காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்கள் மீண்டும் அவரவர் வீடு திரும்புவதற்கு அரசு எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வேதனை தெரிவித்தார்.
ஜம்முவில் உள்ள பட்டா போரியில் நடைபெற்ற அகில இந்திய இளைஞர் காஷ்மீரி சமாஜ் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்களை யாரும் வலுக்கட்டாயமாக அழைத்து வர முடியாது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்க முடியும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் பண்டிட் குடும்பங்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறினர். அவற்றில் 50 முதல் 100 குடும்பங்கள் மட்டுமே காஷ்மீர் திரும்பியுள்ளனர்.
காஷ்மீர் பண்டிட்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமை அடையவில்லை.
அவர்கள் காஷ்மீர் திரும்ப விரும்பினால் அதை முழு மனதுடன் வரவேற்கிறேன். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். காஷ்மீரில் இருந்து, பண்டிட் குடும்பங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது.
எனினும், அவர்களை யாரும் வலுக்கட்டாயமாக காஷ்மீருக்கு அழைத்து வர முடியாது. ஆனால் பண்டிட்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று ஒமர் அப்துல்லா கூறினார்.