மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியவரும், ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவருமான சஜித்தை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பிதான்நகர் காவல்துறை ஆணையர் குமார் கூறியதாவது:
24 பர்கானாஸ் மாவட்டத்தில் விமான நிலையப் பகுதியில் ஷேக் ரகமதுல்லா (40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர்தான் பர்த்வான் குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய சஜித் என்பது தெரியவந்தது.
வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராவார். மேலும் அவர் மஜ்லிஸ்-இ-சுரா என்ற அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தில் சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பின்னர் மேற்கு வங்க மாநிலம், முர்ஷீதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரில் ஒரு மதரஸா அருகே வசித்துள்ளார்.
பர்த்வான் குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அறிவித்திருந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருவதால் அவர்களிடம் சஜித் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று ஆணையர் குமார் தெரிவித்தார்.
ஜியா-உல்-ஹக்குக்கு காவல்: இதற்கிடையே, கொல்கத்தாவில் ஒரு மசூதி அருகே தேசியப் புலனாய்வு அமைப்பினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜியா-உல்- ஹக்கை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ.க்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.