேற்சொன்ன ஆரம்பக்கால காரணிகளுக்கு நம்முடைய அன்றாட வாழ்வின் பலவற்றின் மேல் தாக்கம் இருக்கும். இவையிருந்து மற்ற பல்வேறு இணைப்புகள் தோன்றும். குறிப்பாக நட்புகள். இதை ஏற்படுத்திக் கொள்வதில், நாம் வெளி உலகில் உறவுகளை உருவாக்குவதில், எனப் பல்வேறு முறைகளில் நம்மைச் சுற்றி உள்ளோருடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுமுறைகள் அதிலிருந்து தொடங்கும்.

இவை நன்றாக அமைய மிக முக்கியமான அம்சம், காக்கும் மனப்பான்மை வளர்த்துக் கொள்வது. மற்றவர் பேசும் பொது சொல்வதை முடிக்கும் வரை காத்திருந்து பொறுமையுடன் கேட்டுக் கொள்வது,  விட்டுக் கொடுத்தல், இவை இருந்தால் அவர்கள் “எமோஷனல் இன்ட்டலிஜென்ஸ்” (Emotional Intelligence) உள்ளவராகக் கருதப்படுவார்கள்.

விளையாட்டு, மிகவும் முக்கியமான இடம். இங்கு வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து வாழ கற்றுக் கொள்ளும், தனக்கென்று உறவுகளை (நண்பர்கள்) தேர்ந்தெடுக்கும் மைதானமாகும். வளரும் குழந்தைகளுக்கு இங்கிருந்து நுணுக்கமான ஒத்துழைப்பு, புரிதல், சமத்துவம் எல்லாம் கற்கும், இவற்றை மேலும் வலுப்படுத்தும் இடமாகும். இவற்றைச் சரியாகச் செயல்படுத்தப் பிள்ளைகளுக்குத் தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உள்ளுணர்வு இருந்தால்தான் முடியும்.

அப்படி இல்லை என்றால் அது அந்த வயதினரின் குறைபாட்டை நன்றாகக் காட்டி விடும். எதற்காக வெட்கப் படுகிறார்கள், இல்லை தனிமையில் இருக்கிறார்கள், இல்லை அவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறார்கள் எனக் குழந்தை உளவியல் மூலம் ஆராய்ந்து பார்த்துத் தெளிவு பெறலாம்.

குழந்தை, விடலை பருவத்தினர், பெரியவர்களிடமும் முக்கியமான மூன்று தேவை: மற்றவர்களைப் பார்த்துக் கொள்ளுதல் (caring), உதவி செய்வது, பகிர்ந்து கொள்வது. ஒன்று இல்லாவிட்டால் கூட அதைச் சரிசெய்வது அவசியமாகும்.

வரும் முன் காப்போம்! Prevention is the key

குடும்பத்தினர், பள்ளிக்கூடம், சம வயதுப் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் வளர்ச்சியில் பங்குண்டு. இவர்களின் உறவுகளால் பல மடங்கு பயனும், இவை இல்லாமல் பலவகையான சரிவுகளையும் சந்திக்க நேரிடலாம். அதற்காகத்தான் இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளப் பல வழிகளை மேற்கொண்டால் நல்லது. இது போன்ற கட்டுரைகள், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான பயனுள்ள பேச்சு, வொர்க்‌ஷாப், வலைப்பூ எதுவும் உதவலாம்.

இப்படிச் செய்யும் போது நாம் இருக்கும் இடத்தின் கலாச்சாரத்திற்குப் பொருத்தமானவையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் நம் சிந்தனை அதில் பிரதிபலிப்பதால் சொல்லும் செய்தியைப் புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் சுலபமாகும்.

அதே போல் சொல்பவர்கள் கேட்பவரின் சமூக அந்தஸ்தையும், கட்டாயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு கருத்துக்களைப் பகிர்வது முக்கியம். நம் சமுதாயத்தில் வெவ்வேறு குழுமத்தினரின் சிந்தனை, வழிமுறைகள் பழக்க வழக்கங்களில் பல வித்தியாசங்கள் இருப்பதால், அதுவும் இவை வெளிநாட்டிலிருந்து மிகவும் மாறுபட்டதால், அவற்றை மனதில் வைத்துக் கருத்தைத் தெரிவிப்பது நல்லது.

இங்கு எடுத்துச் சொல்வதும் ‘வரும் முன் காப்போம்’ என்பதற்குள் அடங்குவதால் வரும் வாரங்களில் இதைப் பற்றி மேலும் பேசலாம். வரும் முன் காப்போம் மூலமாகப் பலவிதமான, பலவகையான காயப்படுத்தும் ரிஸ்க் அதனால் நேரும் வலிமையற்ற நிலைகளை, குறைகளை இடையூறுகளை அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரிசெய்ய வழிகளை அமைக்கலாம். உன்னிப்பாக எவையெல்லாம் நம்மைத் திடமாக்குகிறது என்பதையும் பார்த்து வருவோம். 

மனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com