மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டம், மாலின் கிராமத்தில் கடந்த 30ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 6 பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
இதையடுத்து, இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 ஆண்கள், 65 பெண்கள் மற்றும் 18 சிறுவர்கள் அடங்குவர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையில், மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த துர்நாற்றம் காரணமாக பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், அந்தக் கிராமத்தை சுத்தப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இடிபாடுகள் இன்னும் 2 நாள்களில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மாலின் கிராமத்தில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, கிராம மக்களை பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையக்கோரி மாவட்ட நிர்வாகம் துண்டுபிரசுரங்களை விநியோகித்துள்ளது.